Tuesday 13 October 2015

அறிவாளரோடு உறவாடும் மடல்
பேரன்புடையீர் வணக்கம். வாழ்த்துக்கள். நிறைவு தரும் நிகழ்வு மணி முடியில் முத்தொன்றைப் பதித்தது போல் நல்லதொரு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
நகரத்துப் பெண்கள் சிற்றூர் (கிராமத்து) பெண்களின் பார்வை என்ற தலைப்பில் பயனுள்ள செய்திகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
விரிந்த பூமலர் போன்ற முகத்தோடு மணம் கமழும் மனதின் கருத்தோடு மகளிர் கூட்டம் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் அரங்கம் நிரம்பி வழிந்தது. பார்ப்பவர் மனதை பரவசப்படுத்தி பற்றிப் படர்ந்த கலித்தொகைக் காட்சிகளைப் போல மனம் களிப்புற்றும் மகிழ்ந்திருக்கும்.
படிப்படியாய், பகுதியாய் கேள்விகள் கேட்டு எழிலோடு நிகழ்வை ஒளிர வைத்த தங்களுக்கும் திரு.கோபி அவர்களுக்கும் மனமுவந்த பாராட்டுக்கள்.
மதுவில் தொடங்கி பெற்ற மக்களுக்கு என்ன பெயர் வைப்போம் என்பது வரை ஆழமான உணர்வுகளை பெண்கள் அள்ளி நிறைத்தார்கள்.
பண்பாடு சார்ந்த சிற்றூரும், பற்பல உணர்வுகளில் நகரமும் இருப்பதை பாருக்கு உணர்த்தினார்கள். ஆயினும் உடைகளில் சில உணர்வுகளில் இரு பகுதியினரும் இணைந்தே பயணித்தார்கள்.
இருளில் இருந்து இயக்கும் இயக்குநரும், ஒளியில் நிகழ்ச்சியை உலாவ அழைத்துச் செல்லும் ஒருங்கிணைப்பாளரும் கொண்ட ஒருங்கிணைந்த உணர்வுகள், கருத்துகள் சொற்கள் ஆகியவற்றை பங்கெடுப்பாளர்கள் உணர்ந்து கொண்டால் தமிழ் நிலம் மேலும் மேலும் பெருமை மிகு நிலைபெறும். அதை இளம்பெண்கள் இயன்ற வரை புரிந்தே வெளிப்படுத்தினார்கள்.
இன்றைய பெண்களில் எல்லாவளச் சிந்தனை ஆக்கத்திற்கும் ஆக்கத்திறன் முன்னேற்றத்திற்கும் அடித்தளம் அமைத்தவர், உழைத்தவர் திட்டமிட்டு போராடியவர் தந்தை பெரியார் என்பதை ஓரிடத்திலாவது ஒருமுறையாவது ஒலிந்திருந்தால் பெண்ணினம் மேலும் மேலும் மிகுந்த நிலைகாண உதவியிருக்கும்.
ஏöனினில் தமிழ் ஆய்வு, கருத்து ஆய்வு அதில் சாதிய இனக் கொடுமை. அதில் பெண்ணிய ஒடுக்குதல் ஆகியவற்றை அறவே நீக்க ஆர்த்தெழுந்து நின்றவர் அவர்தான். அவரைச் சொல்லாமலே, எண்ணிப்பார்க்காமலே எல்லாம் பேசுகிறார்கள் எல்லோரும் பேசுகிறார்கள்.
தீ என்பது இங்கு எல்லா இடத்திலும் இருப்பதுதான் அதுபோல செய்தி என்பதும் அதுபோலத்தான். அது எல்லார் உள்ளத்தையும் சூடாக்காமல் அப்படித்தான் பெரியார் தந்ததெல்லாம் ஏதோ ஒருவடிவத்தில் குறையாமல் சுவை குன்றாமல் நிறைந்திருக்கும்.
இந்த புதுமை, புரட்சி என்பதை பேரறிஞர் அண்ணா அவர்கள் பெருமளவு விளக்கம் தந்து வெளிச்ச மேற்றினார். மழையாகப் பெய்து மலையருவியாய் ஒடிவரும் தண்ணீர் வெள்ளமாக ஆற்றில் ஓடுகிறது. ஓடுகின்ற ஆற்று வெள்ளம் ஓரிடத்தில் பாறையின் பிளவுகளுக்குள் மறைந்து விடுகிறது. ஆறும் நீரும் காணாமல் போய் விடுகிறது. ஆற்றை காணாமே என்று அலை மோதுகின்ற போது வேறொரு இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு வெளிவந்து ஆறாக பெருக்கெடுக்கும். அதுபோலத்தான், புரட்சியும் புதுமையும் பொங்கிவரும் என்றார் அறிஞர் அண்ணா அவர்கள்.
அதுபோலத்தான் பெரியாரின் கருத்துக்களும் போதனைகளும் வெளிப்பாடுகளும் போராட்டங்களின் முடிவுகளை இன்று பெருமளவு பேசப்படவில்லையென்றாலும் மறைத்திட முயன்றாலும் மனிதர்களின் மரபு வழித் தாக்கத்தால் அதாவது பரப்புரை பேச்சுக்கள் வழியாக அடுத்தடுத்த தலைமுறைக்கு வந்து சேரும்.
இந்தக் குழந்தை பலவற்றைப் புரிந்து கொண்டு வளர்வதற்கு காரணம் மரபு வழி மூளையாலும், மொழியின் வழியாக ஒன்றைச் சொன்னால் அதை ஒட்டிய சொற்களை தாமாகவே பற்றிக் கொள்ளும்.
இன்றைய எல்லாவகை உரிமை உணர்வுகளுக்கும் இனிய மொழி சார்ந்த இயங்கும் நிலைகளுக்கும் தந்தை பெரியாரும், அவரைப் முற்றாகப் புரிந்து கொண்ட முதல் மாணவன் பேரறிஞர் அண்ணாவும், அவரது தம்பிகளும் பெரியாரின் பற்றாளர்களுமே காரணம் என்பதை பெருகி வரும் பெண்ணினம் புரிந்து நடந்தால் இயற்கையின் இயல் அறிந்து பயணித்தால் ஏற்றமிகு நிலையை பெண்ணினம் எய்தும்.
திராவிட இயக்கத்தின் கருத்துக்கள் அதன் மொழி ஆளுமை எல்லா இடங்களிலும் பரவி வாழ்கிறது என்பதை தமிழர்கள் மறந்திருந்த நேரத்தில் நீயா? நானா? கிராமத்து - நகரத்து பார்வை வழியாக பாருக்கு உணர்த்தியதை பாராட்டி மகிழ்கிறேன்.
நூதனாகவும், மிக நுட்பமாகவும் நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் தங்கள் இருவரின் திறன் மேலும் மேலும் சிறந்தோங்கி வளம்பெற, நிலைபெற வாழ்த்துகிறேன்.
அறிவாளரோடு உறவாடும் மடல்
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம். வாழ்த்துக்கள் பெயர்களைப் பற்றிய மனப்பதிவுகளை காட்சிகளாகக் காட்டும் நிகழ்வொன்றை காட்டிக் களிப்படைய வைத்திருக்கிறீர்கள்.
பலரும் தங்கள் இயல்புக்கேற்றவாறு பெயர் வைத்ததை வெளிப்படுத்தினார்கள். பெயர்களின் பொருள் பற்றியோ அதன் செழுமை பற்றியோ கிஞ்சிற்றும் கவலை பெரிதும் இல்லாமல் தங்களைக் காட்டிக் கொண்டார்கள். பெரும்பாலோர் இலக்கிய அளவிலும், ஸ்டைலாகவும் பெயர் வைப்பதாகக் கூறினார்கள்.
இந்தச் சுருக்கம், ஸ்டைல் என்பது நல்ல தமிழ்ப் பெயர்களில் ஒளிமுகம் காட்டி நிற்கிறது என்பதை உணராமலேயே பேசினார்கள். இந்த ஸ்டைல் என்பது தங்களை பலர் பார்க்க வேண்டும், ஈர்க்க வேண்டும் என்ற ஆசையில் சொன்னார்கள்.
உடல் மூட உருவான ஆடையைச் சுருக்கி ஸ்டைலாக் காட்சி தருவதால் ஏற்படும் அவலங்களும் ஆபத்துகளும் நாளும் நாளும் அரங்கேறுவதைக் காண முடிகிறது.
இந்த ஆடைக் குறைப்பு பெயர்ச்சுருக்கம் என்பது இந்த நடிகைகளிடம் இருந்தே தொடங்கக் காணலாம். நடிகை என்பதற்கு காமசூத்ரா வாத்சாயானா தரும் பொருள் வேறு அதைப் புரிந்து கொள்ளாமல் தமிழ் மக்களும் நடிகைகளைப் பின்பற்றி ஆடையிலும் பெயரிலும் ஆர்வம் கொள்ள அணி வகுத்து நிற்கிறார்கள்.
எழில், அழகு, ஸ்டைல், சுருக்கம் கொண்ட தமிழ்ப் பெயர்கள் ஆயிரஆயிரமாக அலங்கரித்து அணிவகுத்து நிற்கிறது. அதைப் புரிந்து கொள்ளாமல் அர்த்தம் இல்லாத அன்னியப் பெயர்களில் மயங்குவது சரியல்ல.
திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும் தோன்றியதால் துலங்கிய மொழிகள் ஆயிரக்கணக்கில் அழகூட்டிக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பெயர் பற்றிய வரலாற்றுப் பின்னணி சுவை கொண்டதாகும். சங்க காலத் தமிழர்கள் ஆதன், பூதன், மூலன், பேயன், கபிலன், மருதன், வர்ணன், நன்னன். நக்கீரன், பொன்முடி, பாடினி, வெண்ணி, செண்ணி, அய்யை, வைகை, மாதவி, மேகலை, கிள்ளி, வளவன், மாறன், நம்பி, செம்பியன், சேந்தன், அமுதன், கண்ணன், முருகு, நகை, முகை, வாசுகி, வானதி, மதி, அதியமான் மலையமான், திருமகள், மலைமகள், கலைமகள், பாரி, காரி, பேகன், இனியன், இறையன், தென்னன், மாறன் போன்ற பெயர்களை சூட்டி மகிழ்ந்து வாழ்ந்தார்கள்.
சங்ககாலத்தில் அகம்புறம் என்று வாழ்ந்த தமிழன் அதன்பின் இகம், பரம், சுகம் தேடும் சோம்பேறியாய் மாறி தமிழுக்குள் இல்லாத, தமிழ் ஏற்காத மதவாதிகளின் மயக்கு மொழிக் கருத்துகளுக்கு மனம் கொடுத்து அனைவருக்கும் அடங்கி, அறிவிழந்து, ஆய்விழந்து, அடிமையான நாட்களில் பொருளற்ற சொற்களின் பெயர்களை சூடிக் கொண்டார்கள்.
சாமி எனும் சொல்லோடு நாதன், நாயகன், பகவன், பகவதி, தலைமுடி (கேசவன்) , பாம்பு (சேஷன்) மூர்த்தி(முகம்) ஆகிய சொற்களை வெட்டியோ ஒட்டியோ தங்கள் பெயர் அடையாளங்களை அமைத்துக் கொண்டார்கள்.
பின்னர் திராவிட இயக்கம் முகிழ்த்த காலத்தில் அதில் பெரியார் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நாட்களில் இந்தப் பெயர் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு, திராவிடப் பிள்ளைகளுக்கு மரியாதைக்குரிய பெயர்களை சூட்டத் தொடங்கினார்.
இங்குள்ள தமிழர்களின் பெயர்களை சாதியவாதிகள், சனாதனிகள் எப்படி அழைக்கிறார்கள் என்பதறிந்தார் பெரியார்.
மாடசாமியின் பெயரை டேய் மாடா என்றும் குப்புசாமியின் பெயரை டேய் குப்பா என்றும் இருளப்பசாமியின் பெயரை டேய் இருளா என்றும் வேடசாமியின் பெயரை டேய் வேடா என்றும் வேலுச்சாமி, பாலுச்சாமி என்ற சொற்களிலுள்ள சாமியை தவிர்த்து மீதியை செல்லியே விளித்தார்கள் இந்த மேட்டுக் குடியினர்.
இதற்கு பெரியார் ஒரு தீர்வு கண்டார். தமிழர் கூட்டத்தின் முன் நின்று உங்கள் பெயர்களை அப்பாசாமி, அய்யாசாமி, துரைசாமி, அண்ணாசாமி, அப்பாத்துரை, துரைக்கண்ணு, கண்ணுதுரை என்று வையுங்கள் என்று சொன்னதோடு மாஸ்கோ, ரஷ்யா, மாஸ்கோமணி, லெனின் என்றெல்லாம் பெயர் சூட்டினார். பாதிப் பெயரை அழைத்தாலும் பெருமை மிகுந்ததாகவே இருக்கும். பின்னர் சூரியநாராயணசாஸ்திரியின் பெயரை தூயதமிழில் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டபிறகு திராவிட இயக்கத்தில் அண்ணாவின் தலைமையில் இயங்கிய இயக்கத்தினர் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டனர்.
பின்னர் அண்ணாவின் தம்பிகளும் அண்ணாவின் தமிழ்மீது தாக்கம் கொண்டோரும் எண்ணற்ற இனிய தமிழ்ப் பெயர்களை தாங்கி தமிழ்ப்பற்றையும் தன்மான உணர்வையும் தாங்கி நிற்கிறார்கள்.
நடுவராக வந்த நால்வரில் ஆறுமுகத் தமிழனும், எழுத்தாளர் இமயமும் இனிய செய்திகளை கருத்துகளை எடுத்து வைத்து இனிமை சேர்த்தார்கள். அபிலாஷ் தெளிவில்லாமல் குழம்பினார். ஸ்ரீதர் சமூக அக்கறையின்றி தன் நிலையைத் தெரிவித்தார். மற்றும் பல பங்கேற்பாளர்களும், பொழைப்பு மனம் புரியாத உணர்வு, பொறுப்பு குறைவான தன்மையோடு தங்களை வெளிப்படுதினார்கள். நீயா? நானா? வில் பங்கெடுத்தப்  பின்னராவது இந்த, இனம், மொழி, பண்பாடு, இயற்கை, அறிவியல் செய்திகளோடு தங்களை இணைத்துக் கொண்டு இயங்கத் தொடங்கினால் இனிவரும் தமிழகம் உலகில் உச்ச நிலை அடையும்.

No comments:

Post a Comment