Tuesday 27 October 2015

அறிவாளரோடு உறவாடும் மடல்
இரண்டு தலைமுறைப் பெண்தான் இலக்கியம் தொடர்பான திரைப்பாடல்களின் மீது கொண்ட ரசனை பற்றிய நிகழ்வில் மனம் நீந்தி மகிழ்கிறது.
முந்தைய தலைமுறைப் பெண்களின் வெளிப்பாடுகள் பாராட்டத் தக்கதாக வேண்டும் இருப்பினும் இன்னும் நினைவுகளை தித்திக்கும் பாடல்களை நிறைய நிறைய சொல்லியிருக்கலாம்.
ஜி.இராமநாதன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, வேதா, கே.வி.மகாதேவன், டி.ஜி. லிங்கப்பா, மஞ்சுபாப்பா, சுதன்சமை குமார், ஆதிநாராயணராவ், இராமாராவ், .. இராசாசி, இராமசந்திரர் போன்ற இசை வல்லுனர்களின் இசைக்கும் பாடல்களை பாடிக் கூடக் காட்டியிருக்கலாம்.
இலக்கியம், கலையும், இனிமையும் பொருட் செழுமையும் கொண்ட தமிழ்மகள் பரிசு பெற்ற பெருமாட்டி பாராட்டுதலுக்குரியவர், மொத்தப் பரிசையும் இசைவடிவான அந்த இனியவருக்கே வழங்கிய தாங்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
அறிவாளரோடு உறவாடும் மடல்
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம். வாழ்த்துக்கள். கடவுள் கோட்பாட்டில் டாக்டர்ஸ் - டாக்டர்ஸ் எனும் பயனுடைய நிகழ்வொன்றைத் தந்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி.
நிகழ்ச்சி தொடங்கிய முக்கால்மணி நேரத்தில் இருபகுதி மருத்துவர்களும் வழங்கிய செய்திகளை உற்று நோக்கினால் தாங்கள் முன்னர் நடத்திய கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் உற்றவர்கள் எனும் நிகழ்வே நினைவுக்கு வருகிறது.
அதில் கடவுள் கோட்பாட்டைப் பற்றி அய்ன்ஸ்டீன் கருத்து எதுவும் முன்வைக்கவில்லை என்று இந்து அரவிந்தன் சொன்னதை திரு. டாக்டர் மோகனும், அபிலாசும் மருத்தார்கள். அதில் நானும் சிலவற்றைச் சொல்லியிருந்தேன். பின் தங்களுக்கு கடிதம் ஒன்றையும் வரைந்திருந்தேன்.
இந்த பரிணாமம் என்பதே உண்மையாகும். படைப்பு என்பது முழுமை ஒன்றை சொல்வதாகும். படிநிலையன்றி (பரிணாமம்) இயற்கையில் ஏதும் கிடையாது. முழுமை என்பதும் முற்றானது என்பதும் கூட இயற்கையில் எங்கும் இல்லாதது.
கடவுள் கோட்பாட்டைச் சொன்னவர்கள் கற்பனைச் சிறகு கொண்டு பறந்தவர்கள். கனவுகள் உண்மையென்று நம்பியவர்கள். அந்தக் கனவுகளைப் பற்றிய உண்மையறியாமல் கண்மூடிக் கிடந்தவர்கள். எண்ணத்தில் தோன்றுவது ஏன் என்ற ஆய்வு நிலையில் அருகில் கூட நிற்காதவர்கள்.
மேற்கு உலகிலும் கிழக்கு உலகிலும் வெகு நாட்களுக்கு முன்னரே இந்தச் சிந்தனையில் ஈடுபாடு கொண்டோர் விவாதித்து வந்திருக்கிறார்கள். தொய்வற்றுத் தொடர்ந்திருக்கிறார்கள். அய்ரோப்பாவில் எண்ண முதல்வாதிகளும், பொருள் முதல்வாதிகளும் நீண்ட போர் நடத்திக் கொண்டிருந்தார்கள். இப்போதும் இங்கே நடக்கும் உலகில் நீண்ட நாள் போராட்டமான ஆரிய-திராவிடப் போர் என்பது கூட அது தொடர்பானதுதான்.
அறிவில் ஆய்வில் முடிவு தெரியாதவை கடவுள் என்கிறார் ஒரு மருத்துவர். இது இங்குள்ள சாதரண, சாமான்ய, சராசரி மனிதர்களுக்குச் சரிதான். அறிவு, ஆய்வுப் புலம் தந்த மருத்துவம் பயின்ற இவர்களுக்கு இது தகுமா?
எதிலும் முழுமையில்லாத நிலைக்காக இனிய வள்ளுவன் ஒரு குறளைத் தந்தான்.
அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் செயிளை மாட்டு.
என்று எழுதி வைத்தான். ஒன்றை அறிகின்ற போது மற்றொன்று தொற்றி நிற்கும் தொடர்ந்து நடந்து செல்லும் இது தான் உண்மையாகும்.
தமிழர்கள் கடிதம் எழுதும்போது ஒரு செய்தியை சொல்லி முடித்ததும் நிற்க. என்று எழுதுவார்கள். அது நில், கவனி, செல் எனும் போக்குவரத்து விதியோடு செய்திகளை நோக்கச் சொல்லும் முறையாகும்.
டாக்டர் கோவூர் அவர்கள், ஆய்வுகளை உற்று நோக்கினால் ஒளிவிடும் உண்மைப் பொருள் விளங்கும். எண்ணம் உண்மையென்று எண்ணுபவர்கள் கற்பனைகளை முழுதெனக் கருதுவார்கள். கனவுகள் தெய்வீகம் என்று கண்மூடிப் பின்பற்றுபவர்களிடம் என்ன சொன்னாலும் எடுத்துக் காட்டுகள் எண்ணற்றவற்றை வெளிச்சமிட்டு வெளிப்படுத்தினாலும் ஏன் அவர்களுக்கே சரியென்று தோன்றினாலும் கூட கேட்டுக் கொள்ள மாட்டார்கள். தங்கள் நிலையிலிருந்து இடமாற மாட்டாரகள். இதற்குக் காரணம் மூளையின் நரம்புகளில் தோன்றிய நலிவுகள்தான். அதை நரம்பு நோய் என்கிறார். இதற்கு நிறைய விளக்கம் கொடுக்கிறார். இதைத்தான் நமது நல்லறிவாளர் வள்ளுவன், தனது வாய்மைக் குறளில் எடுத்து வைத்தான்.
நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றும்தன்
சொந்த அறிவே மிகும்.
என்றான். அதாவது, மூளையில் படிந்திருக்கும் கருத்துக்கள்தான் எத்தனை படித்தாலும் எத்தனையோ எடுத்துச் சொன்னாலும் படிந்துபோன தன் அறிவே முன்நிற்கும் என்றான். ஆக, எத்தனை கற்றாலும், காட்சிகளைக் கண்டாலும், படிந்துபோன பண்புச் சிறப்போ, பாழ்நிலைகளோ முன்னிற்கும் என்றான் இனிய குறளாசான்.
தங்கள் எனக்களித்த முதல் நிகழ்ச்சியில் இதை வலியுறுத்திருக்கிறேன். அதற்குப் பாராட்டி பத்தாயிரம் ரூபாய் பரிசளித்தீர்கள். தந்தைப் பெரியார் ஒன்றைச் சொல்லிச் சென்றார். கல்வி கற்றால் முட்டாள்தனம் ஒழியுமென்று கருதினேன். ஆனால் கற்றவன் இரட்டை முட்டாளாக இருக்கிறான். அறிவியல் வளர்ந்தால் மூடநம்பிக்கை ஒழியும் என்று நினைந்தேன். ஆனால் இங்கே அதையும் மூடநம்பிக்கைக்குள் இணைத்து விட்டான்.
கலப்பு மணம் செய்தால் சாதி ஒழியும் என்று பேசினேன். ஆனால் கலப்பு மணம் செய்தவனெல்லாம் தனிச்சாதியாகி விடுகிறான். இந்த நாடு ஒரு வித்தியாசமான நாடு. உலகில் எங்குமில்லாத பிறவியில் பேதம் பார்க்கும் அதிலும் மேல், கீழ் என்று மனிதர்களை இழிவுபடுத்தும் முறை இங்கேதான் இருக்கிறது. அது ஏற்றுக் கொள்ளவும் பட்டிருக்கிறது என்று அறைந்தார் அந்த சமுதாய விஞ்ஞானி. பல்வேறு நிலைகளை நெஞ்சில் கொண்டு ஆராய்ந்தால் துக்கமும் வெட்கமும் தொண்டையை அடைத்துக் கொள்ளவே செய்யும்.

இந்த நிகழ்வில் கூட ஒரு சாராரின் நிலை கூட நெஞ்சை வருத்தவே செய்கிறது.

No comments:

Post a Comment