Thursday 30 June 2016

நாளும் மலர வேண்டும்
நலம் பெருக வேண்டும்
நாகரிகம் செழிக்க வேண்டும்
2011, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் அடுத்து வந்த ஊராட்சி மன்றத் தேர்தலிலும் அதற்கடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதன் பின் நடந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.கழகம் உரிய இடத்தை பெற இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதற்குக் காரணம் எதுவென பல்வேறு விவாதங்கள், விமர்சனங்கள் நடந்து வந்தன, நடந்து வருகின்றன.
தி.மு.வின் கொள்கை கோட்பாடுகளை விரும்பாதவர்கள் அந்த அறம் சார்ந்த அருமையான மாசற்ற கொள்கை மீது வெறுப்பும், பகைமையும் கொண்டவர்கள், நீதி, நேர்மை, நியாயம், நடுநிலைகளில் பாகுபாடு காட்டுவோர் மக்களிடம் சமத்துவ உணர்வு தழைத்திட விரும்பாதவர்கள் தி.மு.க.வில் கலகமூட்டியவர்கள் கலக மூட்டி முனைந்து செயல்படுவர்கள், கட்டுப்பாட்டை மீறியதால் கட்சியில் இருந்து கழற்றி விடப்பட்டவர்கள் கலைஞரின் நிரந்தர அரசியல் புகழ்கான சகிப்புத்தன்மை இல்லாது காழ்ப்புணர்ச்சிக் கொண்டவர்கள், சாதிமதச் சண்டியர்கள் இலஞ்ச இலாவண்யத்தில் நாளும் குளிக்கும் நச்சுமன அரசு அதிகாரிகள், வணிக நிலையில் வாய்மையில் வறுமையானவர்கள் ஆகியோரின் முறையற்ற செயல்வடிவம்தான் தி.மு.கவின் தோல்விக்குக் காரணமாக ஒரு நீண்ட அணிவகுப்பைக் காட்டுகிறது.
இவையெல்லாம் உண்மையென்றாலும் இதையும் தாண்டி மக்களின் ஆதரவையும், வாக்குகளையும் மன்றங்களின் உள்ள இடங்கள் முழுமையும் பறிப்பதற்கு எந்தக் கொம்பனுக்கும் வக்கோ, வகையோ, வலிமையோ இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும்.
நல்ல மனமும் நடுநிலையும் நாகரிச் செழுமையும் கொண்ட நண்பர்கள் வட்டத்தில் நாளும் கலந்துரையாடுவது என்று வழக்கமா உள்ளவன் நான். அப்போது அந்த அருமைக் கலந்துரையாடலில் வெளிப்பட்டதைத் தொகுத்துத் தர முயல்கிறேன்.
பல்வேறு உணர்வுகள், கருத்துகளில் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் தமிழ், தமிழர் நலன் காணும் உணர்வுள்ளவர்கள் அவர்கள் என்பதால் முரண்பாடோ, முட்டல், மோதலோ இல்லாத வாதப் பிரதிவாதங்கள் நடந்த வண்ணம் இருக்கும். மாலை வேளைச் சூழலில் மனதிற்கும் மகிழ்வூட்டும் இந்தவாத நிகழ்வுகள் நினைக்கின்றபோதெல்லாம் மகிழ வைக்கும்.
நாளிதழ்கள், திங்கள் இதழ்கள், தொலைக்காட்சி, கைப்பேசிச் செய்திகளை முன்னிருத்தி வாதிடும்போது பல கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். அப்போது கடந்த தேர்தல்களின் நிலைகளை முன் வைத்ததை நினைத்தும் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் எல்லா நிலைகளிலும் எல்லாத் துறைகளிலும் எல்லா மக்களிடமும் மாற்றத்தை வளர்ச்சியை ஏற்படுத்திய குறிப்பாக தி.மு.க. ஆட்சியை இறக்கியதற்கான காரணங்களைச் சொன்னார்கள்.
1989க்குப் பிறகு அமைப்புகளின் உணர்வுத் தூய்மை சிறிது சிறிதாக வலிமை குறைந்து வந்ததாக ஒருவர் வருந்தினார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக அதாவது ஈழத்தில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஏராளமான தமிழர்கள் இழிமுறைகளால் அழிக்கப்பட்ட நாளிலிருந்து தி.மு.கவிற்கு எதிரணிப் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுத்து முறியடிக்கும் ஆற்றலைத் திறத்தை தி.மு.க. வெளிப்படுத்தவில்லை என்றார் இன்னொருவர்.
மத்திய அரசில் இந்தியை ஆதரிக்கும், வடநாட்டாரை போற்றிப் பாதுகாக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க. தன் தனித்தன்மையை விட்டு நலிந்து வந்தது என்றார் ஒரு தோழர்.
எம்.ஜி.ஆரை தி.மு.க.வில் இணைத்து வளர்த்ததும் தவறு அவரைக் கட்சியிலிருந்து வெளியேறும் நிலைமை உருவாக்கியதும் தவறு என்றார் ஒரு நண்பர்.
தொலைக்காட்சி விவாதங்கள் பேட்டிகளில் நுட்பமாக தகவல் செய்திகள் கருத்துக்களை வெளிப்படுத்தியும் மறுக்கவியலாத நிலையை ஏற்படுத்தும் விற்பன்னர்கள் அருகி விட்டார்கள் என்றார் இன்னொரு தோழர்.
ஏற்கனவே செழுமை கொண்டிருந்த தி.மு.க.வின் பிரச்சார உத்திகள் செயல்முறைகள், கட்சிப் பற்று, பாசம், தன்னலமற்ற இயக்க உணர்வு, பஞ்சப் பிரதேச மனிதர்களைப் போல மெலிந்து போய் விட்டது என்றார் மற்றொரு தோழர்.
பொதுக் கூட்டங்கள், சிறப்புக் கூட்டங்கள், தொழிற்சாலைகள், கல்லூரி வாசல்களில் நடக்கின்ற வாயில் கூட்டங்கள், கிளைகள் தோறும் மினிட் புத்தகம் போட்டு நடக்கும் மாதாந்திரக் கூட்டங்கள், தெருமுனை திண்ணைப் பிரச்சாரங்கள், அணிவகுக்கும் மாவட்ட மாநாடுகள், அய்ந்தாண்டுக்கொருமுறை நடக்கும் மாநில மாநாடுகள் தேவைப்பட்ட காலத்தில் நடக்கின்ற சிறப்பு மாநாடுகள் சுருங்கிப் போய் விட்டதாக சோகத்தோடு சொன்னார் இன்னொருவர்.
தொடர்ந்து போராட்டங்களை அறிவித்து சிறை செல்லும் தியாக உணர்வை ஆட்சி என்ற திரை மறைத்து விட்டதாகவும் ஆட்சியைக் கண்டபின்னும் மத்திய அரசை எதிர்த்து எழுச்சி நாள் எனும் போராட்டத்தை அறிவித்த அண்ணாவின் நிலை அனுசரிக்கப் படவில்லையென்றார் மற்றொருவர்.
ஏடுகள், இதழ்கள், நூல்கள் என ஏராளமான செய்திகள் கருத்துகள் என்று பொங்கிப் பெருகிவந்த நிலைகள் அனைத்தும் பொய்த்துப் போன பருவ மழை போல் மறைந்து விட்டது என்றார் இன்னொருவர்.
கலைக்குழுக்கள், தெருமுனைப் பாடகர்களின் பாட்டுமழை, வீதி நாடகங்கள், ஆர்வமுள்ள தோழர்களின் ஆங்காங்குத் தெருக்களில் நடத்துகின்ற நாடகக் குழுக்கள் ஆகிய அனைத்தும் கண்ணுக்குக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை என்றார் இனியவர் ஒருவர்.
அண்ணாவால் பொங்கிப் பெருகிவந்த மாணவர் பட்டாளத்தின் ஆற்றலும், திறனும், ஆர்வமும், போர்க்குணமும் மங்கி மறைந்து விட்டதாக விழிகளில் கண்ணீர் சிந்த விக்கித்து சொன்னார் ஒரு  மாணவத் தோழர்.
ஈழப் பிரச்சனை, 2ஜி வழக்கு, கடந்தகால ஊழல் போன்ற பொய்க் குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வல்லமை தி.மு.கவில் வற்றிப் போய்விட்டதாக வருந்தினார் ஒருவர்.
கட்சித் தலைமையின் எண்ணங்கள் முடிவுகளில் கருத்துச் சொல்லும் சுதந்திரம் அறவே அருகிவிட்டது என்றார் இன்னொரு நண்பர்.
கட்சித் தலைமையின் குடும்பம் உறவுகளுக்குள் ஏற்பட்டுள்ள பிணக்குகள், மோதல்கள் கட்சிக்குக் காயத்தை ஏற்படுத்தி வந்தது என்றார் வேறொரு நண்பர்.
ஆட்சியிலும் கட்சியிலும் இரண்டு மூன்று அதிகார மய்யங்கள் இயங்கியது சரியல்லை என்றார் ஒரு தோழர்.
உழைப்புத் தியாகம் கட்சிப் பற்று, பாசம், கொள்கை உணர்வுகள் புறந்த தள்ளப்பட்டு பணத்தால் எல்லாம் நடக்கும் என்ற நிலை ஆட்சியினால் அதிகளவு நிலை கொண்டு விட்டதாகவும் அதற்கு தலைமையும் அதன் வழியே நடைபோடுவதாகவும் நடுங்கிய குரலில் சொன்னார் ஒரு தோழர்.
பொறுப்பாளர்கள் அனைவரும் ஏழைகளாக இருந்த நாட்களில் ஆயிரத்துக்கு மேல் நடந்த கூட்டங்கள், திருவிழாக்கால நிகழ்ச்சிகள் போல தேர்தல் காலத்தில் மட்டுமே அது மிகவும் குறைந்த அளவிலலேயே நடப்பதாக நாவசைத்தார் ஒரு நல்லவர்.
மாநிலம் தழுவிய ஆற்றல்மிக்க தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்கள் அய்நூறுக்கும் மேல் இருந்தும் ஒரு இருபது முப்பது பேச்சாளர்கள் அதுவும் கூட்டம் நடத்துபவர்களின் குரல் வளையை நெறிக்கும் பேச்சாளர்கள் அதுவும்கூட ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கூட்டணி வைத்துக் கொண்டு வாய்ப்புகளை பங்கிட்டு கொள்வதாக மருகினார் ஒரு தொண்டர்.
வாழ்க்கைச் செலவிற்கு வழிதெரியாத நாளில் கட்சி முன்னோடி என்பதற்குச் சான்றாக கடன் அல்லது நன்கொடை பெற்று ஏடுகள், இதழ்கள், நூல்கள் வெளியிடும் நிலை இருந்தது. ஆனால் இன்று மலையளவு பொருளும் பணமும் நிறைந்த நிலையில் அது போன்று நிகழாததற்கு காரணம் தெரியவில்லை என்றார் நெடுநாள் கழகத் தோழர் ஒருவர்.
தி.மு.கவற்கு எதிராக ஏராளமான தொலைக்காட்சிகள் திட்டமிட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற காலத்தில் தி.மு.க.விற்கான ஆதரவான தொலைக்காட்சிகள் தோன்றவில்லை தொடரவில்லை உண்மைகளை துலங்கச் செய்யவில்லை என்று துயறுற்றார் தோழர் ஒருவர்.
திராவிட இயக்கச் சிந்தனைகள் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு எதிராக தொடர்நிலைகளை தொக்கி நிற்கும் தொலைக்காட்சிகளுக்கு எதிராக இயங்க வேண்டிய தி.மு.கவின் ஓரிரு ஆதரவுத் தொலைக்காட்சிகளிலும்  திராவிட இயக்க சிந்தனைக்கு எதிரான காட்சிகளோடு இணைத்துக் கொள்கிறது என்றார் ஒரு பெரியார் பற்றாளர்.
நவீனத் தொழில் நுட்பக் கருவிகள் மின் அணுக் கருவிகளின் வழியே தலைவர் கலைஞரும் தளபதி ஸ்டாலினும் டுவிட்டர், முகநூல் ஆகியவற்றில் ஈடுபாடு காட்டினாலும் பரவலாக அது முளைக்கவில்லை வளரவில்லை முன்னெடுத்து சொல்லப்படவில்லை முழுமை பெறவில்லை என்றார் வலைத்தளத் தொடர்புள்ள ஒரு நண்பர்.
கருவறையிலிருந்து வெளிவந்த மழலையிலிருந்த கல்லறை நோக்கிச் செல்லும் முதியவர் வரைக்கும் திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனைகளை தந்தை பெரியாரின் உழைப்பை கொள்கையை பேரறிஞர் அண்ணாவினால் ஏற்பட்ட தமிழர்களின் ஆற்றல் திறம், அதனால் ஏற்பட்ட மாற்றங்களை கலைஞரின் ஆட்சிச் சாதனைகளை கார்டூன்களாக வண்ணக் காட்சிகளாக பல்வேறு வடிவங்களில் வகைப்படுத்தி வரிசைப்படுத்திக் காட்டாதது வரலாற்று குற்றம் என்றார் உலகறிந்த ஒருவர்.
எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பல்துறை அறிவாளர்கள் ஆற்றல் திறன்மிக்க படைப்பாளர்கள் கவிஞர்கள் கலைத்துறை விற்பன்னர்கள், காவியம் பாடும் புலவர் பெருமக்கள் உலக வரலாற்றை உற்று நோக்கி உண்மைகளை எடுத்துரைக்கும் அறநெறி சார்ந்த அருமையான மனிதர்களை உருவாக்கும் படைப்புலகமாக பல்கலைக்கழகமாக பல்துறை அறிவுப் பூங்காவாக மணம் வீசிய தி.மு.கவில் பிற கட்சிகளிலிருந்து  வந்தவர்களில் சிலர் அடாவடிகளாக அராஜகவாதிகளா சித்தரிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பும் பதவியும் தந்தது தவறு என்றும் பிற இடங்களில் இருந்து கூலிக்கு கூட்டி வந்து தேர்தல் காலங்களில் பேசவிட்டது சரிதானா என்றார் ஒருவர்.
தேசியக் கட்சிகளான காங்கிரசையும் பாரதீய ஜனதாவையும் தேசியத் தலைவர்களாகிய இந்திராகாந்தியையும் இரண்டு மூன்று தடவைகள் இக்கட்டான நிலையிலிருந்து காப்பாற்றி பொதுவாழ்வில் நிலைபெறச் செய்த கலைஞருக்கு ஏற்பட்ட நன்மை என்ன?அவருக்கு துன்பமும் கட்சியினருக்கு துயரமும் சூழந்தது. மேற்கண்ட கட்சிகளும் தலைவர்களும் தாமே என்றார் அரசியல் வரலாறு அறிந்த அறிஞர் ஒருவர்.
இடிப்பாரை இல்லா  ஏமரா  மன்னர்
கெடுப்பார் இலானும் கெடும்.
என்ற குறளின் வழியில் தி.மு.கவின் தலைமையே ஓர் அமைப்பை உருவாக்கி அதன் குறைகளை அன்புடனும் மென்மையுடன் எடுத்துக் காட்டுவது நல்லது என்றார் நடுநிலை உணர்வுள்ள ஒருவர்.
பல்வேறு பகைக்கூட்டம் பண்பற்ற பிரச்சாரங்கள் ஒட்டு மொத்த இந்திய ஆதிக்கவாதிகளின் பிரசார வடிவங்கள் மேட்டுக்குடி இராசதந்திரவாதிகளின் சதித்திட்டங்கள், முடிவுகள் வெறுப்புணர்ச்சி கொண்ட கட்சித் துரோகிகள், கலைஞரின் நீண்ட நெடிய கால ஆற்றல் திறத்தை நிலைகொண்ட புகழை தாங்க மாட்டாத தற்குறிகள், தன்னலக் காரர்கள், சாதிய சண்டியர்கள், சனாதனச் சண்டாளர்கள் ஆகிய அனைவரின் கூட்டு முயற்சி போன்ற வடிவங்களத் தாண்டி, தி.மு.க கற்கோட்டையாக நின்று நிலைப்பதற்கு கலைஞரின் ஆற்றலும் திறனும் அன்றாட நிகழ்வுகளும் அவரை மாசற்ற மனதோடு நேசிக்கும் நெஞ்சுரம் மிக்க தொண்டர்களுமே காரணம் என்றார் எப்போதாவது பேசுகின்ற ஒருவர்.
எந்தவோர் அமைப்பும், நாடும் ஒற்றைத் தனிமனிதரை முன்வைத்து அவரை மட்டுமே நம்பி நடைபோடுவது எப்போதும் நலம் பயக்காது. ஆற்றல் மிக்க தலைவரின் உணர்வுகளை உள்வாங்கி எல்லா இடங்களிலும் அவருடைய உயர்வுக்கான செயல்களை மட்டும் செய்து அணிவகுத்தால்தான் கட்சியும் நாடும், கற்கோட்டை போல் நெடுநாள் நிலை பெறும் என்றார் அனுபவ செழுமை கொண்ட இனியவர் ஒருவர்.
கொள்கைக் கருத்துக்களால் நடக்கும் பிரச்சாரம் மக்களின் மனதில் நிலைகொண்டிருக்கும் சம்பவங்களால் நடக்கும் பிரச்சாரம் மறந்து மறைந்துவிடும் என்ற பேராசிரியர் அன்பழகனின் கருத்து தி.மு.கவில் பின்பற்றப்பட வேண்டும் என்றார் நடைமுறையறிந்த ஒருவர்.
தலைமையை, முன்னோடிகளை போற்றுவது புகழ்வது சில நேரங்களில் அவசியம் என்றாலும் துதிபாடுவது அறவே கூடாது என்றார் நண்பர் ஒருவர். தி.மு.கவின் ஆட்சியினால் வாழ்வு, வள, ஏற்றம் என்பதை எல்லாத் தமிழர்களும் துய்த்து மகிழ்ந்தார்கள். இன்று வரைக்கும் நலிந்து, நசிந்து, சாக்காட்டில் சங்கமித்தவர்கள் இலட்சக்கணக்கான தி.மு.க. வின் இலட்சியத் தொண்டர்கள்தான் என்றார் தி.மு.கவைத் தெரிந்த நெஞ்சமுள்ள ஒருவர்.
கலைஞருக்குப்பின் தி.மு.க இருக்காது என்று ஒரு தடவை சொன்னார் பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்கள். இன்றைய நாளில் வலைத்தளங்களில் ஈடுபாடும் ஸ்டாலின் எளிமையும் உழைப்பும் கருத்தும் பேச்சில் முதிர்ச்சியும் இளைஞர்களின் வெளிப்பாடும் ஒரு நம்பிக்கையை உருவாக்கி உள்ளத்தில் ஊடுறுவி இருக்கிறது என்றார் உணர்வுகளை உற்று நோக்கும் ஒருவர்.
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல் .            
எனும் குறள் வழியில் தி.மு.கவை நெஞ்சில் வைக்க வேண்டிய மாணவர் உலகமும் மகளிரும் மற்ற மற்ற துறையினரும் பொதுமக்களும் தங்கள் மனதை இடமாற்றி வைத்தது கொடுமையென்றார் நாட்டின் நடப்பு தெரிந்த ஒருவர்.
தமிழ் தமிழர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் அதன் திராவிட இயக்க சிந்தனை கொள்கை போன்ற அடையாளங்களின் வெளிப்பாடு கொண்டோரைப் பாராட்டி, பரிசளித்து தன்வயப்படுத்த வேண்டிய தி.மு.க. பேரளவுக்கு செய்யவில்லையென்றார் ஆய்வுகள் அறிந்த ஒருவர்.
தூயநிலை சமைக்க எல்லா இடங்களிலும் இருக்கும் இலக்கியவாதிகளைத் திரட்டி இணைத்து காவிய உணர்வுச் சூழலை உருவாக்க கலைஞரால் தோற்றுவிக்கப்பட்ட தி.மு.க இலக்கிய அணிக்கு தன்னாட்சி உரிமை இல்லாமல் மாவட்ட செயலாளர்களின் பிடிக்குள் சிக்கியதால் அதன் இலக்கை எட்டமுடியவில்லை என்றார் இலக்கிய நயம் அறிந்த முனைவர் ஒருவர்.
வானம்பாடியாய், வண்ணப் பறவையாய், மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் மேற்கு திசையில் வானில் முகில் காட்டும் பேரழகுக் காட்சிபோல் பல்துறை அழகுகளோடு வலம் வந்த தி.மு.க, ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் ஒத்தையடிப் பாதையில் ஓடிக்கொண்டிருப்பதாகவும் அதன் இலக்கை எட்டமுடியாமல் இடையிடையே அதில் கூட ஓய்வு எடுப்பதாகவும் உருகினார் பழைய நிகழ்வுகளைப் பகன்ற பாவலர் ஒருவர்.
தன்னை ஒருவர் நாத்திகன் என்றும் ஒரு கம்யூனிஸ்ட் என்றும் தனக்கு சாதி, மத, மூடநம்பிக்கையில் இம்மியும் நம்பிக்கையோ ஈடுபாடோ இல்லையென்றும் பிரகடனப் படுத்திவரின் தலைமையில் இயங்கும் கட்சியில் அவரைப் பின்பற்றுமாறு எல்லாரையும் வலியுறுத்துவது நடைமுறை சாத்தியப்பாடு இல்லையென்றாலும் அந்தக் கட்சியின் முன்னோடிகள் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றுவோர்கள், அந்தத் தலைவரின் அடியொற்றி நடப்பதும் வாழ்க்கை முறையாக அமைத்துக் கொள்வதுதான் அறமாகும். ஆனால் தி.மு.கவில் இல்லையென்றார் வேதனையுடன் ஒருவர்.
ஏழைகளை ஏதும் இல்லாதவர்களை எழுச்சியுற வைத்து அவர்களின் ஈடுபாட்டோடு வளர்ந்து, வலிமையுற்று தி.மு.கவில் எல்லாப் பொறுப்புகளிலும் அந்த ஏழைகளுக்கு ஏதும் இல்லாதவர்களுக்கு இடமில்லாது எல்லாவற்றையும் கோமான்களும், கோடீஸ்வரர்களும் கைப்பற்றிக் கொள்ளும் நிலை காணப்படுகிறது என்றார் இன்னொருவர்.
ஊர், பேரூர், நகரம், ஒன்றியம், மாவட்டம் ஆகியவற்றின் உட்கிளைகள் எல்லா இடங்களிலும் செயல்படும் கிளைகள் அமைந்தால் அது அந்த கட்சியின் வெற்றிக்குத் துணை செய்யும். ஒருகாலத்தில் அது பெருமளவுக்கு இருந்தது இன்று இளைத்துக் கிடைக்கிறது. நகரம் ஒன்றியங்களில் மூன்றில் ஒரு பங்கு கூட கிளைகள் இல்லையென்றும், அதில் இருப்பதில் செயல்படும் கிளைகள் சிலதான் என்றும் வருந்தினார் ஒரு நண்பர்.
அடைமழையாய் அணிஅணியாய் அடர்ந்து வந்த தி.மு.க. கூட்டங்கள் அருகி விட்டது என்றும் பேசவரும் சொற்பொழிவாளர்களை பிழைப்புக்காக வந்த அகதிகளாக இரவலனாக மாவட்டச் செயலாளர்கள் பார்க்கிறார்கள் என்றும் சொன்னார் அனுபவப்பட்ட பேச்சாளர் ஒருவர்.
திரைப்படத் துறையில் நீடித்த நின்ற தி.மு.கவின் பேரரசு வீழ்ச்சியுற்றது வேதனைக்குரியது என்று சொல்லிவிட்டு சொன்னார், அது மக்களின் விழிப்புணர்வு விழியில் மண்விழக் காரணமானது என்றார் வரலாறு தெரிந்த இனிய தோழர் ஒருவர்.
உள்நோக்கம் உண்டா என்று உற்று உளவியல் பார்வையோடு தி.மு.கவின் பொறுப்பாளர்களை தேர்வு செய்து போற்றிப் புகழ்ந்திருந்தால் தி.மு.கவின் நலிவு வீழ்ச்சி என எதுவும் என்னென்றும் நிகழ வாய்ப்பிருக்காது என்றார் வாழ்வில் தூய்மையும், பொதுவாழ்வில் தேவையென அடிக்கடி வலியுறுத்தும் ஒருவர்.
நாளும் நாளும் பத்து இருபது பேர்களோடு பல்வேறு உணர்வுகொண்ட உள்ளங்களைப் பெற்றவர்கள், நாகரிகம் தெரிந்தவர்கள் என கடந்த முப்பத்தெட்டு ஆண்டுகளாக பல்வேறு இடங்களிலும் என் தொழிலகத்திலும் நண்பர்களாக வாதிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன். அது எல்லாக் கட்சிகளைப் பற்றியும் உலகில் எல்லா நிலைகளின் தரவுகளைப் பற்றியும் வாதங்கள் நிகழ்வது வழக்கமாகும். தி.மு.கவைச் சொல்வதற்காக அதன் செழுமைகளை பதிவு செய்வதற்காக யாரையாவது இழுத்துப் பிடித்து வைத்து காப்பி, டீ, வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொடுத்து விவாதிப்பது இன்றும் நீடித்து வருகிறது. பத்து வயதிலிருந்தே படிப்பகங்களில் படிக்கின்ற நாள் தொட்டு தி.மு.கவின் செய்திகளை, கருத்துக்களை வாய்ப்பு கிடைக்கின்ற இடங்களில் எல்லாம் பேசி மகிழ்வதும் பழக்கமாகும். பேசும் ஆற்றல் இருக்கும்வரை அது இருந்தால் உலகில் நான் உயிரோடு இருக்கும் நாள் வரையில் என் நெஞ்சை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பேன்.

இயக்க உணர்வால் ஈட்டிய பொருளெல்லாம் இழந்த நிலையில் கூட இன்றும் இயன்றவரையில் என் கைக்காசை இதற்காக செலவழிக்கிறேன், செலவழிப்பேன். இது நான் இருக்கும்வரை தொடரும்.

Tuesday 28 June 2016

சொற்கள் தரும் பொருள் வேறு
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், நலம்சூழ வாழ்த்துக்கள். நெஞ்சை நிறைவுறச் செய்யும் நீயா? நானா? வில் மீண்டும் ஒரு நல்ல நிகழ்வைத் தந்த ஈருடல் ஓருணர்வுள்ள இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
ஆவிகள் - பேய்கள் என்று காரியசித்தியோடு தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக மக்களை அறியாமையில் ஆழ்த்த ஆரிய இன வேதமோதிகள் மேற்கொண்ட ஆயிரம் வழிகளில் கடவுள், பேய், பூதம், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், மோகினி என்பதெல்லாம் அடங்கும். பேய், பூதம், பிசாசு, விதி, வினை என்பதற்கு இப்பொழுது உள்ளது போன்ற பொருள் தமிழ் அகராதியில் இல்லை. அது வந்து மிகப் பிரம்மாண்டத்தை பேருருவைக் காட்டுவது. பேய்க்காற்று பேய்மழை என்பதுபோல.
இதில் கலந்து கொண்டவர்கள் இன்னும் நிறையச் நிறையச் சொல்லியிருக்க வேண்டும். இருநிலைகள் கொண்ட இயற்கையில் வேறுபாடும் முரண்பாடும் என்றும் இருக்கின்ற ஒன்றுதான். இருளும் ஒளியும் ஒன்றை ஒன்று வீழ்த்தவே ஒவ்வொரு நொடியும் போராடுகிறது. இங்குள்ள பல அமைப்புகளில் உள்ள போல அறியாமையும் அறிவுக் கூர்மையும் அது போலத்தான் அதன் வெளிப்பாடுதான் இந்த நீயா? நானா? நிகழ்ச்சி.
இருவினைகளின் அய்க்கியமே இயக்கத்தின் உயிர்நாடி என்று இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை முன் வைத்தார் இலட்சிய அறிஞர் திரு. பிரடரிக் ஏங்கல்ஸ் அவர்கள்.
பேய் ஓட்டுவதாக சொல்பவர்களை ஏமாற்றுக்காரர்கள் தன் பிழைப்புக்காக பொய் சொல்கிறார்கள் என்று மனநல மருத்துவர்கள் - ஆய்வாளர்கள் சொன்னார்கள்.
அது முற்றிலும் உண்மையல்ல. ஆவி பேய் என்பது மனக் கோளாறு. மனநோய் என்றால் இதை அறியாத பேய் ஓட்டிகளுக்கும் இது பொருந்தும். ஒரு பெண் கேட்ட கேள்விக்கு பதில் தரவில்லை. இந்த பேய் ஓட்டும் பயிற்சியை யாரிடம் கற்றீர்கள் என்பது கேள்வி. இதில் கற்பவர்களும் கற்றுக் கொடுப்பவர்களும் நோயாளிகள்தான். மூளையில் உள்ள சின்ன சின்ன சிக்கல்தான் இது போன்ற குறைகளுக்கு காரணம் என்றார் ஒருவர். அது தான் உண்மை.
ஆம் உண்மையில் கண்ணுக்குத் தெரியாத ஆயிரக்கணக்கான சின்னச்சின்ன நரம்புகள் இயங்குகின்றன. அது மின் ஆற்றலால் எண்ணங்களால் உருவாக்குவதும், இடம் பெயர்வதும், இணைபிரிவதும் வேறொன்றில் இணைவதும், விரிவதும் சுருங்குவதும், சுறுசுறுப்பும் சோம்பலும், வாய்மையும் பொய்மையும், மென்மையும் வன்மையும், பாசமும் பகைமையும், அறிவும் அறியாமையும் ஓரிடத்திலேயே குடியிருக்கும் நிறை கூடியதும் கோலேச்சும், நிமிரும் குனியும், நீளும் வளையும், உருளும் புரளும், உறங்கும் விழிக்கும், வேறுபாடுகளும் உடன்பாடுகளும் தோன்றும். இது மூளை இயங்கும் நிலையாகும்.
பேய் ஓட்டுபவர்கள் பயமுறுத்தப் பயன்படுத்தும் சொற்கள் எல்லாமே புராணப் போதனை செய்யும் புளுகு மனிதர்களான புலவர்கள் பயன்படுத்திய சொற்கள்தான். அபிராமிப் பட்டரின் வர்ணனை போல் மகாபாரதி கண்ணன் என்ற கடவுளை காதலி காதலனாக கைக்குழந்தையாக ஊழியனாக சேலைகளைத் திருடும் காமலோலனாக கற்பிக்கும் கற்பனைக் கிறுக்குப் போன்றது இந்த பேய் ஓட்டுகளின் உணர்வும் செயலும்.
மனயியல் பற்றி விளக்கிய அறிஞர் சிக்மண்ட் ப்ராய்ட் பற்றியும் செயல்வடிவில் பலதுறை நிலைகளில் வெற்றி கண்ட பகுத்தறிவாளர் டாக்டர் கோவூர் பற்றியும் மனநல ஆய்வாளர்கள் சொல்லியிருக்க வேண்டும். ஆவிகள் பேய்கள் கடவுள்களை நிரூபித்தால் பரிசாகத் தருவதற்கு நாற்பதாயிரம் டாலர்களை அமெரிக்காவில் ஓர் அறிவாளிகள் கொட்டி வைத்திருக்கிறார். அவரிடம் வாதிட்டு எந்தக் கொம்பனும் இன்னும் அந்த தொகையை பெற முடியவில்லை. ஆல்காட் போன்ற முழு எத்தர்களால் கூட.
ஆயினும் உச்சக் கட்டமாக ஒரு செயல்பாட்டு நிகழ்வொன்றுக்காக ஒரு பெண் மருத்துவரையும் ஒரு பேயோட்டியையும் உடன்பட வைத்து தெளிவு படுத்தியது பாராட்டுக்குரியதாகும். இதில் பகுத்தறிவு, நாத்திகம், சுயமரியாதை, பெண்ணுரிமை மீட்சிக்காக ஒரு இயக்கம் கண்டு, பின்பற்றுவோரை பெருக வைத்து ஊரெங்கும் நாடெங்கும் வீதிதோறும் வீட்டோரங்களிலும் பிரச்சாரம் செய்து போராட்டங்களும் நடத்தி சிறை சென்று தொண்டு செய்த பெரியாரின் நினைவுகளோடு தங்களை பாராட்டுகிறேன்.

புரிதல் வேண்டும்

புரிதல் வேண்டும்
அறிவுலகமும் ஆய்வுலகமும் போற்றிப் புகழும் அறிவாளர் திரு. எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்கள் ஒரு தமிழர். தமிழ்நாட்டின் வரலாற்றைத் தெளிவாய் உணர்ந்தவர்.
விபரம் தெரிந்த நாளிலிருந்து திராவிட இயக்கத்தின் எல்லாச் செய்கைகளையும் இதயத்தில் பதிவு செய்தவர்.
உலகில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக ஒளிர்ந்தபோது, தான் பிறந்த தமிழ் மண்ணின் நிலைகளை நெஞ்சில் கொண்டு சில நூல்களையும் வேறுபல அறிவுநலம் பேசும் நூல்களையும் படைத்தப் பாண்டியன் அவர்கள் புதுவடிவில் ஒரு நூலை நமக்கு வழங்கியிருக்கிறார்.
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் எனும் எம்.ஜி.இராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்.) உணர்வுகளின் உள்நோக்கத்தை மிகத் தெளிவாகப் படம் பிடித்திருக்கிறார்.
ஏறக்குறைய இருநூறு பக்கங்களில் மறுக்கவியலாத சான்றுகளோடு தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
மிக இளவயதிலிருந்தே எம்.ஜி.ஆரின் வெறிகொண்ட இரசிகனாக இருந்த என்னைப் போன்றவர்கள் திராவிட இயக்கச் சிந்தனைகள் சாதனைகளை உள்வாங்கி உணர்ந்திருந்த காரணத்தால் பாண்டியன் குறிப்பிடும் அவர்பற்றிய கேடுகளை உணர்ந்தே இருந்தோம். ஆயினும் அவர் தி.மு.க.வில் இருப்பதால் அவரிடம் இருந்து ஒதுங்கவும் முடியவில்லை. ஆனால் தி.மு.க. வில் இருந்து நீங்கியபோது நெஞ்சம் மகிழ்ந்து ஆடிப்பாடி, ஆர்ப்பரித்து, இலட்சியத் தோழர்களை ஆரத்தழுவிக் கொண்டோம்.
எம்.ஜி.ஆர். மறைந்த அய்ந்து ஆண்டிற்குப் பின் ஆங்கிலத்தில் வெளிவந்த இந்தநூல், எழுதிய திரு. பாண்டியன் மறைவுக்குப்பின் தமிழில் வெளிவந்திருக்கிறது.
இந்த நூல் முழுவதையும் படித்த போது பழைய நினைவுகள் நெஞ்சைத் தாலாட்டியது. அதே நேரம் ஒரு தவறான மனிதனை தி.மு.க. வளர்த்து விட்டதே என்ற பழைய வருத்தமும் மனதை வருத்தியது.
இந்த நூலின் மய்யம் என்பது சுருக்கமானது. எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலம்தான் தமிழகத்திற்கு இருண்ட காலம் என்கிறார் பாண்டியன்.
ஆயிரமாண்டு இடைக்கால இருண்ட காலத்தை மாற்ற இயக்கம் கண்டு போராடி மாற்றத்தை மறுமலர்ச்சியை திராவிட இயக்கப் போராளிகளின் முயற்சியால் முளைத்து வரும் நாளில் எம்.ஜி.ஆரால் மீண்டும் ஓர் இருண்ட காலத்தை தொடங்கி வைத்து இன்றுவரை வெளிச்சம் பரவாமல் தடுப்பதைக் காண்பது மனதிற்கு வேதனையளிக்கிறது.
இராமச்சந்தர் என்ற பெயர் வடநாட்டான் போல் இருக்கின்றதென்று இராமச்சந்திரன் என்று வைக்கச் சொன்னவர் நடிப்பிசைப் புலவர் திரு.கே.ஆர். இராமசாமி அவர்கள். தமிழக ஆட்சியைப் பிடித்து தந்தை பெரியாரின் கொள்கைகளை சட்டமாக்கத் துடித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் திரையில் புகழ் கொண்ட எம்.ஜி.ஆரை மக்களின் வாக்குப்பெற  எம்.ஜி.ஆரை இதயக்கனி என்றார். ஆனால் எம்.ஜி.ஆர் அண்ணாவை பெரிதும் மதித்தார் இல்லை. அண்ணாவின் தலைமையில் இயங்கும் இவர் என்தலைவர் காமராசர் என்றார். அண்ணா வழங்கிய மேல்சபை உறுப்பினர் பதவியை உதறி எறிந்தார்.
ஆனால் அதே அண்ணா பெயரோடு தி.மு.க.வையும் இணைத்து கட்சித் தொடங்கி தி.மு.க கொடியில் அண்ணா படத்தைப் பொறித்து தமிழ் மக்களை ஏமாற்றி அண்ணா படைத்த செழுமைகளைச் சிதைத்தார், சீரழித்தார், சிதறடித்தார். தொடர்ந்து செய்வதற்கு ஜெயலலிதாவையும் நியமித்து விட்டு மறைந்து விட்டார்.
இவர் குலத்தால் மேனன், மேனன் என்பவர்கள் நம்பூதிரிக்கும் நாயருக்கும் பிறந்த முதல் பிள்ளை என்கிறது கேரளா சாதிய வரலாறு.
நம்பூதிரி என்பது ஆரியக் குலம். ஆரியக்குலத்தில் பிறந்த இவர் திராவிட இயக்கத்தில் இணைந்து அடுத்துக் கெடுக்கும் நிலையில் வெற்றியும் பெற்று விட்டார். தமிழர்களை அடிமையாக்கி ஆடல் மங்கை ஆரியமாலா ஜெயலலிதாவும் தொடர்ந்து அவலங்களை உருவாக்கி வருகிறார்.
தி.மு.கவில் இவரை இணைத்தது குற்றம், வளர்த்தது அதைவிட பெருங்குற்றம். இவர் பெயரில் மன்றங்கள் அமைத்தது மகா குற்றம். அதிலும் தங்க வாள் தந்து தமிழர்களின் தாழ்வுக்கான நிலையை ஏற்படுத்தியது மாபெரும் குற்றம் என்கிறார்கள் நடுநிலை கொண்ட நல்லறிவாளர்கள்.
ஏழைகளின் தோழனாக எழுச்சியின் நாயகனாக வாய்மை தூய்மையின் வழிகாட்டியாக வள்ளல் தன்மை கொண்டவராக திராவிட இயக்கப்பற்றாளராகவும் வர்ணிக்கப்படும் இவர் திட்டமிட்டு சினிமாவிலும் வெளியிலும் முகபாவங்களிலும் நடித்தாரே தவிர உள்ளத்தில் இவற்றிற்கு எதிரானவராகவே இருந்தார் என்பதை பாண்டியனின் நூலின் சில குறிப்புகள் நமக்கு உணர்த்துகிறது.
அதன் அடிப்படையில் நூலின் பின் அட்டையில் மிளிரும் பாரதி கிருஷ்ணகுமார். ப.திருமாவேலன் இருவரும் கூறுகின்ற கருத்துகள் நூலைப் படிப்போரின் மனதில் பதிந்தால் மக்கள் திலகம் என்ற மயக்கம் தீர்க்கும் மருந்தாக மாறும்.

Tuesday 21 June 2016

மண்ணில் புதைந்த மக்களாட்சி மறைந்த மடிந்த மரபும் மாண்பும்

மண்ணில் புதைந்த மக்களாட்சி
மறைந்த மடிந்த மரபும் மாண்பும்

நீண்ட நெடிய போராட்டத்தில் உதிரத்தைக் கொட்டி உடமைகளை உயிர்களைப் போக்கி உண்மையாக மக்களாட்சிமுறை செம்மணம் தரும் பூஞ்செடியை இந்த மண்ணில் நட்டு வைத்தனர் நாடறிந்த நல்லறிவாளர்கள் பலர்.
உரிமைக்கு உயிர்தரும் உன்னத முறைகளால் உலகில் பல துறைகள் முகிழ்த்து வளர்ந்து இயற்கையின் பல இடர்பாடுகளைக் களைந்து இனிமைதரும் வாழ்வை மனிதர்களுக்கு வழங்கியது.
மனிதகுலம் தோன்றிய நாளிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளாக இறைவனின் ஆணை என்ற ஏமாற்றுக்காரர்களின் எண்ணப்படி மன்னனே எல்லாம் என்ற ஒற்றைத் தலைமையில் தான் உலக மாந்தர்களை ஒரு வட்டத்திற்கு அடுக்கி வைத்து ஆளும் நிலை நீடித்தது.
மனித அறிவு வளர வளர இந்த முறைகளை மீற முயல்பவர்களை பல்வேறு உத்திகளால் மடக்கி வைத்தார்கள், அடக்கி வைத்தார்கள். வழிவழி மன்னர்முறை அதுவும் மன்னனின் முதல் மனைவியின் முதல் மகனே மன்னன் என்ற அடாவடித் தனமே இங்கே நிலை கொண்டிருந்தது.
உடல்வலிமை உள்ளச் செழுமை இல்லாதவனெல்லாம் மன்னனானான். புத்தி கெட்டவனும் போதையுள்ளவனும் பூமியாளும் நிலைகண்டான். முரடனும் முட்டாளும் நாடாளும் உரிமை பெற்றான். இதற்கெல்லாம் விளக்கி சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம். இவர்களின் கீழ்அடிகளாக இருக்கும் மக்கள் படாத இன்னல் இல்லை. துன்பம் துயரங்கள் இல்லை. சொல்லொனா வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல.
எல்லைக்கோடுகளுக்குள் ஊராண்ட உன்மத்தர்களால் உயிரிழந்தோர் ஏராளம், உடல் சிதைந்தோர் ஏராளம் ஏராளம். உழைத்துச் சேர்த்த உடமைகளைப் பறி கொடுத்தோர் ஏராளம் ஏராளம் ஏராளம். செத்த பிணங்களாக வாழ்ந்தோர் தொகை இன்னும் அதிகம்.
மனித குல வரலாற்றில் எல்லாவற்றிலும் முன்னோடியாக இருந்த அய்ரோப்பாவில் ரோமாபுரியை ஆண்ட கொடுமைக்காரர்களை எதிர்த்து ஒற்றை ஒரு தனி மனிதனாக வெகுண்டெழுந்தான் ஒரு மாவீரன். ஆம் ரோமானிய அரச குலத்தார் ஆழக் குழி தோண்டி அதில் பலநாள் பட்டினி போட்ட ஒரு சிங்கத்தை உள்ளே விட்டார்கள். அத்துடன் அடிமைக் குலத்தைச் சேர்ந்தவனை குற்றம் சுமத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டு அவனையும் அந்தக் குழிக்குள் இறக்கிவிட்டு சிங்கம் உணவாக்கிச் சாப்பிட்ட கோரக் காட்சியை மேல் மாடத்திலிருந்து வேடிக்கைப் பார்க்க கூடியிருந்தார்கள். இப்படிப் பலரை பலிகொடுத்து பார்த்து ரசித்து மகிழ்ந்தவர்கள் அவர்கள்.
இறங்கியவன் இறக்கப் போகிறான் ரசிப்போம் என்று காத்திருந்தவர்கள் அதிர்ச்சியடையும் வகையில் நிகழ்ச்சி வேறாக அமைந்தது. குழிக்குள் இருந்த வீரன் சிங்கத்துடன் மோதி அந்தச் சிங்கத்தைச் சாகடித்து மேலேறி வந்து வேடிக்கைப் பார்த்த அரசக் குலத்தாரை வெட்டி வீசினான். ஸ்õபார்டக்ஸ் எனும் மாவீரனால் அடிமைகளின் போர் உணர்வு எழுச்சிக் கொண்டது. அது வளர்ந்து வளர்ந்து பிரெஞ்சுப் புரட்சியாய் உருவெடுத்தது. இந்த் பேரெழுச்சி தோன்ற உணர்ச்சியூட்ட இழந்த மனித உயிர்கள் ஏராளம்.
சாக்ரடீஸ் காலத்திலிருந்து அய்ரோப்பாவிலும், புத்தன், வள்ளுவர் காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்திலும் உருவான சமத்துவ சனநாயகச் சிந்தனைகள் பல்லாயிரம் பேரை பலி கொடுத்து வளர்ந்து வந்திருக்கிறது.
பிரெஞ்சுப் புரட்சியின் உணர்வுத் தூண்டலை கவிஞன் ஷெல்லியின் கவிதையும் வால்டர் ரூசோவின் எழுத்துக்களும் ஊக்கமூட்டி ஏற்படுத்துகிறது. காணாத ஒரு விடுதலைப் புரட்சியை சமத்துவம், சுதந்திரம், சகோரத்துவம் என்ற தூய கோட்பாட்டில் செயல் வடிவம் காட்டியது. கேலியும் கிண்டலும் செய்த மன்னர் குலத்தை கில்லட்டின் எனும் வெட்டுப் பாறையில் தலைகளை சீவினார்கள். ஏற்கனவே பிளேட்டோ விளக்கிய குடியரசு, பின்னர் மாமேதை ரூசோவின் சமுதாய ஒப்பந்தம் ஒரு நல்ல மக்களாட்சி வடிவமாக வளர்த்தெடுத்தது. பிரெஞ்சுப் புரட்சி ஏற்படுத்திய ஊக்கத்தால் உலகின் பல நாடுகளில் மக்களுக்கு விழிப்புணர்வு தோன்றி மன்னர் குலத்தை எதிர்க்கின்ற துணிச்சலைத் தந்தது மதவாதிகளின் ஆலோசனைகளால் திமிரேறியிருந்த அரச குலம் ஆட்டம் காணத் தொடங்கியது.
தனி மனித உரிமைகள் தலை தூக்கி நின்றது. ஏதென்ஸ் சாக்ரடீசின் ஏன் எதற்கு என்ற கேள்விகள் எழுந்து நின்று எங்கும் விழிப்புணர்வை உருவாக்கியது. வல்லாண்மைக்கு வளைந்து கொடுத்து வணங்கிக் கிடந்த மக்கள் வீறு கொள்ளத் தொடங்கினர். ஆக்கம் நிறை அறிவாளர்கள் நெஞ்சில் மக்களாட்சி உரிமை உணர்வுகள் மலரத் தலைப்பட்டது.
பல்வேறு முறைகள் திருத்தம் கண்டு வயது வந்தோருக்கு அதாவது சிந்திக்கும் சீர்கண்ட வயதில் வாக்குரிமை என்ற தேர்வு முறை மலரத் தொடங்கியது. ஒவ்வொருத்தரும் தன் மனக்கருத்தை வெளிப்படுத்திய பின் மக்கள் கூட்டத்தின் பெரும்பகுதியினர் விரும்புவோர் ஆளுமைத் தளங்களில் அமர்த்தப்பட்டனர். ஆனாலும் பேரறிஞர் அண்ணா போன்ற உள்ளத்தூய்மை கொண்டோர் தலைகளை மட்டும் எண்ணுவல்ல மக்களாட்சி தலைக்குள்ளிருப்பதையும் எண்ணிப் பார்ப்பதுதான் மாசில்லாத மக்களாட்சி முறை என்றனர்.
ஆனால் அதே அண்ணாதான் குடியாட்சிக் கோமான்கள் என்றும் பொதுவாழ்வில் இருப்போரின் பொறுப்பின்மையும் சுட்டிக் காட்டினார்.
பல்லாயிரம் ஆண்டுகளாக பழக்கத்தில் இருந்த மதவாதிகளின் மயக்கக் கருத்துகளால் நீடித்த வந்த மன்னர் குலம் மக்களாட்சி நடை போடும் போதும் மனிதர்களைப் பற்றிக் கொண்டது.
சனநாயகம் என்று பேசுவோர் அதன் அடித்தளம் கீழே இருந்து மேல்நோக்கி வருவதை தவிர்த்து அந்தரத்தில் இருந்து ஆணையிடத் தொடங்கினார். மக்களாட்சி பாவனையோடு  பலர், மன்னர்முறைகளை மனதில் கொணடே இயங்கினார்.
எல்லார்க்கும் எல்லாம் எனும் இனிய முறைகளை வல்லாண்மை மனிதர்கள் தங்களுக்காகவே என்று வளைத்து போட்டனர். பழைய மதவாதிகளைப் போலவே புதிய கட்டுரைகளிலும் மதம்சார்ந்த மடமைகளை புகுத்தி புதுமை தந்த மக்களாட்சி முறைகளை புதைகுழியில் போட்டுப் புதைத்தனர்.
தூய கொள்கையுள்ளவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டோர் கூட துயர்தரும். தூய்மையற்ற நிலைகளை நிலைப்படுத்தினர், நியாயப்படுத்தினர். எதிர்க்க வலுவற்றவர்கள் என்ன செய்வார்கள் பாவம், என்ற ஒரு திரைப்பட உரையாடல் சொல்வதுபோல் மக்கள் கூட்டம் இந்த சனநாயகச் சண்டாளர்களிடமும் தொண்டனிட்டு சரணடைந்தது மன்னர்களின் வாரிசு முறைகளில் சற்று மாறுதல் கண்டது. ஆம் மன்னனின் மூத்த மகன் தான் மன்னன் எனும் நிலை, எந்தப் பிள்ளையானாலும் சரி என்று நடைமுறையான இழிவான இந்த நிலை  எங்கும் இருக்கக் காணலாம். இந்த நிலைமாற மீண்டும் ஒரு பிரெஞ்சுப் புரட்சி தோன்ற வேண்டும், தோன்றுமா? தோன்றாது காரணம் விஞ்ஞானம் யாரையும் பட்டினி போடவில்லை அதனால் அந்த வாய்ப்பு இல்லையென்றே தோன்றுகிறது.
மன்னன் குலத்திற்கு மாபெரும் பாதுகாப்பை வழங்கியவன் மாமேதை அரிஸ்ட்டாட்டில். ஆம் அவன் சாதாரன மக்கள் அரசியலில் ஈடுபாடு கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்றான்.
மன்னர்களை தங்கள் பிடியில் வைத்து புகழ் மாலைகள் மூலம் மூளைச் சலவை செய்து மதவாதிகள் தங்கள் பிழைப்பை பாதுகாப்பாக வைத்துக் கொண்டார்கள். மன்னன் கடவுளின் வடிவம். இறைவன் மன்னனாகப் பிறந்தான் என்றெல்லாம் மக்களை மடமையில் மவுடீகத்தில் ஆழ்த்தி வைத்தனர் மயக்கும் வித்தை கற்ற மதவாதிகள்.
வரலாற்றில் 90 விழுக்காடு நிலைகொண்டிருந்த மன்னர் குல உணர்வுகள் மக்களாட்சியின் தூய்மையின் மீது மாசுகளை பூசி மங்கச் செய்து வருவதைக் காணலாம்.

மூளையில் படிந்துபோன மூடநம்பிக்கை புறவாழ்வில் புதுப்பொருளால் ஏற்பட்ட மாற்றம் மனதளவில் இன்னும் வளர்ச்சி பெறவில்லை; வளம் தரவில்லை. அறிவாளர்கள், ஆய்வாளர்கள் அரசியலில் தூய்மை துலங்க விரும்புவோர் ஒருங்கிணைந்து ஒரு கருத்துத் தெளிவை உருவாக்க முனைந்தால், மக்களாட்சியின் இதயமும் நுரையீரலும் இரத்தமும் நரம்புகளும் நலிவு நீங்கி நலம் பெறலாம்.