Saturday 21 January 2017

18. புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி…

18. 
புத்துலம்
மேகக் கூட்டத்தின் கீழிருந்து மேல் நோக்கிப் பார்த்தான். கடல் நுரை போல அந்தப் பூமியைச் சுற்றிலும் மேகத்திரள் நிறைந்திருந்த காட்சி அவன் நெஞ்சைக் கவ்வியது. அவன் பிறந்த பூமியில் இருந்ததை விட அடர்த்தியாக அந்த முகில் இருந்ததைக் கண்டான். அந்த இனிய காட்சியைக் கண்டு மகிழ்ந்தவாறு அந்த நிலம் நோக்கி கீழிறங்கினான். அந்தப் புதிய நிலத்தில் கால்வைத்ததும் அவன் உள்ளம் அடைந்த மகிழ்ச்சிக்கு உவமை சொல்ல இயலாது.
அவன் இறங்கியது ஆளற்ற ஒரு கடற்கரையின் அருகில். நேரம் அதிகாலை, கருமை இருள் தன் கட்டுக் குலைந்து வெளுத்துக் கொண்டுவரும் வைகறை நேரம், காலைப் பணியின் மென்மை அவன் உடலைத் தழுவியது. நெடுந்தூரம் பறந்து மற்றொரு பூமியில் கால் வைத்ததால் குதூகுலம் உள்ளத்தைத் தழுவியது. கொஞ்சம் கொஞ்சமாக கீழ்வானத்தில் சிவப்பேறிக் கொண்டிருந்தது. காலைக் கதிரவன் தன் பொன்னிறக் கதிர்களை தொடுவானத்தைத் தொடுமாறு பணித்துக் கொண்டிருந்தான்.
பறவைகள் தங்கள் உறக்கத்தை கலைத்து தன் சிறகடித்து மகிழ்ச்சி குரலெழுப்பி பறந்தது. குக்கூ சிக்கி என்ற இரைச்சல் இசையாகி சுந்தரலிங்கத்தின் இதயத்தில் இனிமை உணர்வுகளை தேக்கியது. வட்ட வடிவாய் வார்த்தெடுத்த தங்கத் தட்டு ஒன்று கடலின் உள்ளிருந்து வெளிக் கிளம்புவது போல் உதய சூரியன் கடலோடு ஒட்டி நின்றான். உதித்து வரும் அந்தக் கதிரொளியை மறைத்திட மூடிநின்ற மேகங்களும், முக்காடு போட்ட இருளும் இருந்த இடம் தெரியாமல் எங்கோ மறைந்துவிட்ட காட்சி கருத்தான காட்சியாக அவன் சிந்தைக்குப் பட்டது.
காலை இளஞ்சூடு அவனுக்கு களிப்பினையூட்ட மெல்ல பறந்து சென்றான். சில கல் தூரம் பறந்து சென்றவன் அங்குள்ள ஒரு ஊரில் இறங்கினான். அந்த ஊரில் இறங்கும்போது இனிய இசையுடன் கூடிய ஒரு பாடல் செவியில் விழுந்தது.
இன்ப நல் வாழ்விற்கு
இனிய நூல் வழங்கிய
வள்ளுவன் வாழ்கவே!
தெள்ளுதமிழ் வளர்கவே!
என்ற பாட்டு கேட்டு பரவசம் அடைந்தான் தமிழ்மகன் சுந்தரலிங்கம். நாம் எங்கு இருக்கிறோம் எனும் சந்தேகம் கூட அவனுக்கு வந்துவிட்டது. மெல்ல அந்த ஊரில் நடந்து சென்றான். எங்கும் மனித நடமாட்டமே காணாது, வண்டிகளே விரைந்தோடிக் கொண்டிருந்தது. நடந்து சென்ற இவனைக் கண்டதும் ஒரு வண்டி  அருகில் வந்து நின்றது. வண்டியின் கதவு திறந்து இவனை அதில் ஏறும்படி பாவனையால் வலியுறுத்தினார் ஒரு நடுத்தர வயது கொண்ட மனிதர். சுந்தரலிங்கம் அதில் ஏறிக் கொண்டான். காருக்குள் இருந்த மனிதரை பார்த்ததும் வியப்பால் இமைக்க மறந்தான் சுந்தரலிங்கம். அந்த மனிதரின் முகத்தில் மூன்று கண்கள் இருந்தது தான் அவன் வியப்பிற்குக் காரணம். காரோ காற்றில் மிதப்பது போன்று சென்றது. காரில் ஒலியோ, உருளும் சக்கர ஓசையோ இன்றி சென்றது. அதன்பின் காரின் வெளிப்புறம் நோக்கினான். சாலையில் செல்லும் எந்தக் காருக்கும் சக்கரங்கள் இல்லாதது அவன் கவனத்தை ஈர்த்தது. அந்தக் காரினை ஓட்டிச் சென்ற மனிதரைப் பார்த்து சுந்தரலிங்கம் பேச்சுக் கொடுத்தான். அய்யா, இங்கு தமிழ்ப்பாட்டு ஒன்று கேட்டது. இங்கு தமிழ் தெரிந்தோர் இருக்கிறார்களோ? என்று கேட்டான். அதற்கு அந்த மனிதர் இனிய குரலில் இன்பத் தமிழ் மொழியிலேயே பதில் தந்தார். ஆம் அய்யா இந்த உலகம் முழுவதுமே தமிழும் மேலும் சில மொழிகளும் பேசப்படுகிறது. மொத்தம் நான்கு மொழிகள் வழக்கில் இருக்கிறது. அதில் தமிழும் கிரேக்கமும் முதன் மொழிகளாக விளங்குகிறது. மற்ற இரண்டு மொழிகள் சில பகுதிகளில் பேச்சு மொழிகளாக இருக்கிறது என்று கூறிவிட்டு சுந்தரலிங்கத்தைப் பார்த்து நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார். சுந்தரலிங்கம் தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் அவரிடம் கூறினான்.
அந்தக்கார் ஒரு பெரிய கட்டிடத்தின் முன் நின்றது. காரிலிருந்த சுந்தரலிங்கத்தை அழைத்துக் கொண்டு அந்த மாளிகையின் உள்ளே சென்றார் அந்த மனிதர். அங்கிருந்த ஒரு யந்திரத்தில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினார். சில நிமிடங்களில் அந்த ஊரில் உள்ள மக்களில் பெரும்பாலோர் அங்குவந்து குவிந்து விட்டனர். மாடியில் உள்ள மண்டபத்திற்கு எல்லோரையும் அழைத்துச் சென்றார் அந்த மனிதர். அங்கு வந்த அத்தனைபேருக்கும் ஆண் பெண் அனைவருக்கும் மூன்று கண்கள் இருக்கக் கண்டான் சுந்தரலிங்கம். அவர்கள் அனைவரும் அவனை விழியிமைக்காமல் வியப்புடன் பார்த்தனர். மூன்று கண்களை தவிர மற்றபடி சுந்தரலிங்கத்தின் உலகில் உள்ள மனிதர்களையே ஒத்திருந்தனர். ஆனால் யாரும் ஆறடிக்குக் குறைவாக இல்லை. உடைகள் இருபாலருக்கும் ஏறத்தாழ ஒன்று போலவே இருந்தது. தலை முடியையும் ஒரே மாதிரியாகவே செப்பனிட்டிருந்தனர். சுந்தரலிங்கம் மட்டும் அய்ந்தடி உயரத்தில் இருந்தான்.
அவனை அழைத்துச் சென்ற மனிதர் இவனை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து இனிய தமிழிலும் எளிய கிரேக்க மொழியிலும் பேசினார். மற்றொரு உலகத்தில் இருந்து தனி முயற்சியின் அடிப்பøடியல் இங்கு வந்திருக்கும் இவரை நம் உலக விருந்தினராக கருதி மதிப்போம்  என்ரார். சுந்தரலிங்கத்தைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அவரே விளக்கிக் கூறினார். அவருடைய உரையும் அங்கிருந்தவர்களின் தோற்றமும் அந்த உலகம் முழுவதும் தொலைக் காட்சியில் காட்டப் பட்டது. ஹாலிவுட் படங்களிலும் பறக்கும் தட்டுகளில் கண்டதாக கூறப்படும் உருவங்களைப் போலல்லாது தன் உலகில் உள்ளது போலவே இங்குள்ள மனிதர் இருப்பதும் அங்குள்ள மொழிகள் இங்கு இருப்பதும் சுந்தரலிங்கத்திற்கு மிகுந்த மகிழ்வினை ஊட்டியது. அந்த உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்க உரியவர்களிடம் அனுமதி பெற்று வழங்கிய பின் அவர்கள் கலைந்து சென்றனர். அந்த உலகைப் பற்றிய முக்கிய விவரங்கள் அடங்கிய குறிப்பொன்றும் அவனிடம் தரப்பட்டது.
அந்த உலகில் மொத்த மக்கள்தொகை 120 கோடி என்று குறிக்கப்பெற்று இருந்தது. மற்ற கால்நடைகளும் பறவைகளும் பலநூறு மடங்கு அதிதம் என்று காட்டப் பட்டு இருந்தது. சாலையில் öச்லலும் கார்கள் தலைக்கு மூன்று என்றும் சரக்குந்துகள், கப்பல்கள், தொடர் வண்டிகள் பல்லாயிரக்கணக்கில் உருவாக்கப்பட்டு இருந்தது. உணவுப் பொருள் மக்களின் தேவையைப் போல் பலமடங்கு உற்பத்தி செய்து, சேமிப்பில் பதப்படுத்தப் பட்டு இருக்கிறது. அரசியல் கட்சிகள் அதிகம் இல்லை. அதிலும் காழ்ப்புணர்ச்சி கொண்ட கட்சியே கிடையாது. மதங்கல் அங்கு இல்லை, அதனால் மடமையைப் பரப்பும் ஆலயங்கள் இல்லை. கள்வர்கள், கயவர்கள் இல்லாத காரணத்தால் காவல்துறை இல்லை. நோயாளிகள் இல்லாததால் மருத்துவமனைகள் இல்லை. குற்றங்கள் இல்லாத நிலையில் கோர்ட்டுகளும் இல்லை. பகை இல்லாத காரணத்தால் படையமைப்புகள் இல்லை. அச்சம் இல்லாத அந்த உலகில் அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இல்லை. ஆசிரியர் இல்லாததால் சாதிகள் இல்லை. வேதியர்கள் இல்லாததால் மூட சாஸ்திரங்கள் இல்லை.
பெண்களின் உடலில் ஆடைகள் தவிர வேறு அணிகலன்கள் இல்லை. காதிலும், மூக்கிலும், கழுத்திலும் எதையும் தொங்கவிட்டு அழகு காட்டுவதில்லை. காலில் சதங்கையும், கையில் வளையலும் பூட்டி ஓசையெழுப்பி ஆண்களின் மன ஆசைகளை தூண்டுவதில்லை அதனால் காதல் உணர்களுக்கு அங்கு இடமில்லை என்று சொல்ல முடியாது. இருவர் விழிகளும் சந்திந்து இதயங்கள் கலந்து விட்டால் தனியறையில் அவர்களின் காதல் உணர்வுகள் கரைபுரண்டோடும்.
உரிய முறையில் உடல், மன, மூளை, அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக அனைவரும் விளங்கியது காண அவன் மனம் மகிழ்ச்சியில் திளைத்த வண்ணம் இருந்தது வேலை செய்ய வேண்டிய நிலையில் இல்லையென்றாலும் அவர்கள் யாரும் வேலையற்று வீண் பொழுது கழிக்கவில்லை பயனுள்ள விவாதங்களில் ஈடுபட்டு சீரிய முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆராய்ச்சி கூடங்களில் புதுப்புதுக் கருவிகளை வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் எங்கும் இல்லாமை இல்லை அதனால் ஏழ்மை இல்லை. ஏழ்மை இல்லாததால் ஏய்ப்போர் இல்லை. பொருள் குவிந்து கிடப்பதால் போட்டியில்லை. எல்லா வளங்களும் இருப்பதால் யாரிடம் பொறாமை உணர்வுகள் இல்லைச. பொறாமையில்லாததால் பொல்லாங்கு நிகழ்வது இல்லை. எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதால் அரசுகளே கூட ஆங்காங்கு இல்லை. உலக அரசு என்று ஒன்று உண்டு. ஒவ்வொரு பகுதியில் இருந்தும் அதன் உறுப்புகளாக அறிஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தலைமை நிர்வாகக் குழு நிர்வாகிகளை நியமித்து உலக முழுவதையும் சீரிய முறையில் நிர்வாகிக்கின்றனர். ஆறுகள், கனிமவளங்கள், காடுகள் மற்றும் இயற்கையின் செல்வங்கள் அனைத்தும் பொதுவாக்கப்ப பட்டிருக்கிறது. எங்கும் இல்லாமை என்பது இல்லாமல் இருக்கிறது. இயற்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், பலம், பலவீனம் அனைத்தும் அறிவியல் வழியாக சரி செய்யப்படுகிறது. முரண்பாடுகள் ஆராயப்படுகின்றன. முடிவெடுக்க முடியாதவை நீண்ட ஆய்வுக்காக மனதில் - கோப்புகளில் வைக்கப்படுகிறது. மனிதத் திறமைகள், ஆற்றல்கள் அனைத்தும் அனைவராலும் மதிக்கப்படுகிறது. எல்லாம் என்னால்தான் என்ன ஆணவ உணர்வு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. வேளாண்மையில் பெரும்பகுதி யந்திரங்களே ஈடுபடுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளிலும் அதே நிலை தான், தனித்தனி வீடுகள் குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்குத் தேவையான பொருள்கள் அவரவர் இல்லங்களில் சேர்க்கும் பொறுப்பினை அரசே ஏற்றுக் கொள்கிறது. தங்கள் கற்பனை வளத்திற்கு ஏற்ப கட்டிடங்கள் கலைப் பொருட்களை உருவாக்கும் உரிமை உண்டு. எனினும், அங்கு ஆட்சி புரியும் அறிவியல் பண்பாட்டுக்கு மாறாக எதையும் செய்யக்கூடாது எனும் கட்டுப்பாடு அமுலில் உள்ளது. அங்குள்ள உணர்வுகளை எண்ணிப்பார்க்கும்போது இதயம் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தது. தொல்லையற்ற வாழ்க்கைச் சுழலே அங்கு நிலவின. இன்பம் நிறைந்த அந்த இனிய நிலத்தில் எல்லா வளமும் இருந்தன, எங்கும் அடர்ந்தும் வானுயர்ந்து வளர்ந்தும் உள்ள மரங்கள் அந்தப் பூமியுருண்டை முழுவதும் மூடியிருந்த காட்சி இயற்கை ஆட்சியை எடுத்துக் கூறுவதாக இருந்தது.
ஒரு ஊருக்குள் நுழையுமுன் அங்கு மரங்களையும் மலர்பூத்த செடிகளின் பேரழகினையுமே முதலில் காண முடியும். பின்னால் உயரமான கட்டிடங்களைக் காண முடியும் எழில் மிகுந்த இயற்கையின் இனிய சூழல் எல்லா வகையிலும் பாதுகாக்கப்பட்டிருந்தது. கவிஞர்களும்  கலைஞர்களும் இருக்கின்றனர். ஏடுகள் நிறைய வந்து கொண்டிருந்தன. எழுத்தாளர்கள் ஏராளமாக இருக்கின்றனர். ஆனால் அவர்களின் படைப்புகள் அனைத்துமே, வளர்ச்சி நோக்கத்திற்கும் அறிவியல் ஆக்கத்திற்கும், உணர்வை நயப்படுத்தி நாகரிக வாழ்விற்கு மனிதர் இராசபாட்டையில் பயணம் செய்வதாகவும் இருந்தன. சாலைகள் அனைத்தும் காந்தத்தால் போடப்பட்டிருந்தன. தொழிற்சாலைகளும் அந்த அடிப்படையில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆகவே இயந்திரப் பொருள்களின் தேய்மானம் என்பது மிகுதியும் இல்லாமல் இருந்தது. அதிகாலையில் உடற்பயிற்சியும், தொடரும் நேரத்தில் படிப்பும், மாலையில் விளையாட்டும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும், கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. எல்லா மனிதர்களுமே கற்றவர்களாக இருந்தனர். கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு எனும் உணர்வுகளை இதயத்தில் குடி வைத்தவர்கள். அதனால் ஏற்றமிகு நிலையை எய்தியவர்களாக இருந்தனர். சுந்தரலிங்கம் அந்த உலகம் முழுவதையும் ஊர்தியிலேயே சென்று பார்த்தான். எங்கும் காந்தச் சாலைகளில் வண்டிகள் இரைச்சல் இன்றி செல்வதற்கு ஏற்பாடுகள் இருந்தது. தொலைவிடங்களுக்கு செல்ல தொல்லைகளற்ற வகையில் பாதைகள் சீர் செய்யப்பட்டு இருந்தது.
அவன் பல்வேறு பகுதிகளை கண்டாண். ஆப்பிரிக்காவில் உள்ளது போன்ற மிருகங்களைக் கண்டான். அங்குள்ளதைவிட அதிகமான வகைகளில், எண்ணிக்கையில் அவை இருந்தன. அமேசான் போன்ற ஆறுகளையும் அடர்ந்த காடுகளையும் கண்டான். நகரங்கள் ஊர்கள் என்று பலவற்றைக் கண்டான். நகரங்கள் ஊர்கள் என்று பலவற்றைக் கண்டான். ஆனால் எங்கும் கிராமத்தையோ, கூரைக் குடிசைகளையோ, ஆதிவாசிகளையோ ஆடைகளற்ற நிலையோ அழும் குழந்தை, உணவற்ற நிலையிலோ அவன் கண்ணுக்குத் தெரியவில்லை. வாகனங்கள் பலவாறு வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆங்காங்கே அறிஞர்களின் சிலைகள் நிறுவப்பட்டு இருந்தது. முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையில் மக்கள் முழுமனதுடன் ஈடுபட்டு மகிழ்ச்சியில் திழைத்தனர். பிரிவுகள் இல்லை, பேதங்கள் இல்லை. சிறுமை இல்லை அதனால் சீற்றங்கள் இல்லை. மாற்றங்கள் இருந்தன. ஆனால் அது வளரும் நோக்கில் இருந்தது. தமிழ் இங்கு போல் சிக்கலானதாக இருக்கவில்லை. ஒரு பொருளுக்கு பல சொற்கள் இருக்கவில்லை. ஒரு சொல்லில் பல பொருட்கள் குறிப்பிடும் நிலை அங்கில்லை. சொற்கள் குவிந்து கிடந்தது. அரசியல் மட்டுமின்றி அனைத்து இயல்களையும் விளக்கும் ஆற்றல் அங்குள்ள தமிழ்மொழிக்கு இருந்தது. அவனுடன் வழிகாட்டுதலுக்காக வந்த மாறன் பிசிராந்தை, அரிக்லியஸ் ஆகிய இருவர் அவனுடைய இனிய தோழர்களாக மாறியிருந்தனர். செல்லும் வழியில் எல்லாம் பல்வேறு பொருள் பற்றி விவாதித்துக் கொண்டே சென்றனர். மாலை நேரம் அந்தி வானத்து பகலவன் வானமெங்கும் பொன்னிறக் கதிர்களால் அழகினை குவித்த வண்ணம் அவன் வழி நடந்து சென்றான். மாலை இருட்டாகியது. என்ன ஆச்சர்யம் ஒரு திக்கில் நிலவு முழுவடிவிலும், அதன் எதிர் திக்கில் மதிபிறை வடிவிலும் தெரியக் கண்டான். அருகிலிருந்த தோழர்கள் இந்தப் பூமிக்கு இரு நிலவுகள் என்று எடுத்துக் கூறினர். எப்போதும் குளிர் நிலவு ஒளிரும். இருட்டு என்பதே இந்த பூமியில் கிடையாது. மக்கள் இதயங்களிலும் தான் என்றனர் அந்த இனிய நண்பர்கள்.
உலகம் முழுவதும் காந்தத்தில் சாலையமைத்து இருக்கிறீர்களே? இவ்வளவு காந்தம் எங்கிருந்து கிடைக்கிறது என்றான் சுந்தரலிங்கம். அதற்கு அந்த தோழர்கள், சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் இருந்து எங்கள் உலகத்தின் விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தால் காந்தத்தை பல்வேறு நிலைகளில் உள்ள பொருளாக கொண்டுவந்து இங்கு காந்தச் சாலைகள் அமைத்திருக்கிறார்கள். இதனால் இங்குள்ள இயற்கைச் சூழல் கெடுவதற்கு வாய்ப்பில்லை என்றார்கள். இப்படியே அந்த உலகத்தைச் சுற்றி இதயத்தில் என்றுமில்லாத இன்ப உணர்வுகளைத் தேக்கி வைத்துக் கொண்டான். உலகின் எல்லாப் பகுதியிலும் உள்ள மக்கள் அனைவரும் சுந்தரலிங்கத்தின் மீது அன்பைச் சொரிந்தார்கள். வளைவுகளற்ற வாழ்க்கைப் பாதையைக் கொண்ட அந்த மக்கள் எல்லாக் காலங்களிலும் இன்புற்று வாழ வேண்டுமென்று வாழ்த்தினான். மாசற்ற சூழலில் மனித நேயத்தை வளர்க்கும் அந்த மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்திட மனதார வாழ்த்தினான். அவன் பிறந்த உலகின் நல்லறிஞர்கள்  கண்ட கனவுகள் இஹ்கு செயல் வடிவில் வாழ்வதை நெஞ்சார வாழ்த்தினான். அந்த உலகம் முழுவதும் கண்டு மகிழ்ந்த சுந்தரலிங்கம், அங்கிருந்து விடைபெற்று செல்ல விரும்பினான். அவனை வழியனுப்பும் விழாவிற்கு அவ்வுலக முதல் குடிமகனும் தலைமை செயற்குழுவின் தலைவரும் ஆன அறிஞர் தலைமை தாங்கினார். அவர் சுந்தரலிங்கத்தை மிகுவாக புகழ்ந்து பேசினார். புறப்பொருள் எதுவுமின்றி தன் உடலையே பறப்பதற்கு ஏதுவாக மாற்றியது விஞ்ஞான உலகில் ஒரு புதுமையாகும். அந்த வகையில் தொலை தூரத்தில் உலவுகின்ற இருவேறு உலகத்திற்கிடையே இணைப்பினை ஏற்படுத்திய புதுமை மனிதர் அறிஞர் சுந்தரலிங்கம் நம் மக்களின் முழுமையான பாராட்டுதலுக்கு உரியவர்.
அவருடைய முயற்சிகள் தொடர்ந்து பல வெற்றிகளை பெற வேண்டும் என்று வாழ்த்தினார். அந்த நிகழ்ச்சியை அவ்வுலக மக்கள் அனைவரும் பார்த்துக் களித்தனர். முக்கிய நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வீட்டையும் கதவை தட்டி சொல்லுவதற்கேற்ப கருவிகள் அமைக்கப்பட்டிருந்தது அந்த உலகில்.
இறுதியாக சுந்தரலிங்கம் விடைபெறும் வகையில் மனம் உருகு பேசினான். உள்ளொன்ரு வைத்து புறமொன்ரு பேசாத பெருங்குணமும் உயர்வினையே நோக்கமாக கொண்ட கலாச்சாரக் கூறகளை உள்ளத்தில் பதிய வைத்திருக்கும் உறுதிப்பாடான தன்மையும் மாந்தர்கள் அனைவரும் ஒன்று என்று எண்ணுகின்ற தூய இதயமும் கொண்ட உங்களை பிரிவதென்பது வேதனை உணர்வுகளை என் உள்ளத்தில் ஏற்படுத்துகிறது இந்த உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்த வகையில் என் உள்ளம் மிகுந்த களிப்பில் மிதக்கிறது. எங்கள் உலகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் கவிஞன் கணியன் பூங்குன்றன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகம் எல்லையற்று விரிந்ததாக வேண்டும் என்று விரும்பினான். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று அவரவரின் மனமே ஆக்கத்திற்கும் அழிவிற்கும் காரணம் என்றான். அவனுக்கு பின் வந்த ஜெர்மானியப் பேரறிஞன் காரல்மார்க்ஸ் அறிவியலை மைய இழையாகக் கொண்டு நெய்த தன் சித்தாந்த கோட்பாடுகளில் உலகம் ஒரு குடும்பமாக வேண்டும் பாச உணர்வுகள் தழைத்து செழிக்க வேண்டும். எல்லார்க்கும் எல்லாம் என்பதாக பொதுமை உணர்வுகள் பொங்கி வழிய வேண்டும். பூத்துக் குலுங்க வேண்டும், என்றெல்லாம் தன் இதயத்தை திறந்து காட்டினான். மற்றும் பல அறிஞர்கள் எல்லாம் இந்த வகையில் சிந்தனைச் சுரங்கத்தை மக்களுக்காக திறந்துவிட்டார்கள். ஆனால் எங்கள் உலகத்தில் அந்தக் கருத்துகள் ஏட்டில் எழுத்தாகவே உறக்கம் கொண்ட வண்ணம் இருக்கிறது. ஆனால் இங்கு அந்தச் சிந்தனை மலர்ந்து மணம்பரப்பிக் கொண்டிருக்கும் காட்சியை காண்கிறேன். எண்ணத்தில் தோன்றிய இலட்சிய உணர்வுகளை செயல்வடிவாக்கிய உங்களை பாராட்டுகிறேன். எங்கள் உலகில் நான் பிறந்த தமிழ்நாட்டுப் பகுதியில் முக்கண்ணன் என்று சிவபெருமானை வணங்குவார்கல். சிவனுக்கு நெற்றியில் ஒரு கண் உண்டு. அந்தக் கண் வழியே முருகன் என்றொரு கடவுள் தோன்றினார் என்றெல்லாம் கதைகள் உண்டு. ஆனால் இங்கோ கோடிக்கணக்கான முக்கண்ணர்கலை பார்க்கிறேன். ஆனால் நெற்றிக்கண் வழியே குழந்தை பிறக்கும் என்று இங்கு யாரும் கூறவில்லை. இங்கு செப்படி வித்தைகளும் தங்கள் சிந்தையை தராதது உங்கள் மீதுள்ள மதிப்பை மேலும் அதிகமாக்குகிறது. உங்களை விட்டு பிரிய எனக்கு மனம் இல்லை என்றாலும் பிரிவு ஒரு சாதனையைப் படைக்கும் என்றால் பிரியலாம் என்று விடை தருவீர்கள் என்று கருதுகிறேன். இந்த உடலில் பறக்கும் ஆற்றல் பழுது அடையும்வரை இதுபோன்ற பல சூரியக் குடும்பங்களை பார்க்க ஆசைப்படுகிறேன். காலங்கள் கடந்தது கடந்ததுதான். மறைந்துவிட்ட தந்தை வரப் போவதில்லை. மகன் தான் வருவான். மாண்டுவிட்ட தாத்தா வரப்போவதில்லை. எந்த ஒரு பூமியிலாவது எல்லா உலகங்களுக்கும் தொடர்பு கொள்ளும் வழியிருந்தால் உங்களுடன் தொடர்பு கொள்ளுவேன். எங்கள் உலகத்துப் பேரறிஞன் அய்ன்ஸ்டீன் அணுவே அண்டம், அண்டமே அணு என்றான். அவன் வகுத்த கோட்பாடு உண்மை என்பதை உணர்ந்து கொண்டேன். எல்லையற்ற இந்த பெருவெளியில் உருண்டு உலவுகின்ற மீன்களும், கோள்களும், ஒளியால் தொடர்பு கொண்டது என்று சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் கூறுகிறது. எல்லையற்றது அண்டப் பெருவெளி என்பதை விளக்க தமிழ்க் கவிஞன் ஒருவன் கூறியதை நினைத்துக் கொள்கிறேன். ஆம் அவன் கூறினான்.
கண்டவர் கூறினான்
விண்டவர் கண்டிலர்
என்று. அவன் இறைவனை நினைத்துக் கூறினான் என்று நான் கொள்ளவில்லை. ஒளியலைகள் பரவி நிற்கின்ற அண்டப் பெருவெளியின் விளிம்பினை பார்க்க முனைந்தால் அவன் இங்கு வரமுடியாது. அப்படியே வந்தால் அவன் அந்த விளிம்பை கண்டிருக்க முடியாது என்ற கருதுகோள் ஆராய்ச்சி பூர்வமாக அறிவியல் பூர்வமாக எவ்வளழு உண்மையானது என்பதை இந்தப் பயணத்தின் மூலம் உணர முயல்கிறேன். அதற்கு அன்பான் உங்கள் வாழ்த்துக்களை கோருகிறேன். என் பொருட்டு நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கும் இனிய அன்பிற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விடைதாருங்கள் என்று கூறி அமர்ந்தான். கூடியிருந்தோர் முகம் மலர முகத்தில் உள்ள மூன்று விழிகளில் பாச ஒளி மின்ன கையை அசைத்து விடை தந்தனர். தமிழ் நில் பெற்ற அந்த தங்க மகன் மேல் நோக்கிப் பறந்து விண்வெளியில் வேகமாகப் பறந்தான். வானப் பெருவெளி கருவானத்தில் விண்மீன்கள் கண்சிமிட்டி வழியனுப்பவும் வரவேற்கவும் தலைப்பட்டன. ஏகப் பெருவெளியில் ஆங்காங்கே ஒளிசிந்தும் பிரமாண்டமான மீன்கள், கோள்கள் மற்றும் நிறைவடிவாய் உயிர்ப் பொருள்கள் பிரபஞ்சப் பெருவெளி முழுவதும் போக்குவரத்துக் கருவியாய் இயங்குவதையெல்லாம் கண்ணில் காணும்போது கண்ணனையும் அவருடைய நண்பர் தையற்கலைஞர் பாலு சொன்ன சொற்கோவை அவனுடைய நினைவில் வந்தது.
எண்ணியல் மாற்றங்கள் பண்பியல் மாற்றங்களை தோற்றுவித்து திடப்பொருளாய், திரவப் பொருளாய், ஆவிப்பொருளாய் மாறிக்கொண்டு வளர்ந்து கொண்டு, என்றும் இருந்து கொண்டே இருக்கும். அதுதான் பல உலகங்கள் உருவாகும் பின் மாறும். மறையும் தோன்றும் என்று விடுகதையைப் போல் கூறுவார். முதலில் அதைக்கேட்டு நகைத்துக் கொண்டான். ஆனால் இன்று பொருளின் வடிவமும் பலமும் அவனுக்குப் புரிகிறது. ஒரு திறமைமிக நாடகக் கலைஞர் பல வேடங்களில் வருவதுபோல பொருள் பல்வேறு நிலைகளில் தன் திறன் காட்டுகிறது என்று எண்ணியவாறு பறந்து கொண்டு இருந்தான் சுந்தரலிங்கம். புத்துலகம் கண்ட புதுமனிதன் எனும் பூரிப்போடும் தமிழன் எனும் பெருமித உணர்வோடும்.

முற்றும்.

Thursday 19 January 2017

16 & 17 புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி…

நிலவுலகின் நிலை
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற வள்ளுவன் குறள் மொழிப்படி சுழலும் இந்த உலகில் எத்தனை வேறுபாடுகள், எத்தனை விசித்திரங்கள் என்று எண்ணிப் பார்த்தான். மண் வேறுபாடுகள், பருவ வேறுபாடுகள், தோற்ற வேறுபாடுகள், சுவை வேறுபாடுகள், சுக வேறுபாடுகள் வாழ்க்கை நிலையில் ஏற்படும் வேறுபாடுகள் மனநிலை வேறுபாடுகள், தத்துவங்களில், சித்தாந்தங்களில் உள்ள வேறுபாடுகள் அந்த வேறுபாடுகளின் விளைவால் தோன்றும் நன்மையும் தீமையும், ஆக்கமும் அழிவும் அவனிடம் அடையாளம் காட்டிக் கொண்டன.
ஒற்றுமையில் வேற்றுமையும் வேற்றுமையில் ஒற்றுமையும் அவன் சிந்தனையைக் கிளறியது. மனிதனின் உள்ளுறுப்புகள் ஒற்றுமையென்றாலும் வெளிப்புறத்தில் வேற்றுமையடைகிறது. வெளிப்புறத்தில் வேற்றுமையென்றாலும் உள்ளே உருவாகும் எண்ணங்களும் உறுப்பெறும் சிந்தனைகளும் ஒன்று படுகின்றன.
நிறம் மாறிய இனங்கள், குணம் மாறிய மனிதர்கள், தடம் மாறிய கொள்கைகள், நிலைமாறிய நிகழ்ச்சிகள், கோடுகள் எல்லையாகி நாடுகளாகிய நிலங்கள் எல்லாம் அவன்முன் தன் நிறம் காட்டி நின்றன. போதையின் விளைவாகத் தோன்றும் நலனும் நாசமும் காட்சிகளாகி அவன் கண்முன் நின்றன. அறிவியல் போதை ஆராய்ச்சிப் போதையாகி இந்த அகிலத்தை வளரச் செய்தது. மன ஆசை போதையாகி அழிவிற்கு வலிகோலியது. பொது வாழ்வுப் போதை பலரை புகழ் மனிதராக்கியது. பொல்லாங்கு மணம் கொண்டோர் கொண்ட போதையில் பலர் பொசுங்க நேர்ந்தது. மனம் கொண்ட அன்பு காதலுக்காக அரச பதவியைத் துறப்பதும், அரசுப் பதவிக்காக அன்பு நெறியைக் கொல்வதும் ஆண்டாண்டு காலமாக நடந்த வண்ணம் இருக்கிறது. கயமை, கள்ளத்தனம், கையூட்டு, உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசும் கபட நிலை ஆகிய யாவும் கைவீசி வேக நடை போடுவதாகவே தோன்றியது அவனுக்கு. மருந்து மிகுதியானால் நஞ்சாவதும் நஞ்சில் நலம்பயக்கும் நல்ல மருந்திருப்பதும் இயற்கை எத்தனை விளையாட்டுக்களை நடத்திக் காட்டுகிறது என்று எண்ணிக் கொண்டான். கண்ணுக்குத் தெரியாத சிறிய அணுவில் ஒரு உருவத்தின் உறுப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய இயற்கை, பெரிதாக உருக்கொண்ட உடன் எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்த வைக்கிறது. அன்பும், பண்பும், கனிவும் காதலும், கருணையும், எழிலும், இதய ஈரமும், இளகிய மனச்சாரமும், பெருங்குணமும், பேராண்மையும் ஆகிய உணர்வுகளைக் கொண்ட உருவங்களை உருவாக்கும் இயற்கை, இந்த உணர்வுகள் இம்மியும், இல்லாத கல் மனக்காரர்களையும் தோற்றுவிக்கிறதே என எண்ணி வியப்புற்றான், பின் வேதனையுற்றான். எல்லையற்றதாக உலகம் இருக்க வேண்டும் என்று இனிய தமிழ்க் கவிஞன் கணியன் பூங்குன்றனும் செர்மானிய சிந்தனைக் கருவூலம் காரல் மார்க்சும் கண்ட கனவுகள் இன்றும் கனவாகவே இருப்பதாக உணர்ந்தான்.
உலகு உலகு என்று பறைசாற்றிய தமிழ்க் கவிதைகள் தரும் உணர்வுகள் ஒன்றிய உலகத்தை உருவாக்கவில்லை. மாறாக உரைத்த தமிழினத்திற்கே பாதகமாக முடிந்ததைக் கண்டான். பொய்மைகள் புரையோடி விட்ட இந்த மண்ணில் பொல்லாங்குத் தனம் போர்க்கோலம் பூண்டுவிட்ட இந்த உலகில் உண்மைகல் உலா வர வேண்டும். நீதி உணர்வுகள் நிலைக்க வேண்டும். மனித மனங்களில் நல்லொளி வீச வேண்டும் என்று தன் உள்ளக் கருத்துக்களை உலவ விடும் முயற்சியில் தங்கள் உயிர்களை இழந்த உத்தமர்களை நினைத்து கண்ணீர் உகுத்தான்.
இயற்கை தன் இதயக் கதவுகளைத் திறந்து வைத்து, எல்லோரும் வாருங்கள் என்னிடமுள்ள செல்வங்களை வாரிச் செல்லுங்கள், இன்புற்று வாழுங்கள் இனிய உணர்வுகளை உங்கள் இதயத்தில் தேக்கி வையுங்கள் என்று வேறுபாடின்றி எல்லோரையும் அழைக்கிறது. காடு வளம், கனிவளம், கடற்செல்வம், மலைவளம், மழை வளம் என்று தன் கருவறைக்குள் கணக்கற்ற செல்வங்களை காத்து வரும் இயற்கையை நேசிக்காமல் அதற்கு தன் நன்றி உணர்வை காட்டாமல் அந்த இயற்கைக்கே இடையூறு விளைவிக்கும் மனிதர்களை, அதுவும் கற்றறிந்த கனைவான்களை எண்ணி கவலையுற்றான். வான் வெளியை வலம் வரும் காற்று மண்டலத்தை களங்கப்படுத்துவோரை மனதில் கடிந்து கொண்டான்.
ஆதிக்க மனநிலையும், அடிமை மனோபாவமும் ஆதிகாலத்தில் இருந்த பல்வேறு நிலைகளில் பல்வேறு உருவங்களில் இந்த உலகில் வாழ்ந்து வருவதை எண்ணி வருந்தினான். ஆழ்ந்து சிந்திக்காமல், அறநெறியை நெஞ்சில் கொள்ளாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று மனிதர்கள் வாழ்வதால், வளைந்த வரலாறுகளும், வாழ்வில் சரிவுகளும் தோன்றுவதைக் கண்டான் தூய மகன் சுந்தரலிங்கம்.
புயல், பூகம்பம், இடி, மின்னல், மழை, எரிமலைச் சிதறல் ஆகிய இயற்கைச் சீற்றங்களால் இறந்தோரை விட, மதச் சண்டையில் மாய்ந்தோர் மிகுதி எனும் நிலை அஜன் மனதை வாட்டியது. நூற்றாண்டு கால சிலுவைப் போரில் மடிந்த வீரர்களும் மற்றும் பல்வேறு மதச் சண்டையில் இறந்தவர்களையும் நினைத்து வருந்தினான்.
தொண்மைக் காலத்தில் தமிழ் மகள் அவ்வை கூறிய குற்றம் பார்க்ணுன் சுற்றமில்லை, என்பதை உள்ளத்தில் உறைய வைக்காத காரணத்தால் மனித இனங்கள் அனைத்தும் ஓரிடத்தில் இருந்தே உருவானது எனும் உறவுப் பாதையை மறந்து போனதால் நெறிகெட்டு நேர்வழி கெட்டு மதபோதையில் சிக்கி மனிதர்கள் மாய்வதை எண்ணி மனம் கலங்கினான்.
இத்தனைக்கும் இடையில் அறிவியல் வழியாக உலகை உயர்த்த ஓயாது போராடும் நல்லறிவாளர்களும், மனித நேயத்தை மறந்துவிடாத மாமனிதர்களும் இந்த உலகில் சீர்மைகள் நிலவ, சிறப்புகள் துலங்கச் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் அவனுள் தோன்றியது.
உலகைச் சுற்றி வரும்போது அவன் பார்த்த காட்சிகளெல்லாம் ஒளிநாடா போல் அவன் உள்ளத்தில் ஓடிக் கொண்டிருந்தது. கண்டங்கள், கடல்கள், பெருங்கடல்கள், குழந்தைகள் போல் கடலில் விளையாடும் கடல்ச்சீல்கள், அலைகடல் மீது அசைந்தாடி மகிழும் ஆயிரக்ணீணக்கான கப்பல், மனித உடலில் ஓடும் நரம்புகள் போல் உலகெங்கும் உள்ள இருப்புப் பாதைகள். அதன்மீது கடமையே கண்ணென கருதிச் செல்லும் வண்டித் தொடர்கள் வானில் பறவையைப் போல் நீந்தும் வாகனங்கள், இடம்விட்டு இடம்மாறி இரை தேடிச் சென்றாலும் தன் இருப்பிடத்திற்கே திரும்பி வரும் இனிய அழகிய பறவைகள், மலை முடிகள், அதன் மீது கதிரவனின் மஞ்சள் ஒளிபடும்போது ஏற்படும் பேரழகு, வானுயர்ந்து நிற்கும் மரக்ணீõடுகள், மலர்ச் சோலைகள், பயன்மிகு பழத்தோட்டங்கள், பாசமிகு மனிதர்கள், வலிமையுடன் எளிமையும் மிக்க அரசர்கள், ஆண்மை மிக்க அரசுத் தலைவர்கள், அடங்கி அடிமையாகி கிடக்கும் அரசு நிர்வாகிகள், பயன்மிகு நிலங்கள், பாழான இடங்கள் ஆகிய அனைத்தும் அவனுக்கு மீண்டும் தன் முகங்காட்டி நின்றன. இதற்கிடையே அவன் இதயம், அவன் பிறந்த பகுதிக்கு மீண்டும் பறந்து சென்றது. என்னதான் உலகைச் சுற்றினாலும், அண்டவெளியில் அடுத்து அவன் செல்ல பிறந்த மண்ணில் மீதுள்ள பாசத்தை துறந்திட அவன் உள்ளம் இணங்கவில்லை போலும். அதிலும் இரத்த நாளத்தில் இணைந்துவிட்ட இனிய தமிழ் மொழியை பேசிப் பழகி வாழ்ந்த உயிர் தமிழகத்தையும் அவன் ஊரையும் எப்படி மறக்க இயலும். இளகிய இதயத்தோடும், கலங்கிய விழிகளோடும் தமிழகத்தையும் அவன்  உறவினர், நண்பர்களையும் தன் உள்ளத்தில் பதித்துக் கொண்டான். தமிழ் இலக்கியங்களின் மைய இழையாக ஓடும் அறிவியல் கலாச்சார உணர்வுகளை ஏந்தும்... அதாவது மனம் திறந்து உள்ளத்தை உரைக்கின்ற உள்ளங்கள் உலகில் அதிகமாகும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் மனிதர்கள் மாய்வார்கள், மறைவார்கள். உலக மனிதர்கள் அனைவரும் உறவினர்கள் எனும் பாச உணர்வு மனித உள்ளங்களில் தழைத்து வளரும் என்று உறுதியாக எண்ணினான் உயர்ந்த மனிதன் சுந்தரலிங்கம்.
இதிகாச மடமைகளை எடுத்துக்கூறும் இலக்கிய மன்றங்கள், மதச் சடங்குகளை மக்களிடம் பரப்பும் முயற்சிகளில் ஈடுபடும் பெரிய மனிதர்கள். பகவத் கீதையின் பம்மாத்தையும் பைபிளின், பழைய - புதிய ஏற்பாடுகளையும் குர்ஆனின் கூற்றுக்களையும் உதயமாகும் ஒவ்வொரு நாளும் ஓங்கி முழங்கி வரும் அமைப்புகள் ஆகிய அனைவரும் அந்த பயனற்ற பாதையில் இருந்து விலகி பயன்மிகு விஞ்ஞானத்தை விளக்கும் - விவரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். உதவாக்கரை சொற்களையெல்லாம் மனதில் உருப்போட்டு எடுத்துக்கூறும் வேதபாராயண விற்பன்னர்கள் எல்லாம் அறிவியலை மக்களிடம் எடுத்துக் கூறும், ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட வேண்டும். அறிவியல் உணர்வுகளை மக்களிடம் பதிய வைத்தால், ஒவ்வொரு மனிதனின் செயலிலும் அறிவியல் உணர்வுகள் ஒளி வீச தொடங்கினால், வேதங்கள், இதிகாசங்கள், உபநிடத்துக்கள், சுலோகங்கள் கூறுகிறதே இறைவன் உறைகின்ற சொர்க்கம், அந்தச் சுகம் அனைத்தும் எல்லோருக்கும் இந்த மண்ணில் கிடைக்கும். இதை மதவாத பித்தர்கள் உணர வேண்டும், சீரிய சித்தர்களாக மாற வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டான்.
அய்ன்ஸ்டினின் தத்துவத்தை, அய்சக் நியூட்டனின் விதிகளை, ஆல்வா எடிசனின் படைப்புகளை டார்வினின் பரிணாம வளர்ச்சியை, மெண்டலிபின் கோட்பாடுகளை எல்லார்க்கும் எடுத்துக் கூறும் இனிய தொண்டினை கற்றவர் மேற்கொள்ள வேண்டும். விஞ்ஞான உணர்வுகளை மனிதர்கள் உள்ளத்தில் ஊன்றி விதைத்து வளர்த்து மலர்ந்து கனிய வைக்க வேண்டும். அறிவியல் பண்பாடு எல்லோரு மனதிலும் குடிகொள்ள வேண்டும், என்று விரும்பினான். வேறுபாடுகளும், வீண் மனிதர்களும் நிரம்பியிருக்கின்ற இந்த உலகை வேதனையோடு பார்த்தான்.
இந்த உலகில் நிலவும் இடர்பாடான சூழல்கள் இல்லாத உலகம் ஒன்று இருக்குமா என்று சிந்தித்தான். அறிவியல் அறிஞர்களின் பல்வேறு ஆய்வுகளை ஆராய்ந்தது அவன் மனம். அண்டவெளியில் பயணம் செய்து அப்படியொரு உலகை காணத் துடித்தது அவன் உள்ளம்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம், கருதி
இடத்தாற் செயின்.

என்ற குறள் மொழியின்படி செயல்படத் துணிந்தான் சூப்பர்மேன் சுந்தரலிங்கம்.
விண்வெளியில்
உலகின் விளிம்பில் நின்றுகொண்டு மீண்டும் ஒருமுறை தான் பிறந்த தமிழ் நிலத்தையும் தமிழ் இலக்கியச் செல்வங்களையும் உயிர் தமிழின் உயர்வையும் எணணியபோது அவன் மனம் கலங்கித் தவித்தது. உருகிய உள்ளத்தை சற்றுத் தெம்புடன் உறைய வைத்தவாறு உயரே விழி நோக்கினான். விழி சென்ற திக்கில் அவன் உடல் மேலேறியது. முகில் கூட்டத்திற்கு கீழே உருண்டு வரும் உலகை தன் விழிகளால் பார்த்தான்.
இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!
மருட்டுகின்ற மதத் தலைவர் வாழ்கின்றாரே!
வாயடியும் கையடியும் மறைவதென்னாள்?
என்று முழங்கிய புரட்சிக் கவிஞன் தோற்றமும் அந்த மாக் கவிஞனை  மக்களிடம் பதித்த பேரறிஞர் அண்ணாவும் அண்ணாவை அடையாளம் காட்டிய தந்தை பெரியாரும் இதயத்தில் பதிந்தனர்.
உலகம் பல வண்ண ஓவியமாய் கண்ணுக்கு குளுமையூட்டியது, தூரத்தே இருந்து பார்க்கும்போது உருண்டையாய் கூடத் தெரியவில்லை. நிலவைப் பார்ப்பதுபோன்ற தோற்றமே தெரிகிறது. ஒளிவட்டம் காட்டும் இதன் மேற்பரப்பில் தான் எத்தனை நிகழ்ச்சிகள் எத்தனை எண்ணங்கள், எவ்வளவு ஆசைகள், அதற்காக எவ்வளவு அழிவுகள், அவலங்கள், அத்தனையும் மீண்டும் அவன் முன் நின்றன!
நீல வடிவாய் தெரிந்த வானத்தில் கருமை தன் கரங்கொண்டு தழுவ ஆரம்பித்தது. பூமியல் மட்டும் நீலநிறமாய் தெரிவது ஏன்? காற்று மண்டலத்தில் உள்ள தூசியில் கதிரவனின் ஒளிரேகைகள் படுவதால் ஏற்படும் தோற்றமே அது என்று உணர்ந்தான்.
பூமியில் இருந்து செலுத்திய பல்வேறு செயற்கைக் கோள்கள் பூமியை சுற்றிக்கொண்டு இருப்பதைப் பார்த்த சுந்தரலிங்கம் மனித ஆற்றலினை எண்ணி மகிழ்ந்தான். சூரியனை சுற்றிவரும் கோள்கள் ஒவ்வொன்றுக்கும் செல்ல ஆசைப்பட்டான் என்றாலும், அந்தக் கோள்களைப் பற்றி நிலவுலக அறிஞர் பெருமக்களின் ஆய்வுகளை தெரிந்து வைத்திருந்ததால் புதிதாக அங்கே காண ஏதுமில்லை என்று முடிவு செய்து இந்த சூரிய குடும்பத்தை விட்டு மற்றொரு காலாக்சிக்கு செல்ல முடிவெடுத்தான். அவன் செல்லுகின்ற பாதையில் அவன் கண்ட காட்சிகள் இயற்கையின் இனிய கோலத்தை அவனுக்கு எடுத்துக் காட்டின! சூரியனை சுற்றிவரும் கோள்கள், அந்தக் கோள்களை சுற்றிவரும் துணைக் கோள்கள் அத்தனையும் அவன் முன் அழகிய காட்சியாகத் தோன்றியது. தகத்த காயமாய் பொன்னொளியை அள்ளி வீசும் பகலவனும், அதைச் சுற்றும் வியாழனும், வியாழனின் பதினான்கு சந்திரன்களும் சுற்றிலும் வாயுக்களின் வளையத்துடன் சுற்றிவரும் சனிக்கோளும் செந்நிறக் கோளுமாய் சுற்றிவந்து கண்ணுக்க குளுமைதரும் செவ்வாய்க் கிரகமும் சாம்பல் நிறத்தில் தள்ளாடி தள்ளாடி நடக்கும் புதனும், தூரத்தே தெரிகின்ற நெப்டியூனும் புளூட்டோவும், திடப் பொருளாக, திரவப் பொருளாக ஆவி நிலைப் பொருளாக உருண்டபடியே வாழ்வதைக் கண்டான். எல்லாக் கிரகங்களின் இயக்கத்தையும் ஒரே இடத்தில் இருந்து காணும் வாய்ப்பு அவன் உள்ளத்தில் உவகையை பெருக்கெடுக்க வைத்தது. சூரியக் குடும்பக் கோள்கள் மட்டுமின்றி தொலை தூரத்தில் இருந்து ஒளிவீசும்  கோடிக்கணக்கான விண்மீன்களின் பேரொளியில் மனம் பறி கொடுத்தான். நெப்டியூனைத் தாண்டிச் செல்ல நினைத்தவன் ஏனோ அதன் எதிர் திக்கில் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
இரவு பகல் என்றெல்லாம் அந்த விண்ணின் விரிவானத்தில் ஏதும் தெரியவில்லை. காலை மாலை என்று நேரங்கள் பிரிக்கப்படவில்லை. பொன்னிறக் கதிர்களை அள்ளிவீசும் தன்னொலி விண்மீன்களும் அந்த விண்மீன்களிடம் இருந்து தானமாகப் பெற்று குளுரூட்டி ஒளி வழங்கும் துணைக் கோள்களும் அவன் கண்ணிலிருந்து மறையாமல் தண்ணொளி காட்டி நின்றன. வியாழன் சூரியனாக மாறிவரும் விந்தையும் அவன் கண்ணுக்குத் தெரிந்தது. ஆம் பூமியில் தாத்தா - தந்தை - மகன் - பேரன் என்பது போல் ஒருவரின் ஆற்றல் குறைகின்ற போது, மற்றொருவர் அந்த இடத்தை நிறைவது செய்வது போல விண்வெளியிலும் நிகழ்கிறது. சூரியனின் ஆற்றலை வியாழன் பெற்று சூரியனாக மாறி வருவைதக் கண்டான். சூரியன் முழுமையாகத் தன் ஆற்றலை இழக்கின்றபோது வியாழன் சூரியன் செய்கின்ற வேலையை மேற்கொள்ளும் என அறிந்தான். அது மட்டுமின்றி தூசியின் வடிவில் உயிர்ப் பொருட்கள் அண்டவெளியில் முழுவதும் பயணம் செய்த வண்ணம் இருப்பதைக் கண்டான். விண்வெளியில் பறந்து கொண்டே இருந்தால் உடல் முதுமையடைவதில்லை எனும் உண்மையும் புரிந்தது. எங்கும் ஏகவெளியாய் தெரிந்த விண்பரப்பில் உருண்டபடியே உயிர் வாழ்கின்ற விண்மீன்களையும் கோள்களையும் தூசிகளையும் தவிர வேறெதுவும் தெரியவில்லை அந்த கம்ப்யூட்டர் கண்ணுக்கு. பூமியில் புராணங்களில் சொல்லப்படும் வாசமிகு வைகுந்தமோ, கானமிகு கைலாயமோ, சீர் நிறைந்த திரிசங்கு சொர்க்கமோ, எமலோகமோ இருப்பதாக தெரியவில்லை.
இந்திர லோகமோ, அங்கு ஆளுமை செய்யும் இந்திரனோ, அவனுக்கு முன் ஆடும் மயிலாய் அழகு காட்டும் அரம்பையோ, ஊர்வசியோ, மேனகை திலோத்தமையோ யாரும் இல்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள். நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகள் அவர்களின் அழகு மிகுந்த ரிஷிபத்தினிகள், கின்னரர், கிம்புருடர், அஷ்டத்திற்கு பாலகர்கள், அசரீரிக்குரல்கள் எதையுமே காணவில்லை அந்த ஏகப் பெரு வெளியில், ஓம் எனும் பிரணவமந்திரத்தின் ஓங்காரக்குரல் எதுவும் கேட்கவில்லை அவனுக்கு. மூச்சுக்கு ஒருதடவை நாராயண எனும் நாமம் தொனிக்க நாவசைத்து கானம் பாடும் நாரத மாமுனியைக்கூட காணவில்லை.
அண்டசாரசரமெங்கும் ஆட்சி புரிகிறாள் என்று கதை அளக்கப்படும்
ஆதிபராசக்தியாவது தெரிகிறாளா என்று பார்த்தான் எங்கும் அவளைக் காணோம். மணம் முடிக்காமல் மாங்கல்யம் சூடாமல் அழகுமிகுந்த பெண்களை அள்ளிச்சென்று உடலின்பம் பெறுகின்ற கரிநாவர்களையும் காணவில்லை.
பரமண்டல ராஜ்ஜியமோ, பரமபிதாவோ, பரிசுத்த ஆவியோ அங்கு இல்லை. புராணங்களில் சொல்லி வைக்கப்பட்டதெல்லாம் வெறும் பொய்கள், புளுகுமூட்டைகள், புனைக் கதைகள் என்று புரிந்து கொண்டான். புதுமனிதன் சுந்தரலிங்கம். உழைப்பவர்களின் பொருளை உறிஞ்சி வாழ்வதற்காக உழைக்காத எத்தர்கள் செய்த ஏமாற்று மொழிகள் அவை என்று எளிதாக அவன் உள்ளத்தில் பதிந்தது.
கண் முன்னே காணும் உலகில் கஷ்டங்கள் இருந்தாலும் கவலைப் படாதீர்கள். பொய்யான இவ்வுலகில் சுகம் இல்லை என்று சோதிக்காதீர்கள். இவ்வுடல் மறைந்த உடன் வானுலகில் மங்காத நலம் கிடைக்கும். மனம் களிக்கும் என்றெல்லாம் எவ்வளவு நயமாக மக்களை ஏமாற்றி வாழ்கிறார்கள் எத்தர்கள் என்றெல்லாம் எண்ணிக் கொண்டான்.
சூரிய குடும்பத்தின் கிரகமான புளுட்டோவைக் கடந்து அவன் பயணம் செய்த வண்ணம் இருந்தான். நெடுந்தொலைவுப் பயணம் செய்தவன் வியப்பூட்டும் ஒரு காட்சியைக் கண்டான். பூமியிலிருந்து புறப்பட்டு புவியின் ஈர்ப்பு நிலையைத் தாண்டி வெற்றிடத்தில் பயணம் செய்த போது இடைப்பட்ட கோள்களைப் போல இங்கும் பல்வேறு கோள்கள் சுற்றிவருவதைக் கண்டான். ஆம், அவன் மற்றொரு சூரிய குடும்பத்தின் எல்லைக்கு வந்து விட்டான் என்பதை உணர்ந்து கொண்டான். புளுட்டோ கிரகத்தை தாண்டியவுடன் அவன் கண்ட முதல் கிரகம் நெப்டியூனைப் போல இருந்தது. அதையும் கடந்து நெடுஞ் தொலைவுப் பயணம் செய்த பின்னர் ஒரு கிரகத்தின் முகில் வளையத்திற்குள் நுழைந்தான். என்ன ஆச்சர்யம் அவன் நிலவுலகில் பார்த்தது போன்ற காட்சிகள் அவன் கண்ணில் தோன்றியது.

Wednesday 18 January 2017

15. புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி…

15. புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி…
அமெரிக்கா
அமெரிக்கக் கண்டம் வட அமெரிக்கா, தென் அமெரிக்க என பிரித்துக் கூறப்படுகிறது. இந்தியத் துணைக் கண்டத்தைப் போலவே இங்கும் வடக்கு வளர்ந்து வளம் கொழிக்கவும், தெற்கு தேய்ந்து திக்கு முக்காடவும் ஆன நிலை தெரிகிறது. தென் அமெரிக்காவில் மக்கள் தொகை பெருக்கம், அறியாமை, அதனால் அரசியல் குழப்பம் ஆகியவற்றால் அலைக்கழிக்கப்படுகிறது. அர்ஜென்டினா, பிரேசில், பெரு, சிலி, கிரேனடா என்ற நாடுகளையெல்லாம் கண்டான். மெக்சிகோவின் பழைய வரலாறு, அவற்றின் அழகுமிகு வரலாற்று சின்னங்கள், ஸ்பானியர்களிடம் அவர்கள் பட்ட சித்ரவதைகள் என்றெல்லாம் காட்சிகள் அவன் கண்ணில் தெரிந்தது.
உலக கால்பந்தின் சாம்பியன்களான பிரேசில் பீலே, அர்ஜெண்டினா மாரடோனா, ஆகிய வல்லமை சாலிகள் அவன் விழியில் முகம் காட்டினர். கனடாவின் வான்பரப்பில் நீந்தியவாறு அதன் வளமிகு பகுதிகளை கண்டான். நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுகளித்த பின் அப்பெரு நதியைக் கடந்து அய்க்கிய அமெரிக்க நாட்டில் தன் பயணத்தைத் தொடர்ந்தான் சுந்தரலிங்கம். கொலம்பஸின் குறிப்புகளால் மக்கள் குடியேறியது அக்கண்டம் என்று சொன்னாலும் அதற்கு முன்னரே அங்கு சென்ற அமெரிக்கன் வெஸ்புடின் என்பாருடைய பெயரால் அது அழைக்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே அங்கு குடியேறிய திராவிட மூதாதையரின் பெயர் சூட்டப்படவில்லை என்று அறிந்து வருந்தினான்.
அமெரிக்கக் கண்டத்தில் தங்கமும் பிறமணிகளம் நிறையக் கிடைக்கின்றன என்று அறிந்து அய்ரோப்பியர்கள் கூட்டம் கூட்டமாக குடியேறினார்கள்.
மிகுதியாக பிரிட்டானியர்களும் அய்ரிசுக்காரர்களும், ஸ்பானியர்களும், பிரெஞ்சு மக்களும், பிற அய்ரோப்பிய சமுதாயத்தினரும் தங்கள் குடும்பங்களுடன் அக்கண்டம் முழுவதையும் தங்கள் இருப்பிடமாக்கினர். அங்கு வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள் பலரை மண்ணுக்குல் புதைத்தனர். கால ஓட்டத்தில் பல்வேறு பிரிவினர்கள் ஒன்றாகி ஒரு புதி சமுதாயமாக உருவெடுத்தனர். அறியாமையில் உழன்ற ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர். வேலைகளுக்காக அழைத்துச் சென்றவர்களை இனவெறி நிறவெறி காரணமாக வேதனைப் படுத்தினர். கறுப்பர்களை அடிமையாக கருதிய அவர்கள் தந்தை என்றாலும் தன்னை அடிமைப்படுத்த நினைக்காத உணர்வோடு ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடினர். முன்னணி தளகர்த்தராக விளங்கிய ஜார்ஜ் வாஷிங்டன், முதன் குடியரசுத் தலைவராக அமர்ந்தார். அவருக்கு துணை செய்த பெஞ்சமின் பிராங்க்ளின் செப்பர்சன் போன்றோர் அமெரிக்க மண்ணை வளப்படுத்த உழைத்தனர். வழிவழியாக பல மாமனிதர்கள் அமெரிக்காவை உயர்வின் உச்சிக்கு அழைத்துச் சென்றனர். ஆபிரகாம் லிங்கன், ஒரு உள்நாட்டுப் போரையே சந்தித்து கறுப்பின மக்களுக்கு உயர்வினை உரிமைகளை வழங்கினார்.  தன் இன ஆதிக்கத்தையே எதிர்த்த அமெரிக்கர்கள் உலகம் முழுவதும் தன் ஆதிக்கத்தில் கொண்டுவர முயன்படி இருக்கும் உணர்வைத் தவிர மற்றபடி அமெரிக்கா உலகிற்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது என்பதை உணர்ந்தான் சுந்தரலிங்கம். ஆங்கில மொழியின் உச்சரிப்பைத் தவிர மற்றபடி அய்ரோப்பியரை ஒத்திருக்கும் அமெரிக்கா அறிவியல் வளர்ச்சியில் வானோக்கி வளர்த்திருக்கிறது. கற்பனையில் உலவிய எண்ணங்கள், செய்திகளையெல்லாம் நடைமுறைக்கு உகந்ததாக்கி வாழ்விற்கு வளம் சேர்த்திருக்கிறது... சேர்த்து வருகிறது அமெரிக்கா.
அமெரிக்காவின் முன்னேற்றம் அதனால் ஏற்பட்டுள்ள அறிவியல் வளர்ச்சி, அந்த வளர்ச்சி தரும் அதிசய அற்புத கருவிகள் ஆகிய அனைத்தும் அய்ரோப்பாவை சார்ந்ததே - மக்களாட்சி மாண்பு, மாமேதைகளின் திறம், அம் மனிதர்களின் உழைப்பால் ஏற்படும் மகிழ்ச்சிமிகு இனியசூழல் இலக்கியச் செல்வங்கள், எண்ணற்றக் கருத்துக் கருவூலங்கள், அமெரிகாவின் எந்தப் பகுதியும், எழில் நிறைந்ததாகவே தெரிந்தது இனியவன் சுந்தரலிங்கத்திற்கு. உலகில் உயர்வாழ்வினைப் பெற்றிருக்கின்ற அந்த ஒப்பற்ற நாட்டின் ஒவ்வொரு பகுதியும் அவன் உள்ளத்திற்கு மகிழ்வூட்டியது.
அறிவியல் துறையில் அய்ரோப்பாவை மிஞ்சிய நிலையில் அமெரிக்கா விளங்குவதைக் கண்டான். நாளும் புதுப்புது கருவிகளை கண்டுபிடித்து மனித குலத்தை வாழ்விக்கவும், பயமுறுத்தவும் செய்கிறது அமெரிக்கா என்பதை அறிந்தான் சுந்தரலிங்கம். ஒன்றிணைந்த நாடுகளின் ஒவ்வொரு நகரமும் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சியை குவித்த வண்ணம் இருந்தது. நியூயார்க் நகரம் உலகில் சிறந்த ஒன்றாகத் திகழ்வதைக் கண்டான்.
உயர்ந்த கட்டடங்களும், வானை முட்டுகின்ற வகையில் எப்போதும் பறந்த வண்ணம் செல்லுகின்ற வானூர்திகளும், சாலையில் செல்லுகின்ற வகையில் அழகிய வண்டிகளும் அவனை மகிழ்வித்த வண்ணம் இருந்தன. நியூயார்க்கில் அமைந்துள்ல சுதந்திரதேவி சிலை அவன் சிந்தைக்கு இனிப்பூட்டியது.
அந்த நகரில் அமைந்துள்ள உலக மாமன்றமான அய்க்கிய நாடுகள் சபையை கண்டுகளித்தான். உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டது. அம்மன்றம் என்பது அறிந்து உவகை கொண்டான். போர்களற்ற புத்துலகை உருவாக்க உருவான அய்க்கிய நாடுகளின் அமைப்பு நேரிய நிலையில் நெஞ்சுயர்த்தி நடைபோடும் நிலையில் இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தான். நாட்டுப்புற பஞ்சாயத்தைப் போல் வல்லமைமிக்க சில நாடுகளுக்காக அது வாழ்தாகக் கூடத் தோன்றியது அவனுக்கு. ஆயுதங்களை அழித்திட அனைத்து நாடுகளுக்கும் ஆணையிடும் நிலையில் அது இருப்பதாகத் தோன்றவில்லை. வலிவுள்ள சில நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் இருப்பது நியாயந்தானா? என்று தோன்றியது. பாலத்தீனத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டு இஸ்ரேலிடமிருந்து அதை மீட்காத ஐ.நா. தென் ஆப்பிரிக்காவிற்கு வெறும் வாய் மொழித்தடையை மட்டும் அறிவித்து விட்டு ஈராக்கிற்கு எதிராக மட்டும் பன்னாட்டுப் படைகளை ஏவி விடுவது எந்த வகையில் நியாயம் என்று தோன்றியது சுந்தரலிங்கத்திற்கு, அழிவினை ஏற்படுத்தும் அனைத்து போர்க் கருவிகளைக் கொண்டு ஈராக்கை அழித்து அடி பணியவைக்க முயலும். ஐ.நாவை எண்ணி வருந்தினான். அவன் ஒரு காட்சியைக் கண்டு நெடுநேரம் அந்த இடத்திலேயே தன் பார்வையை நிறுத்தி வைத்தான்.
யேல் பல்கலைக் கழக வளாகம் தான் அது. தமிழ்த்தாய் வயிற்றிலுதித்த தங்கமகன் அண்ணாவின் நினைவுகளை அவனுக்கு வழங்கியது தமிழகத்து பருத்தியில் வந்த பணத்தில் உருவான அந்தப் பள்ளி பல்கலைக் கழகமாக உருவெடுத்ததை எண்ணி உளம் களித்தான். சென்னை கவர்னர் எலிகுயேலின் பெயரில் வளர்ந்த அந்தக் கல்விப் பெருமனை அவனை களிப்பில் ஆழ்த்தியது. ஓய்வே கிடைக்காத பொதுநல உழைப்பாளிகளை அழைத்து தன் மாணவர்களுடன் சில நாட்கள் வாழச் செய்தது அந்தப் பல்கலைக் கழக பணிகளில் ஒன்று. அந்த வகையில் உலகில் ஆறாவது தலைவராக அண்ணா அழைக்கப் பெற்று மதிக்கப்பட்டார். அந்த மாணவர்களுடன் அந்த அரும்பெரும் அற்புதத் தலைவன் சில நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்தார். அந்த இனிய காட்சிகள் அவனுள் தோன்றி இனிப்பூட்டியபடியே இருந்தது. அந்த இனிய நினைவுகளோடு வாஷிங்டனுக்கு பறந்து சென்றான்.
அமெரிக்காவின் தலைநகராக விளங்கும் அந்த இனிய நகரத்தில் அந்நாட்டு குடியரசுத் தலைவரின் வெள்ளை மாளிகை அவன் விழியில் பதிவாகியது. எத்தனையோ நன்மைகளுக்கு ஊக்கமூட்டும் அந்த வளமனை பல துயரங்களுக்கம் வழி அமைக்கிறது என்று எண்ணினான். சீரிய முறையில் சில நூற்றாண்டு காலம் மக்களாட்சி மாண்புகளை காத்துவரும் பண்பினை வாழ்த்தினான். உலக மக்களை அழைத்து உயர் மேதைகளாக்கி தன்னுடைய நாட்டிலேயே வைத்துக் கொள்ளும் உயர் மனதைப் பாராட்டினான். வாஷிங்டனிலிருந்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கும பறந்து சென்றான். சீர்மிகுந்த சிகாகோ நகரம், சான்பிரான்சிஸ்கோ, உலக மக்களை கவர்ந்த கென்னடியின் உயிர் பிரிந்த டல்லாஸ் ஆகிய நகரங்களை கண்டான். பிளாரிடா முனையில் விண்வெளிக் கலங்களை செலுத்தும் நிலையத்தை கண்டு மகிழ்ந்தான். கற்பனையில், கருத்துக்களில் இருந்த விஞ்ஞானம், கலிலியோவால் பரிசோதனைக்குக் கொண்டு வரப்பட்டு அய்சக் நியூட்டனின் முயற்சியால் ராயல் அறிவியல் கழகம் தொடங்கப் பெற்று அய்சக் நியூட்டனின் விதிகளைப் பின்பற்றி வளர்ந்து அறிவு விரிந்து விண்வெளியை வெற்றிகொள்ளும் அளவுக்கு விரைந்தோங்கி நிற்கிறது. வானில் கலம் செலுத்திய ரைட் சகோதர்களை நினைத்து நெஞ்சம் மகிழ்ந்த சுந்தரலிங்கம் வான்வீதியில் முதல் ஸ்புட்னிக்கையும் முதல் மனிதன் காகரினையும் பறக்க விட்ட ரஷ்யர்களையும் நெஞ்சில் கொண்டு வந்து போற்றினான். ஜப்பானியர்களின் குண்டுகளால் இரண்டாவது உலகப் போரில் தாக்கப்பட்ட பெர்ல் துரைமுகத்தைப் பார்த்து கண் கலங்கினான்.
உலகில் முதல் தரமான கடற்கரை எனப்படும் மியாமியைப் பார்த்தபோது சென்னைக் கடற்கரையின் மணற்பரப்பு நினைவுக்கு வந்தது. வெப்பத்தில் வாடும் மக்களுக்கு குளிர்தரும் கடற்காற்றை வாழ்த்தினான். வளமிகு மனிதர்கள் ஆண்டில் பெரும் பகுதியை இங்கே களிப்பதைக் கண்டான். கடற்காற்றை சுவாசித்து சன்பாத் எனும் கதிரொளியில் குளித்து சுகம்காணும் உல்லாசிகளை உவகையோடு பார்த்தான். அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள அந்த கடல்பரப்பு இதுவரை எத்தனையோ வானூர்திகளையும் கப்பல்களையும் விழுங்கியிருக்கிறது. அப்படி விழுங்குவதற்கு காரணம் என்ன என்பது இதுவரையில் விளங்காத ஒன்றாக இருக்கிறது. ஆனால் சுந்தரலிங்கத்தை ஏதும் செய்யாததது அவனுக்கு வியப்பாக இருந்தது. அமெரிக்காவை சுற்றி வந்த சுந்தரலிங்கம் அமெரிக்காவின் இனிய பகுதியான லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு வந்தான். அங்கு அமைந்துள்ள தாரகைகள் மின்னும் ஹாலிவுட்டுக்கு சென்றான்.
ஹாலிவுட்... எண்ணுகின்ற போதே இனிமையில் மிதக்க வைக்கும் இனிய உலகம், திரைப்படத்துறையில் ஒளிவீசும் சொர்க்கம், ஆல்வா எடிசன் கண்டுபிடித்த திரைப்படக் கருவியின் மூலம் உலக மக்களை மகிழ்விக்கும் மகோன்னதமான கலைநகர். காவியங்களையும், கலை மிளிரும் ஓவியங்களையும் ஒளியுமிழும் திரைவாயிலாக உலகோர் நெஞ்சில் பதித்த உன்னத திருவிடம், ஆம் ஹாலிவுட்டே நினைக்கும்போதே கண்ணில் ஒளி தோன்றி நெஞ்சில் நினைவுகள் தித்திக்க தொடங்கி விடும். எத்தனை எத்தனை நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் பட நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், மலைக்க வைக்கும் படப்பிடிப்பு நிலையங்கள், கடலையே கண்ணாடிப் பேழைக்குள் காட்டும் கலைநயம், ஒரு நகரையோ உருவாக்கிக் காட்டுகின்ற திறம், புதுப்புதுச் சிந்தனைகளை காட்சிகளாக்கி மனித குலத்துக்கு மட்டுமின்றி மற்ற உயிரினங்களுக்கும் உயர்வூட்டும் முயற்சி ஆகிய அனைத்தும் சுந்தரலிங்கத்தை குதூகலப்படுத்தியது. வியப்பூட்டும் விஞ்ஞானத்தை விரிவுரையாற்ற விளங்க வைக்கும் பேராசிரியராக ஹாலிவுட் திகழ்வதை எண்ணி மகிழ்ச்சியில் திழைத்தான்.
ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் என்று எதிர்வரும் விஞ்ஞானத்தை விளக்கும் படங்கள், பென்ஹர், பத்துக் கட்டளைகள், ஏசுவின் பெருமைகளை விளக்கும் படங்கள். ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் வீரத்தையும், வில்லத்தனத்தையும் விவரிச்து சிக்கல்களை களைந்து சீர்மிகு நிலைகளைத் தோற்றுவிக்கும் படங்கள் எல்லாம் அவனை மகிழ்வித்தது.
பொருளை ஒரு பொருட்டாகக் கருதாமல் நெஞ்சம் நினைக்கின்ற கருத்துக்களை காட்சிகளாக்கிக் காட்டும் பாங்கு அவன் கவனத்தில் பதிந்தது. கிளியோபாட்ரா போன்ற வரலாற்றுப் படங்கள் புதிய உலகிற்கு ஒரு பாடமாக காட்டப்பட்டது. காண் அவன் மனம் களிப்பில் ஆழ்ந்தது. மனித ஆற்றலை - வீரத்தை விளக்கிக் காட்டும் பல படங்கள் அவனை வியப்பில் ஆழ்த்தியது. தேனீக்கள், விட்டில்கள் வேறு பல இயற்கைத் தொந்தரவுகளால், தீப்பற்றினால் ஏற்படும் வேதனைகளால் பாதிக்கப்படும் மனித குலத்தை மீட்பது எப்படி எனும் படங்கள் அவனுக்கு களிப்பையூட்டியது. போரினால் ஏற்படும் அழிவுகள், சிதைவுகள், சீரழிவுகள் ஒரு சிலரின் முடிவுகளால், முரட்டுக் குணங்களால் ஏற்படும் அவலங்களை அழகுபட, அதே நேரம் உணர்ச்சி மயமாய் சித்தரிக்கும் படங்கள். குறிப்பாக இரண்டாவது உலகப் போரைப் பற்றிய படங்கள் அவனை உருக வைத்தது. ஹாலிவுட்டைச் சுற்றி வரும் போது அவன் எண்ணங்கள் சென்னையைச் சுற்றி வந்தது. ஆலிவுட்டைப் போலவே சென்னையிலும் ஸ்டூடியோக்கள் நிறைந்த காட்சி அவன் நெஞ்சில் நிழலாடியது. ஆலிவுட்டின் தயாரிப்பாளர்களைப் போல், சென்னையிலும் பெரிய நிறுவனங்கள் இருந்தன. வால்ட்டிஸ்ஸியையும், ஆல்பர்ட் ஹிச்சாக்கையும், சாண்டோ சின்னப்பாத்தேவர் நினைவு படுத்துகிறார்.
வார்னர் பிரதர்ஸ், எம்.ஜி.எம். 20வது செஞ்சுரி பாக்ஸ் ஆகியவற்றைப் போல் செமினி வாசன், வாஹினி நாகிரெட்டி, ஏவி. மெய்யப்பன், சூபிடர் சோமு, நாராயணன், கோவை பட்சிராஜா, சீராமுலுநாயுடு, சேலம் மாடர்ன் தியேட்டர் சுந்தரம், எம்.ஏ.வி.வேணு ஆகியவர்களும் நிறுவனங்களும் அவன் நினைவில் தோன்றிக் களிப்பூட்டியது. ஏர்லால் பிளைனை எம்.ஜி.ஆர். நினைவு படுத்துகிறார். மார்லன் பிராண்டோ சிவாஜியைப் போல் நடிக்கிறார். எலிசபெத் டெய்லரை பானுமதியும், மர்லின் மன்றோவை பத்மினியும், சோபியாலாரனை சாவித்திரியும் ஒத்திருப்பதாகத் தோன்றியது. சார்லி சாப்ளின் கலைவாணராகவும், செர்ரிலூயிஸ் சந்திரபாபு ஆகவும் அவனுக்குத் தோன்றினர். மற்றும் தமிழ்த் திரையுலகில் சாதனைகள் புரிந்த பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கவிஞர்கள் கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றவர்கள் அவன் கண்ணில் தோன்றி களிபேருவகை கொள்ளச் செய்தனர்.
மற்றும் லாரல்ஹார்டி ஆகியோரின் நகைச் சுவையில் அவன் சிரிச்து மகிழ்ந்தான். தமிழ்த் திரையுலகில் ஒளிவீசிய தாரகைகள் பலர் அவன் மனதில் தோன்றினர். தியாகராச பாகவதர், பி.யூ.சின்னப்பா குணசித்திர நடிகர்கள் நடிகவேள் ராதா, எஸ்.வி.சகஸ்ரநாம், வி.நாகையா, கண்ணாம்பா, ராசம்மா, தங்கவேலு போன்றோரும் தற்கால நடிகர் நடிகைகளும் அவனில் தோன்றினர். பின் பாரமவுண்ட் ஸ்டூடியோவை பார்த்துக் களித்தவாறு, வால்ட்டிஸ்னியின் படைப்பான் கலையும் விஞ்ஞானமும் கலந்து காட்சி தரும். டிஸ்னிலாண்டை பார்த்த குளிர்மிகு கண்களோடு கிரீன்லாந்த் வழியாக ஆர்டிக் பகுதியைப் பார்க்கப் பறந்தான் சுந்தரலிங்கம்.
ஆர்டிக்
ஆர்டிக்.. - அண்டார்டிக்காவைப் போல் பனி பாறைகள் நிறைந்த பகுதி என்றாலும்  அங்கு மனிதர்கள் வாழ்வதற்கு உகந்ததாக இருக்கக் கண்டான். எஸ்க்கிமோக்கள் பனிக் கட்டியில் வீடு கட்டி வாழ்ந்து வாரிசுகளை உருவாக்குவதைக் கண்டான்.
நாய் வண்டிகளில் சென்று மீன்களை பிடித்து உணவாக்கி பனிக் கரடியின் தோல் மற்றும் ரோமங்களில் ஆடைகள் செய்து ஆனந்த வாழ்வு வாழ்வதைக் கண்டான். அந்த நிலப் பகுதியில் இருந்து வானைப் பார்த்தவாறு அண்டார்டிக்காவை நினைத்தான். தென்துருவ அண்டார்டிகாவிற்கும், வட துருவ ஆர்டிக்கிற்கும் இடையே உள்ள காந்தப்புலன் அலைகளின் செயல் அவனுக்கு வியப்பூட்டியது. நிலவுலகை உருள வைப்பதும் ஒரு குறிப்பிட தூரத்திற்குள் உள்ள பொருள்களை ஈர்த்துக் கொள்வதும் அவனுக்கு ஒரு புதிய உணர்வை ஊட்டியது. வானத்தில் மின்னல் வண்ணக் கோலங்கள் போடுவதற்கு இந்த காந்த விட்டமே காரணம் என்று அறிந்து கொண்டான். தன் கண்களை மூடி இந்த உலகை மனத்திரையில் போட்டுப் பார்த்தான்.