Saturday 28 November 2015

என்ன செய்தார்கள்?

என்ன செய்தார்கள்?
அகம், புறம் ஆகிய அனைத்து நிலைகளிலும் வாழ்க்கைக்கான வளமனைத்தையும் வாரித்தந்த அறிவியல் ஆய்வுகளும் விஞ்ஞான வெளிப்பாடுகளும் இன்று எங்கும் படர்ந்து பரவிப்பரவசப் படுத்திக் கொண்டிருக்கிறது.
அறியமுடியாத அண்டவெளி நிலைகளை விண்வெளி விந்தைகளை மண்ணில் வாழும் மனிதர்கள் விழிகளிலும் மூளையிலும் பதிவு செய்த வண்ணம் இருக்கக் காண்கிறோம்.
மனிதஇனம் தோன்றிய நாளிலிருந்து தலைக்குமேல் இருக்கும் விண்மீன் கூட்டத்தை விரித்த விழி மூடாமல் வியந்தும் பயந்தும் பார்த்துக் கொண்டிருந்தது. நெஞ்சு கொண்டோர், நெறிசார்ந்தோர் இந்த நிலைகள் ஏன் என்று ஆய்ந்த வண்ணம் இருந்தனர். அறிவில் நிறைவு கொண்டோர், வியந்தும் பயந்தும் பார்த்தவர்களின் உள்ளநிலை மாற்ற ஆய்ந்தறிந்த முடிவுகளை அறைந்தவண்ணம் இருந்தனர்.
அறிவில், ஆய்வில் நிறைவு காணாத அவல நெஞ்சினர் வஞ்சம் நிறை கருத்துக்களை வாரி இறைத்த வண்ணம் இருந்தனர். இந்த இருவேறு நிலை கொண்டவர்களின் கருத்துப்போல் நீண்ட நாட்களாகவே நடந்து வரக் காணலாம்.
ஆதிகால இனக் குழு நிலைகளிலும் அடுத்து வந்த மனிதக் கூட்டங்களிலும் இந்தப் போர் நடந்து வரக் காணலாம். மதவேற்றுமை போரானாலும், நிறம் சார்ந்த போரானாலும் கருத்துச் சார்ந்த போரானாலும் என்னென்றும் நிகழ்ந்த வண்ணமே இருக்கக் காணலாம்.
இஸ்லாம் கிருஸ்துவப் போர், சிலுவைக்காக நடந்த நூற்றாண்டுப்போர், வெள்ளை கருப்புநிறப் போர், மிகநெடுங்காலமாக நடக்கின்ற ஆரிய-திராவிடப் போர் இன்றுவரை அறிவாளிகளை அழிக்கின்ற நிலையிலேயே நிற்கக் காணலாம். பலகாலம் பயணித்த பாதகமான பயனற்ற போர்களின் நிலைகளை பகுத்து வழங்கிய பழ.கருப்பையா போன்றோர் பல இடங்களுக்குச் சென்று மீண்டும் வந்து இந்த கருத்துப் போரில் தலைக்காட்ட காண்கிறோம்.
ஆயினும் தூய்மையும் துணிவும் கொண்ட அறிவாளிகளின் ஆற்றலாளிகளின் ஆக்கமிகு செய்திகளை, செயல்களை உலகில் புதுப்புதுக் கருத்துக்கள் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறது. அறியாமைக்கும் ஆதிக்கவாதிகளுக்கும் எதிரான போர் மேலும் மேலும் வலுத்துக்கொண்டே வரக் காண்கிறோம்.
ஆனால் இந்தியாவில் இத்தகைய எண்ணங்களை விதைத்து பயிர் செய்பவர் வீண் பொழுது போக்குவோர் மூளையில் கூர் தீட்டாமலும் நரம்பு நோயால் நலிந்து கிடப்போர் அனைவருமே வேதத்தில் கருத்தைகளையும் வேதியர்களின் சாரத்தையும் நம்பிக் கிடக்கின்றனர், நப்பிப் பிழைக்கின்றன்.
அய்ரோப்பா செல்வர்களின் ஆய்ந்தறிந்த கருத்துக்களிலும் அதை செயல்படுத்திய ஆற்றலாளர்களின் திறனாலும் தியாகத்தாலும் உலகம் முழுவதும் உயர்ந்து வரும் இந்த நிலை சிறிதளவும் தோன்றாக காலத்தில் அதாவது, நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே இந்திய தமிழகத்தில் ஒரு எழுச்சி நிலையை தொடங்கி வைத்தனர் தென்னிந்தியப் பேராளர்களில் சிலர்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் பெயரில் வேதம் விளைவித்த வேதனைகளிலிருந்து மக்களை விடுவிக்க விரிவான வேலைத்திட்டத்தையும் முன் வைத்தனர். விளைவு தென்னிந்தியர்களுக்கான விடியலின் வெளிச்சக் கோடுகள் தெரியத் தலைப்பட்டனர். வெள்ளையர் அரசின் கீழ் ஓர் அரசை உருவாக்கும் நிலை இருந்த நாளில் அந்த தென்னிந்த நலஉரிமைச் சங்கம் ஓர் அரசை அமைத்து அலங்கோலப்படுத்திய நிலைகளை அகற்ற ஆர்த்தெழுந்து அற்புதமான சட்டங்களை வரையறுத்து, வடித்தெடுத்து நிலைப்படுத்தியது. அதன் விளைவு வேதத்தின் வேர்கள் அறுக்கப்பட்டது. உரிமை விடியலின் வெளிச்சம் பரவிப் படர்ந்தது.
அதன் பின் சுயமரியாதை இயக்கத்தை நடத்தி வந்த, தந்தை பெரியார் வேதத்தின் ஆணி வேர்களை அறுத்தெறிய ஆர்த்தெழுந்து, ஆவேசமாகச் செயல்பட்டார். வேதத்தின் நச்சுமரக் கிளைகள் பல வெட்டப்பட்டன.
இனம், மொழி, பண்பாடு, இயற்கை அறிவியல் நிலைகளிலும் விரிவான விளக்கப் பரப்புரைகள் விளைந்த வண்ணம் இருந்தன. மாற்றமும் வளர்ச்சியும் மக்களைத் தழுவத் தொடங்கின.
ஆயினும் மேலே காட்டிய ஆதிக்க வாதிகளும் அவர்களும் அடிமைகளும் இந்த மாற்றத்தை, மறுமலர்ச்சியை சுருக்கிட அழித்திட பல்வேறு நிலைகளில் முயன்று கொண்டே இருக்கிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் எதனால் ஏற்றம் கண்டானோ, இழிவிலிருந்து மீண்டானோ அவனும் இந்த வேத மதம் சார்ந்த வீண் மனிதர்களோடு இணைந்து இருப்பதுதான்.
நூறாண்டு கால திராவிட இயக்கம் அதன் ஆதரவான அமைப்புகள் அதுசார்ந்த அருமையாளர்களை எண்ணிப்பார்க்காமல் வேதியர்குல வித்யார்த்திகளின் வெளிப்பாடுகள் முயற்சிகளை முறியடிக்க எண்ணாது இன்றுள்ள அறிவாளர்கள் ஆய்வாளர்களின் உணர்வுகள் உறங்குவதை எண்ணுகின்ற போது புகழ்பெற்ற பாடல் ஒன்றுதான் நமது நினைவில் நிலை கொள்கிறது.
சொல்லுறத சொல்லிபிட்டேன்
செய்யறதச் செஞ்சிடுங்க
நல்லதுண்ணா எடுத்துக்குங்க
கெட்டதுண்ணா விட்டுருங்க
முன்னாலே இருந்தவங்க
என்னென்னமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்சியும் செஞ்சாங்க
ஒன்னுமே நடக்காம
உள்ளம் நொந்து செத்தாங்க
என்னாலும் நடக்காதுன்னு
எனக்கும் தெரியுமுங்க
முடியிருந்தும் மொட்டைகளாய்
மூச்சிருந்தும் கட்டைகளாய்
விழியிருந்தும் பொட்டைகளாய்
விழுந்து கிடக்கப் போறீங்களா
முறையைத் தெரிஞ்சு நடந்து
பழைய நினைப்பை மறந்து
உலகம் போற பாதையிலே
உள்ளம் தெளிந்து வாரீங்களா

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனை ஞானிகளும்
புத்தரும் இயேசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதியும் வச்சாங்க
எல்லாம்தா படிச்சீங்க
என்ன செஞ்சி கிழிச்சீங்க

மகத்தான மாமனிதர் முகமது நபியவர்கள்

மகத்தான மாமனிதர் முகமது நபியவர்கள்
கி.பி நாலாம் நூற்றாண்டில் தோன்றி இஸ்லாத்தை கட்டமைத்த மாமனிதர் முகமது நபி அவர்களை போற்றிய மூன்று நூல்கள் என் விழிகளின் முன் விரிந்து ஒளிசிந்திக் கொண்டிருந்தது.
ஒன்று அமெரிக்க எழுத்தாளன் மைக்கேல் எச்.ஹார்ட் என்பார் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட நூறுபேர் எனும் உலகப் பேராளர்களைப் பற்றிய ஒப்பாய்வு நூல்.
இரண்டாவது முரசொலி நாளிதழில் தத்துவங்களின் தேரோட்டம் என்று நிறைய நிறைய நெஞ்சைக் கவர்ந்த கட்டுரைச் செல்வங்களை வழங்கிய திரு அடியார் அவர்களின் நான் காதலிக்கும் இஸ்லாம் எனும் இதயத்தில் இனிமையூட்டிக் கொண்டிருக்கும் நூல்.
மூன்றாவது இந்தியப் பொது உடமை முன்னோடி உலகப் பொது உடைமையாளர்களின் வரிசையில் இணைந்திருந்த இனியவர் திரு. எம்.என். இராய் அவர்கள் எழுதிய இஸ்லாம் ஒரு வரலாற்றுப் பாத்திரம் எனும் இஸ்லாத்தை ஒரு புதிய வடிவத்தில் வளம் தரும், வாசம் தரும் மலர் போன்ற நூல்.
திரு. மைக்கேல் ஹார்ட் அவர்கள் இந்த நிலவுலகில் ஏறத்தாழ நாலாயிரம் கோடிக்கும் அதிகமானோர் வாழ்ந்து மறைந்திருக்கிறார் அவர்களில் முதலிடத்தில் இருப்பது முகமது நபி தான் என்று முழங்குகிறார்.
அரபுப் பகுதியில் வாழ்ந்த படவிகள் எனும் குலத்தைச் சேர்ந்த முரட்டு மனிதர்களை வீரத்துடன் வெறி கொண்டு போராடும் உணர்வுகளை உற்றுநோக்கி அவர்களுக்குள் இருந்த உட்பகையை சீராக்கி உறவு கொள்ள வைத்து, படைப்போர் பயிற்சியளித்து அவர்களை இழிவுபடுத்தியவர்களை இடுப்பொடித்து போட்டு ஓர் இறைத் தத்துவத்தை நிலைநாட்ட, பரந்த நிலப்பரப்பை வெற்றி கொண்ட நபிதான் முதல் இடத்தில் இருக்கத் தகுதியுடையவர் என்று ஓங்கியறைகிறார்.
மிகக் குறைந்த காலத்திலேயே இத்தகைய இமாலய வெற்றியைப் பெற்றதோடு பல நூற்றாண்டுகள் பின்னரும் அவர் தந்த உணர்வுகள் நிலைத்து நீடித்திருப்பதை நெஞ்சார பாராட்டுகிறார் திரு. ஹார்ட் அவர்கள்.
அண்ணன் அடியார் நான் காதலிக்கும் இஸ்லாம், எனும் நூலிலிருந்து உதிர்ந்த நயத்தக்க நாகரிக சித்தாந்த கோட்பாடுகளை விளக்கிவிட்டு உலகம் காணாத உன்னதக் காட்சியொன்றை நமது உள்ளத்தில் உறைய வைக்கிறார்.
இந்த உலகத்தில் மதகுரு யாரும் மன்னனாக இருந்து வாளெடுத்துப் போர் புரிந்ததில்லை. மன்னர்கள் யாரும் கூரைக்குடிலில் குடியிருந்ததில்லை. ஆக மதக்குரு, மன்னன், குடிசை வாழ் குடிமகன் என மூன்று நிலைகளில் முழுநிலவாய்த் திகழ்ந்தவர் திரு.நபியவர்கள் என்கிறார் இனியவர் அடியார் அவர்கள். அத்தோடு தன்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணை அதுவும் தலைவனை இழந்த கைம்பெண்ணைக் கைப்பிடித்து தனது இல்லற வாழ்வை அமைத்துக் கொண்ட இலட்சியவாதியாகவும் திகழ்ந்தார் நபிமானார் என்கிறார். நமது நல்ல கலைஞருக்கு நாளெல்லாம் வாழ்த்துப் பாடிசைத்து நலம்பாடிய நமது அடியார் அவர்கள்.
இந்திய விடுதலைப் போரில் ஈடுபாடு கொண்டு போராடிய வெள்ளை அரசால் நாடுகடத்தப்பட்ட நல்லறிஞர் வங்கத்து திரு. எம்.என் இராய் அவர்கள் தீட்டிய ஒப்பற்ற ஓவியப் பனுவல் தான் இஸ்லாம் ஓர் வரலாற்றுப் பாத்திரம் எனும் நூலாகும்.
அடடா, என்னே! ஓர் ஆராய்ச்சித்திறம். வரலாற்றில் ஏற்படுகின்ற வலிகளை வடுக்களைத் துடைக்கின்ற உளத்தூய்மை அதுவும் இந்தியச் சூழலில் இது ஒரு புதுமையாகும். தந்தை பெரியார் மீது மட்டற்ற மரியாதை வைத்திருந்த திரு.எம்.என். இராய் அவர்களின் இந்த ஆய்வு நூல் இஸ்லாம் தோழர்களிடம் மணம் தூவுமேயானாள் உலகில் இன்னொரு அறிவியல் புரட்சி பூத்துக் குலுங்கும்.
இறைவனின் வாள் என்று இஸ்லாத்தை உருவாக்கிய நபியவர்களும் அவருடைய அருமைத் தோழர்களும் பின், வழிநடந்த பலரும் மிகச் சிறந்தப் பகுத்தறிவு நெறியாளர்கள் என்கிறார் திரு. இராய் அவர்கள்.
கிரேக்க மாமேதைகளின் அரிய அறிவுச் செல்வங்களை அழிக்க முனைந்த இத்தாலிய கிறித்துவத்திடமிருந்து பாதுகாத்து அய்ரோப்பாவிற்கு வழங்கியவர்கள் நபிகள் நாயகத்தின் வழிவந்த தளபதிகள் என்கிறார்.
கணிதத்திற்கும் மருத்துவத்திற்கும் அளப்பறிய தொண்டும் சாதனையையும் புரிந்தவர்கள் அராபியர்கள் என்பது வேறு சில ஆய்வுகளில் கூடுதல் செய்தியாகும். முதன் முதலில் விண்வெளி பற்றிய செய்திகளை சொன்னவர் நபிகள் அருகில் இருந்த அபுபக்கர் என்று ஆராய்ந்து அறைகிறார். இந்த நூல்களின் சாரத்தைச் சுருக்கமாகச் சொன்னால் நூலின் காட்சிப்படி சங்ககால தமிழ் உணர்வுச் செய்திகளாகவே விளங்குகிறது. தமிழிலிருந்துதான் தமிழரில் இருந்துதான் உலக உயிர்களும் உலக மாந்தர்களும் உருவானார்கள் என்று பல்வேறு ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.
சமண மகாவீரரின், புத்த சித்தார்த்தரின் முன்னோர்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்த தமிழர்கள் என்றும், சிந்துவெளி தமிழர்கள் தென்கண்ட கடல்தொடும் இடத்திலிருந்து பரந்து செல்லும் இடங்களில் வாழ்ந்து வந்த மக்கள் என்றும், இந்த மக்கள்தான் மத்தியதரைக் கடல் பகுதியில் குடியேறினார்கள் என்றும், அதனால்தான் அந்தப் பகுதியில் தமிழின் அறமும் அழகிய கலைவடிவங்களும் கிடைத்தன என்றும் பின்னர் அவர்களில் ஒரு பகுதியினர்தான் அய்ரோப்பாவின் கிரேக்கத்திற்குச் சென்றார்கள் என்றும் பின்னர் அவர்களின் தோன்றல் அய்ரோப்பாவில் பரந்து பரவினார்கள் என்றும், உணர்வியல், நிலவியல், உளவியல், மொழிஇயல் என்று ஆய்வாளர்கள் ஆய்ந்தறிந்து அறிவிக்கிறார்கள்.
அதனால்தான் இஸ்லாத்தை உருவாக்கியவர்கள் ஓர் இறைக் கோட்பாடு, அறம், பொருள், இன்பம், இயல், இசை, கலை காதல், மானம், வீரம் ஆகியவற்றில் சங்ககால மான மறவர்களைப் போலவே உருவாக்கினார்கள் என்று உறுதிபட உரைக்கலாம்.

இந்த நூல்களை விரித்து விவரிப்பது என்பது இங்கு இயலாத ஒன்றாகும். நூல்களைப் படித்தால் பல்வேறு உண்மைகள் ஒளிவிடக் காணலாம்.

Tuesday 17 November 2015

கலைஞரை புரிந்து கொள்வது கடினமா?

கலைஞரை புரிந்து கொள்வது கடினமா?
கலைஞர்... ஏறத்தாழ ஓர் அறுபதாண்டுகளுக்கு மேலாக ஒரு கொள்கை நோக்கோடு அதற்குரிய குணத்தோடு, தன்னையே இழக்க நேர்ந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் இதயத்தோடு மக்கள் பணியாற்றுகின்ற ஒரு மகத்தான பொதுநலப் போராளியாவார்.
தமிழ்ச் சமுதாய மீட்சிக்கு தன்மான இயக்கம் கண்ட, அன்றைய சூழலில் ஒரு நல்லரசு நடத்தி, பின் நலிந்த நீதிக்கட்சியையும் தன் தோளில் சுமந்த தந்தை பெரியாரின் பின் அணிவகுத்த அண்ணன் பட்டுக்கோட்டை அழகிரி, பேரறிஞர் அண்ணா, அண்ணன் நடிகவேள் ராதா போன்றோரின் பிரச்சாரப் பெருமழையில் நனைந்து, குளிர்ந்து, குதூகலம் கொண்ட உள்ளத்தோடு அந்த இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் கலைஞர் அவர்கள்.
பொது வாழ்வில் நுழைபவர்கள் எந்த நோக்கத்தோடு நுழைகிறார்கள்; எந்தக் காலத்தல் நுழைகிறார்கள் என்று எண்ணிப் பார்த்தால்தான் கலைஞர் பொதுவாழ்வில் இணைந்ததை, உழைத்ததை உணர முடியும்.
பொதுவாக சமூகம், ஏற்றுக் கொள்ளாத செய்திகளை சொன்னாலே நெற்றிக் கண்ணைத் திறக்கும் நிறைய மனிதர்கள் இருந்த தஞ்சை மாவட்டத்திலே பிறந்தவர் கலைஞர். அதுவும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலே பிறந்தவர். இருப்பினும் தன் இதய சுத்தியோடு பெரியாரின் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.
பொருளாதாரத்தில் உயர்ந்திட சில புதுச் செய்திகளை சொன்னதற்கே பொதுவுடைமைத் தோழர்களைக் கொன்று போட்ட தஞ்சைத் தரணிப் பண்ணையார்கள் வாழ்ந்த மண்ணில் கடவுள் இல்லை; சாதி இல்லை என்று சொல்வதற்கும் ஏன் ஊருராய் சென்று பரவச் செய்வதற்கும், உளத்தூய்மையும், உறுதிகொண்ட மனமும் வேண்டும். அந்தத் துணிவோடு தன்னை இந்த தூய இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர் தான் கலைஞர்.
அன்றிலிருந்து இன்று வரை ஒரே கொள்கைக்காக போராடுகிறார். சுய மரியாதை இயக்கம், நீதிக்கட்சியின் உணர்வுகளோடு திராவிடர் கழகத்தில் பணியாற்றினார். பின் அரசியல் இயக்கமான அண்ணா கண்ட தி.மு.கழகத்தில் பல்வேறு நிலைகளில் உழைக்கிறார் - போராடுகிறார் - அரசின் வழியாக தமிழர் மீட்சிக்காக அரும்பெருந் தொண்டாற்றுகிறார்.
மகத்தான தமிழர் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி தமிழ் மக்களை மாபெரும் வளர்ச்சிப் போக்கில் வழிநடத்தி வந்திருக்கிறார். அவரால் விளைந்த மாற்றமும் வளர்ச்சியும் மகத்தானது - மறக்கவோ - மறைக்கவோ முடியாதது.
சாதிய உணர்வுகள் அவரிடம் அண்ட முடியாது. சாதிகள் வழியில் கூட சில காரியங்களை செய்திருக்கலாம். அதை அனைத்துச் சாதியினருக்கும் செய்திருக்கலாம். அதன் நோக்கம் அனைவரும் வளர்ந்து தமிழர்கள் என்ற உணர்வுக்கு வந்து எல்லோரும் ஒன்றாக வேண்டும் என்பதற்கே செய்திருப்பார்.
தி.மு.கவில் உறுப்பினரான பின் சாதிய உணர்வுகளை எண்ணத்தில் பதித்திருப்பது சரியல்ல என்பதை பலர் உணர வேண்டும்.
பள்ளி மாணவனாகி விபரம் தெரிந்த நாளிலிருந்து பன்னாடுகளில் வாழ்கின்ற பாசமிகு தமிழர்களின் தலைவனாக மிளிரும் இந்த நேரம் வரை ஒரே உணர்வோடு வாழ்கிறார்; போராடுகிறார் என்பதை தொலைதூரத்தில் இருக்கின்ற எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், அவரின் அருகில் இருப்பவர்கள், அவரது அன்பைப் பெற்றவர்கள், அவரால் இந்த இயக்கத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள், ஆளாக்கப்பட்டவர்கள். பதவி பெற்று, பவுசடைந்து, பல்வேறு நிலைகளில் தன்னை உயர்த்திக் கொண்டவர்கள் அவரைப் புரிந்து கொள்ளாதது ஏன்? வியப்பாக இருக்கிறது.
மிகப் பெரும் சாம்பவான்களையெல்லாம் எதிர்த்து அரசியில் நடத்தியவர்கள் தன்னுடன் இயக்கத்தில் வளர்ந்தவர்களால் முதுகில் குத்தப்பட்டவர், தொடர்ந்து வந்த துரோகங்களால் துளைக்கப்பட்டவர்.
ஆயினும் தொடர்ந்து சுடர் முகங்காட்டி ஒளி வீசி மக்களிடையே உலா வருகிறார். இள வயதில் பதிந்த அறிவியக்க உணர்வுகளை இன்னும் உயிரோட்டமாக வைத்திருக்கிறார். தன்னை ஒரு நாத்திகன், கம்யூனிஸ்ட் என்று ஒளிவு மறைவின்றி ஓங்கி முழங்குகிறார். அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். உளத் தூய்மையுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். மற்றவர்கள் வருவார்கள்: போவார்கள். அவரது வாழ்க்கையும், வரலாறும், சாதனைகளும் வானளாவியது; வளம் நிறைந்தது; வரும் தலைமுறைக்கும் மறைக்க முடியாதது.

நீங்காத நினைவு - மாறாத மகிழ்ச்சி

நீங்காத நினைவு - மாறாத மகிழ்ச்சி
அழகுத் தமிழ் காக்கும், அருமைத் திருப்பணியில் அண்ணாவின் வழிச் செல்லும் ஆற்றலின் அரசே வணக்கம்!
மாலை மதியமும், மாசில் வீணையும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், உறவாடி மகிழ்ந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து ஓராண்டு நிறைவு பெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஈராண்டுக்கு ஒருமுறை செம்மொழி மாநாடு நடக்கும் என்ற செய்தியின் நினைவால் இதயம் இனிமையோடு இணைந்து ஈடில்லா மகிழ்வைத் துய்த்தவண்ணம் இருக்கிறது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வு மலரில் ஏறக்குறைய ஆயிரம் கட்டுரைச் சுருக்கத்தை வெளியிட்டு எழுத்தார்வம் கொண்டவர்களை மகிழ்வித்தீர்கள்.
மேலும், எட்டு பக்க அளவு கட்டுரையை மாநாட்டு அரங்குகளில் வாசிக்கச் செய்து வரலாற்று சிறப்பையும் வழங்கினீர்கள். மாநாட்டில் பேராளர்கள் என்றும், கட்டுரையாளர்கள், நோக்கர்கள் என்றும் மாநாட்டு ஆய்வரங்கில் கலந்து கொள்ளச் செய்து தமிழுணர்வு மேலும் தழைக்கவும், செழிக்கவும் செய்திடச் செய்தீர்கள்.
மேலும், பல்வேறு நிகழ்வுகளால் மாநாட்டு காட்சிகள் மாட்சியுறச் செய்தீர்கள். மாநாட்டு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு, மாசற்றத் தமிழ்ப் பணியில் மகோன்னதமான நிலை கண்டு எல்லார் உள்ளத்திலும் மாறாத மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.
அந்த மலரில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு அண்ணாவின் உரையைப் படித்து விட்டு, தங்கள் கட்டுரையையும் படித்துப் பார்த்தபோது அண்ணாவின் அச்சாய் தாங்கள் திகழ்வதை எளிதில் உணர முடியும்.
ஆய்வரங்க மலரிலும், சிறப்பு மலரிலும் அருமையான கட்டுரைகள் சில இருந்தது என்றாலும், நமது இனமான இயக்கத்தின் பகுத்தறிவு, அறிவியல் பார்வை கொண்ட கட்டுரைகளை மிக அரிதாகவே காண முடிகிறது.
கட்டுரையாளர்கள் பலரோடு கடித வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு உள்ளே உணர்வுகளை நமது பாதைக்கு மாற்ற அவ்வப்போது முயன்று வருகிறேன்.
மாநாட்டுக்குப் பின் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை வேறு தலைப்பிட்டும், திருத்தங்கள் செய்தும், எழுத்தின் அளவை சிறிதாக்கியும், பத்து பக்க அளவில் கட்டுரைகளை அனுப்புமாறு மாநாட்டுக் குழுவினர் கேட்டிருந்தார்கள். தொகுத்து மலரில் வெளியிடப் போகிறோம் என்றும் அறிவித்தார்கள். அதன்படி நான் அனுப்பி வைத்தேன்.
ஆனால் அதற்குப் பின் செய்திகள் ஏதுமில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து ஓராண்டு நினைவு நாளில் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு மலரை வெளியிட்டு நிகழ்வொன்றை நடத்த வேண்டுகிறேன். சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்து கட்டுரையாளர்களுக்கு ஏதாவது ஒரு பரிசை வழங்க வேண்டுகிறேன்.
மே நாள் அன்று லியோனி தலைமையில் நடந்த அருமையான பட்டிமன்ற நிகழ்வில் மகிழ்ச்சியோடு தாங்கள் கலந்து கொண்ட காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நண்பர்களிடம் சொன்னேன். சூசூகலைஞர் எப்போதும் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு மகிழ வேண்டும்என்றேன்.
அந்த நிகழ்வில் வெளிப்பட்ட பாடல்களைப் போல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் படிக்கப்பட்ட பெண்ணியம் எனும் கட்டுரையில் சில பாடல்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் ஒரு தாலாட்டையும், ஒரு ஒப்பாரியையும் தங்கள் முன் படைக்கிறேன்.
கடல் அளந்து கப்பலிட்டு கப்பலிலே தோணியிட்டு
துறையறிஞ்சுத் தோணியிடும் சோழருட வம்முசமோ
இது என் பிள்ளைகளுக்கு என் தாய் பாடிய தாலாட்டு.
காடு வழி நடந்தாலும் கங்கை வழி போனாலும்
கண்ணாகத் காத்தவரே கன்னியழிச்ச மன்னவரே
தனியாகப் போனீரே தவிக்க விட்டு போனீரே
இது என் தந்தை இறந்த போது என் தாய் பாடிய ஒப்பாரி.
அழிவிலிருந்த பழந்தமிழ்க் கலைகளைப் பாதுகாத்து பரப்பி வரும் தங்கை கனிமொழியின் பணிகளில் தெளிவான நாட்டுப்புறப் பாடல்களையும் ஆங்காங்கே அரங்கேறச் செய்து மாந்த இனத்திற்கு தமிழ் வழங்கிய மகத்தான கருத்துச் செல்வங்களை உலகோர் நெஞ்சில் உறைய வைக்க வேண்டுகிறேன்.
இயக்கத்தின் இனமானச் செய்திகளை இலக்கிய உணர்வுகளை மேலும் மேலும் வளர்த்தெடுத்தால், பரவச் செய்தால் இயக்கம் இரும்பனைய வலிமையைப் பெறும் என்பதை தாங்கள் அறியாததல்ல.
ஆனால், இன்றுள்ள கழகத் தோழர்களில் அதிலும் உயர்நிலை பொறுப்புகளில் இருப்பவர்களின் உள்ளம் இயக்கம் சார்ந்ததாகவோ கட்சி - தலைமை மீது உண்மை விசுவாசம் உள்ளதாகவோ இருக்கிறதா? ஆய்வு செய்ய வேண்டுகிறேன்.

பெறுநர்:  தலைவர் கலைஞர் அவர்கள்

பட்டதாரிகளே

பட்டதாரிகளே
படிப்பாளிகள், பட்டதாரிகள் பாரினை உயர்த்த வந்த அறிவாளர்கள். நுண்கலைகள் கற்றுத் தேர்ந்து, புதுமைகள் படைத்து நாட்டுவளம் கூட்டுகின்ற நல்லறிவாளர்கள். படிக்க வைத்தால் நம் குடும்பத்தை காப்பாற்றுவார்கள் நமது பிள்ளைகள் என்று இல்லத்தாரும், நாடு வாழ தன் ஆற்றலை பயன்படுத்துவார்கள் என்று நாட்டோரும் எண்ணியே நம் நலனைக் கூட கவனியாது மாணவர்களையும் - மற்றும் கல்விக் கூடங்களையும் வளமுடன் வளர்க்கின்றனர். சந்தனக்காடுகளையும் மலர்க் கூட்டங்களையும் கடந்துவரும் இனிய தென்றலைப் போன்றது மாணவப்பருவம் என்றார் பேரறிஞர் அண்ணா. அத்தகைய மாணவப் பருவத்தில் ஒவ்வொரு மனிதனும் பெறுகின்ற இன்பம் ஈடு இணையற்றது. அந்த இனிய பருவத்தில் இதயம் அடைகின்ற மகிழ்ச்சி எல்லையற்றது. மழலைப்பள்ளி முதல் மகத்தான கருத்துக்களைப் போதிக்கும் பல்கலை கழகம் வரை அறிவினைக் கூர்மைப் படுத்தும் பட்டறைகளாக திகழ்கின்றது.
ஏதும் அறியாதவர்களாக இருக்கின்ற காலத்தில் பள்ளி செல்லும் மாணவன் பட்டதாரியாகி வெளிவரும் காலத்தில் எளிதாக எதையும் முடிவெடுக்கின்ற ஆற்றலினை பெறுகிறான். துள்ளி விளையாடும் பருவத்தில் பையில் சில புத்தகங்களோடு பள்ளிக்குள் நுழைகின்ற பாலகன் ஆண்டுகள் பல கடந்தபோது உடல் மாற்றத்தோடு உயரிய மனிதனாக வெளிவரும் காட்சி உண்மையில் உவகையூட்டும் காட்சியேதான்.
மருத்துவனாக, பொறியாளனாக, பொறுப்புமிகு ஆசிரியனாக, நிர்வாகியாக, உயர் கணக்கியல் மேதையாக, அரசுப் பணிகளில் தன் திறன் காட்டும் அதிகாரியாக மற்றும் பல்துறை சீரடங்கிய பண்பாளராக வெளிவருவது காண உளம் மகிழ்கிறது. மாணவப் பருவத்தில் அவர்கள் உற்சாகமாய் உல்லாசமாய் உலாவரும்நிலை காணக்கிடக்கும் கவின்கமிகு காட்சிதான்.
வாசமலர்த்தோட்டமாக இசைபாடும் வண்டாக, விரிவானத்தின் விண்மீன் கூட்டமாக கண்சிமிட்டி, கையசைத்து, கால்குதித்து, கட்டுகளற்று, நினைவில் கவலைகளற்று ஆடிப்பாடி ஓடித்திரிந்து, சுதந்திரம் தரும் சுகம் தரும் உணர்வுகளோடு வாழ்கின்ற காலத்தில் அவர்கள் மனமும் செயலும் மாசுகளற்றதாக விளங்குகிறது.
மலையருவியில் இசைபோன்று அவர்கள் உள்ளம் துள்ளிக்குதித்து திரிகின்ற காலம் முடிந்து, படிப்பின் காலம் கழிந்து பட்டம்பெறும் நாள் வருகிறது. எதிர்காலத் திட்டங்கள் இதயத்தில் நிழலாடுகிறது. எழிலார்ந்த கற்பனைகள் மனதை தாலாட்டுகிறது. பரந்த உலகம் அவர்கள் பார்வையில் தெரிகிறது. பல்வேறு உணர்வுகள் அவர்கள் நெஞ்சத்தோடு நேச உறவு கொள்கிறது. பாசத்தோடு பழகிய பல்வேறு முகங்கள் பல்வேறு திசைகளில் பறப்பதற்கு தயாராகும் நிலை அவர்கள் நெஞ்சில் நெகிழ்வை உருவாக்குகிறது. நெஞ்சோடு நேசித்து பழகியவர்களின் எதிர்கால நிலை என்ன என்ற எண்ணங்களெல்லாம் இதயத்தில் சற்று கலக்கத்தை உருவாக்கும் எண்ணங்களாகின்றன.
பட்டம் பெறும் நாளன்று கறுப்பு வண்ண மேலங்கியை உடுத்தி கையில் பட்டத்திற்குரிய காகிதத்தை வைத்து உள்ளம் களித்திடும் நாளாகிறது. மங்கள நிகழ்ச்சிகளில் கருப்பு வண்ணத்தை வெறுக்கின்ற மக்கள் நிறைந்த நாட்டில் எழில் வாழ்வில் திளைப்போர்க்கு இனிய வாழ்வை சுவைப்போர்க்கு, அந்த வாழ்வில் அடியெடுத்து வைக்கும் நாளில், தருகின்ற உடை கருப்பு என்பது என் போன்ற அறிவியல் உணர்வு பெற்றோர் மகிழ்கின்ற நாள்தான். பட்டமளிப்பு விழா நாளில் உரை நிகழ்த்தி வழியனுப்புகின்ற சான்றோர் பகிர்கின்ற கருத்துக்கள், அவர்கள் வாழ்க்கையில் உயர்நிலைக்கு வருவதற்கு உரமாகிறது. உந்துகோலாகிறது.
பட்டம் பெறும்வரை எழுச்சி குடிகொண்ட, உணர்ச்சிமயமான உள்ளங்கள் பின் வாழ்வின் ஒரு சிறந்த இடத்தைப் பெறப் போராடுகின்றன. மொத்தத்தில் வாழ்வில் ஒரு திருப்புமுனையை சந்தித்து நல்வாழ்வைப் பெறுகின்றனர். எல்லார்க்கும் எல்லாம் என்று மிக ஏற்றம் நிறைந்ததாக இல்லையென்றாலும், படித்தற்குரிய நிலையை எய்தவில்லை என்றாலும் முடிந்தவரை நல்ல சூழலில்தான் நடைபோடுகின்றனர். பெரும்பாலோர் எழில்வாழ்வை துய்க்கின்ற நிலையைக் காண்கிறோம்.
ஆனால் அந்தப் பெரும்பாலோர் படித்ததற்கேற்ப, பட்டம் பெற்றதற்கேற்ப வாழ்க்கையில் நடந்து கொள்கிறார்களா? அறிவியல் உணர்வோடு ஆராய்ச்சித் திறத்தோடு வாழ்வியலைத் துய்க்கிறார்களா என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு கிடைக்கும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத்திட்டங்களை கண்ணுறும் யாரும் அதை பயின்றவர்களின் வாழ்க்கை நடைமுறைகளை பார்க்கின்றபோது பெருத்த வேதனையைத்தான் கொள்ள முடியும். பாடத்திட்டத்தின் எந்தக் கூறுகளும் அறிவியலுக்கு மாறான வழியில் செல்வதாக சொல்லமுடியாது. ஒருவேளை தமிழ்ப்பாடத்தின் செய்யுள்கள் வேண்டுமானால் - பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா- என்றும், நரி பரியான கதையும்; ஆண்டவன் பிரம்பால் அடிபட்டதாகவும் போதிக்கலாம். அதைக்கூட மற்ற பாடங்களை பயில்கின்றபோது அது ஒரு கற்பனைச் சித்திரம் என்று தெளிவு கொள்ள முடியும்.
பதினைந்து ஆண்டுகள் பதினெட்டு அல்லது இருபது ஆண்டுகள் பாடங்கள் தரும் கருத்துகளில் மூழ்கி திளைக்கின்ற மாணவர்களின் நெஞ்சத்தை அந்த பாடங்களைவிட அந்தக் கருத்துக்களைவிட நாட்டில் நடப்பில் இருக்கின்ற அறிவியலுக்கு எதிரான ஆராய்ச்சிக்கு உடன்படாத கருத்துக்களே உள்ளத்தை ஆட்கொள்ளுகிறது.
நாட்டில் இருக்கின்ற மடமைகளை, மூடப்பழமைகளை, பாமரத்தனத்தை உதறிவிட்டு நெஞ்சில் உரம்பெற வேண்டும், எண்ணங்களில் உயர்வுபெற வேண்டும் என்பதற்கே படிக்க வைக்கிறோம். புதுமை எண்ணங்கள் நெஞ்சில் ஊற்றுக் கண்ணாக வேண்டும் என்று விரும்பியே அரசும் தன் நிதிநிலையில் கல்விக்கு அதிக தொகையை ஒதுக்குகிறது. ஆனால் அந்த இலட்சிய நோக்கம் ஈடேறும் நாள் வராதா என்று நெஞ்சம் ஏங்குகிறது.
முதநிலை மருத்துவர் ஒருவர் நெற்றியில் பெரிய நீற்றுப்பட்டையும் கழுத்தில் கொட்டையும் கட்டிய நிலையில் தன் மருத்துவமனை தொடக்கத்திற்கு வேள்வி வளர்த்து பொருள்களை வீண்பண்ணும் நிலை காண்கிறோம். உயர் பொறியாளராய் விளங்குபவரின் நிலை இவரைவிட குறைந்ததல்ல, நீண்ட நெடுங்காலம் நிலவி மனிதர்களுக்கு எந்தவித நன்மையும் பயக்காத இதிகாச கருத்துக்களை நாளும் பல்வேறு வழிகளில் பரப்புபவர்கள் முதுகலை பட்டதாரிகளாகவே இருக்கிறார்கள். பட்டிமன்றங்கள், பாட்டரங்கங்கள், வழக்காடும் நிகழ்ச்சிகள் கருத்து மலர்கள் தூவும் இடங்கள் ஆகிய அனைத்திலும் வளர்ச்சிக்கு உதவாத அல்லது வளர்ச்சிக்கு கேடு செய்யும் வகையிலேயே படித்தவர்கள் தங்கள் பணிகளை ஆற்றுகிறார்கள். கல்விக் கூடங்களில் போதித்த கருத்துக்களை காற்றில் பறக்கவிட்டு கதைக்குதவாத புதைசேறில் கற்றவர்கள் தம் தலையை மூழ்கடிப்பது ஏன்? என்பது விளங்காத ஒன்றாக இருக்கிறது.
ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல் சாதனங்களை பயன்படுத்துவோர், பயன்படுத்தி வாழ்வில் வளம் காண்போர், தம் நெஞ்சில் மூடப்பழமைக்கு இடம்தரும் முரண்பாடு ஏன்? அதிலும் அரசின் அலுவலர்களாக இருப்போர் மதச் சடங்குகளுக்கு மனதில் இடம் தருவதேன்? பாடங்கள் போதிக்கும் கருத்துகள் பசுமையாய் பதிந்திருக்கும்போது காய்ந்த சருகுகளை கருத்தில் கொள்வதேன்? வியப்பாக இருக்கிறது. தந்தை பெரியார் ஒருமுறை கூறினார், கல்வி கற்றால் முட்டாள்தனம் ஒழியும் என்று கருதினேன். ஆனால் கற்றவன் இரட்டை முட்டாளாக இருக்கிறான், என்று வேதனைப்பட்டார். மனத்துணிவுக்கு கல்வி உதவும் என்று அறிகிறோம். ஆனால் கற்றவர்கள், பட்டம் பெற்றவர்கள் கோழைகளாகவே காட்சியளிப்பது விந்தையல்லவா? ஓர் அடிதடிக்காரனுக்கு அடாவடிச் செயலுக்கு எத்தனை அதிகாரிகள் அடங்கி நடக்கிறார்கள் இந்த நாட்டில் என்பது நடைமுறை உண்மையல்லவா?
உள்ளத்தில் பயம் நீங்கி உரம் பெறும் மனநிலையை படித்தவர்கள் பெற வேண்டும். ஒவ்வொரு செயலையும், எண்ணத்தையும் சிந்தித்து, விவாதித்து தெளிந்து சிந்தையில் ஏற்க வேண்டும். படிக்காதவர்கள் தெளிவுபெற படிக்க வேண்டும். படித்தவர்கள் பட்டதாரி என்ற நிலைக்கு உயர்ந்தவர்கள் ஏன் குழம்ப வேண்டும். மனதில் உறுதிவேண்டும். வாழ்வில் அறிவுகாட்டும் வழியில் செல்ல வேண்டும். பட்டம் பெற்றோர் சிந்திக்க வேண்டும். படிப்பாளிகளே! பட்டதாரிகளே! சிந்திப்பீர்களா?

Friday 13 November 2015

இலக்கியம்

இலக்கியம்
இதயத்தை பண்படுத்த இலக்கியம் எந்த நாளும் இருக்க வேண்டும். ஒரு இலக்கை இனிமையுடன் இயம்புவது தான் இலக்கியம்.
அது மட்டுமல்ல அறிவுசார்ந்ததாக ஆய்வுக்கு உட்பட்து ஆகவும் இலக்கியம் அமைய வேண்டும். இங்குள்ள இதிகாச, இலக்கியங்கள் பெரும்பாலும் நடைமுறைக்குச் சாத்தியப்படாததாகவும், கற்பனை சூழ்ந்ததாகவும், முழு மூடநம்பிக்கை கொண்டதாகவும் இருக்கிறது. சங்ககால இலக்கியங்களில் அந்த கற்பனைகளையும், புகழ்மொழிகளையும் கழித்துப் பார்த்தால் அரசு, ஆட்சி, பண்பு நலன், தனிமனித, சமூக ஒழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்துவதாகவும் காதல், வீரம், பொருளியல் வளர்ச்சியை, சில புதுமைச் செய்திகளை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்திருக்கிறது. ஆனால் சங்ககால உணர்வுகளை, தொடர்ந்து அதை வலுயுறுத்தவும், வளர்க்கவும் ஆன சூழல்கள் நாளும் நசிந்து வந்ததேயன்றி நலம்பெறும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
இயற்கை என்பது வளர்ச்சியை நோக்கித்தான் என்றாலும், மனிதர்களைப் பொறுத்தவரை வளர்ச்சியை வேகமாக வளர்ப்பதும், வலிமைப்படுத்துவதும் அவர்களின் அறிவு செயல் ஆகியவற்றைப் பொறுத்தே இருக்கிறது.
அறிவாளி மகன் அறிவாளியாய் மட்டுமே பிறப்பதில்லை மரபில் கூட சுற்றுச்சூழல் துணை கொண்டு தான் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்கிறான் சிக்மண்ட் பிராய்ட்.
அய்ரோப்பியாவை எடுத்துக்கொண்டால் அங்குள்ள அறிஞர்கள் தங்களுடைய படைப்புக்களை காலத்துக்கு காலம் முன்னெடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
சாக்ரடீசை தனது குருவாகத்தான் கொண்டான் பிளேட்டோ. ஆனால் முழுமையும் பக்தனாகி விடவில்லை. பிளேட்டோவின் மாணவன் அரிஸ்டாட்டில், ஆனால் சில கருத்துக்களில் வேறுபட்டான் சிந்தனையிலிருந்த கருத்துகளை செயல்படுத்த சிலமுறைகளை பிளேட்டோவும், அரிஸ்டாட்டிலும் செய்து பார்த்தார்கள்.
விவாத அடிப்படையில் அய்ரோப்பாவில் கருத்துகளும் படைப்புகளும் வலம் வந்தன! அதனால் தலைமுறை தோறும் கருத்துகள் கூர்மை அடைந்து முன்னோக்கியே சென்றது. அரிஸ்டாடிலின் கருத்துக்கு மாற்றுச் சொல்லக் கூடாது என்றிருந்த காலத்தில் தான் அரிஸ்டாட்டிலின் ஒரு கருத்துக்காக அவனை முட்டாள் என்று சொல்லி மாதா கோயிலில் முட்டி தேய மண்டியிட்டு மடிந்தான் கலிலியோ! ஆம் ஆண்களுக்கு முப்பதிரண்டு பற்கள், பெண்களுக்கு முப்பது பல் என்று எண்ணிப் பார்க்காமலேயே சொன்னதால் அரிஸ்டாடிலை முட்டாள் என்று சொன்னான் கலிலியோ!
ஆக அய்ரோப்பாவில் மனதில் உருப்போட்டு வெளிப்படுத்தும் மொழிப் பயிற்சி மட்டும் இலக்கியம் அல்ல. செய்முறையாக, செயல் வடிவான கலைப்பயிற்சியும் சேர்ந்தால் தான் இலக்கியம் ஆக முடியும். அது தான் மனிதர்களுக்கு வாழ்வளிக்க முடியும் என்பதை அய்ரோப்பா உணர்ந்ததால் தான் தொடர்ந்து பொருள் குவிக்கும் தொழிற்புரட்சி அங்கே தோன்றியது.
அதன் விளைவு தான் இன்று வளமிகு பாதையில் உலகு வருத்தம் இன்றி செல்கிறது. வளரும் உலகத்திற்கு மக்களை வழிநடத்திச் செல்வதற்கு உரிய வகையில் அய்ரோப்பிய பேரறிவாளர்களும் இலக்கியவாதிகளும் தங்கள் மொழியை உரிய முறையில் வளர்த்து சொற்களைக் குவித்து வந்திருக்கிறார்கள். புதிய கண்டுபிடிப்புகளோடு புதிய சொற்களையும் கண்டுபிடிக்கிறார்கள்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எல்லாத் துறைகளிலும், எல்லாக் கல்வியிலும் தமிழ் வேண்டும் என்று அரசை வலியுறுத்தும் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், தமிழ்ப் புலவர்கள், பற்றாளர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் இங்கே என்ன செய்தார்கள்? இங்கே பரவிக் கிடக்கின்ற இலக்கிய மன்றங்கள் என்ன செய்தன? அகவலும், அந்தாதியும், பதிகமும், பாசுரமும் துதியும் பாடி ஆண்டவனை துதித்து உணர்வை அடிமைப்படுத்துவதை அன்றி வேறு என்ன செய்தார்கள்? பக்தி சுவை சொட்டச் சொட்ட, பட்டிமன்றங்கள் நடத்தியதன்றி பயனுள்ள செயல் தமிழுக்கு என்ன செய்தார்கள்.
புதிய கலைச் சொற்களை கண்டுபிடித்தார்களா? மக்களிடம் அதை எடுத்துச் சொன்னார்களா? புதுப்புதுச் சொற்களை படைத்து பட்டியலிட்டுக் காட்டினார்களா? தமிழுக்கு மாறுபட்ட அரசு செய்கின்ற செயல்களை தடுக்கின்ற, கண்டிக்கின்ற போராட்டங்களில் ஈடுபட்டார்களா? எல்லாச் செயல்களையும் அரசு செய்து விட முடியாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதெல்லாம் தமிழுக்கு முடிந்ததெல்லாம் செய்தது. அந்த அரசைத் தொடர்ந்து நிலைபெறச் செய்கின்ற செயலிலாவது தமிழ்நெறியாளர்கள் நிற்கிறார்களா? இதயத்தில் நல்லெண்ணம் இல்லாத சில இதழ்களும் இந்த கூக்குரலில் தங்களை இணைத்துக் கொள்கின்றன. அந்த இதழ்கள் நினைத்தால் தமிழுக்கு எவ்வளவோ செய்யலாம்.
சிறந்த கலைச் சொற்களை உருவாக்குவோரை அந்த இதழ்கள் ஊக்கப்படுத்தலாம். தமிழில் புதிய படைப்புகளைக் கொண்டுவர பாடுபடலாம். புதிய தமிழ் அறிஞர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தலாம். வளரும் இளைஞர்களுக்குள் போட்டிவைத்து தமிழில் புதுமைகளை கொண்டு வரலாம். இலக்கிய மன்றங்களும், தமிழ் அறிஞர்களும், இதழ்களும் இணைந்து தமிழுக்கு தொண்டு செய்ய முன்வரலாம்.
தமிழ் இயற்கையாகவே வளம் செறிந்த மொழி. தமிழின் வேர்ச் சொற்கள் உலகினில் பல்வேறு மொழிகளில் பரவிக் கிடக்கின்றன. இன்றையக் கம்ப்யூட்டர்க்கு ஏற்ற மொழி என்று எழுத்தாளர், பொறியாளர் சுஜாதா எடுத்துச் சொன்னார்.
இலங்கை, மலேசியா தமிழர்களால் உலகெங்கும் தமிழ் இன்டர்நெட்டில் பரப்பப்படுகிறது. தமிழ் வளர்க்கும் புதிய அறிவாளர்கள் தோன்றி வருகிறார்கள். அவர்களைப் பின்பற்றி இங்குள்ள தமிழ் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் அனைவரும் தமிழுக்கு புதிய வடிவமும் சொற்களும் தர தங்கள் ஆற்றலை பயன்படுத்த வேண்டும். அதற்குரிய வகையில் இங்குள்ள இதழ்கள் அவர்களுக்கு உற்சாகத்தை ஊக்கத்தை அளிக்க வேண்டும்.
நீரின்றி உரமின்றி துணையின்றி அரசுமின்றி நெடுநாள் வாழ்ந்த தமிழ், இனி தடையின்றி தளர்வின்றி தழைக்கும். புதிய உலகில் புகழோடு நிலைக்கும் நிலைகாண்பது அறிவு சார்ந்த ஒட்டு மொத்த தமிழர்களின் பொறுப்பாகும். அதற்கான அரசை அமைப்பது உலகில் வாழும் ஒட்டு மொத்த தமிழர்களின் கடமையாகும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள்
நாட்டிலுள்ள எல்லாத்துறைகளும், எல்லா மனிதர்களும் தொடர்பு கொண்ட ஒரு துறை அரசியல், நாட்டில் வலிவும் நலமும், நல்ல அரசியல் பணியாளர்களால் நிலைநாட்டப் பட வேண்டும். அரசியல் ஈடுபாடு என்பது தொண்டு மனப்பான்மை கொண்டதாக இருக்க வேண்டும். பழிச் சொல் இல்லாத புகழினைப் பெற வேண்டும் எனும் விருப்பத்துடன் அரசியலில் ஈடுபட வேண்டும். எந்தக் கட்சியானாலும் மக்கள் நலனுக்காக பாடுபடும் உணர்வும்; மக்களாட்சியின் மாண்புகளை மதிக்கின்ற மனப்பாங்கும் அரசியல்வாதிகளின் நெஞ்சில் நின்று நிலைபெற வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் நிகழ்ந்தால் தன்னைத் திருத்திக் கொள்கின்ற பெருந்தன்மை அரசியல் ஈடுபாடு கொண்டோர்க்கு அவசியம் வேண்டும்.
எதிர்நிலையில் இருந்தபோது என்னவெல்லாம் சொன்னோம் எனும் நினைவு நிலைமாறும்போதும் நெஞ்சத்தில் நிற்க வேண்டும். ஊழலுக்கு காரணமாகி முதல் முறையாக ஒரு பதவியை கட்சியானாலும் அரசின் நிர்வாகத்தினாலும் உதறியவர்களுக்கு மீண்டும் எந்தப் பொறுப்பும் வழங்கக்கூடாது. வன்முறையாளர்களும், வாழ்வின் நெறி தவறுபவர்களும் அரசியலில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் தன்னை உயர்த்திக் கொள்ள தவறான வழிகளை இவர்கள் உருவாக்கக்கூடும். ஆட்சிப் பீடத்திற்கு வரும் அரசியல்வாதிகள் அப்பழுக்கற்றவர்களாக தங்களை உலகிற்குக் காட்டிக் கொள்ள வேண்டும். சிந்தøன் செழுமையும், செயல்ச் சீர்மையும், அறிவுக்கூர்மையும் கொண்டவர்கள் அரசியலில் ஈடுபாடு கொண்டால் நாடு அளவிலா வளம் பெறுவதற்கு வாய்ப்புகள் உருவாகும். வளம் பெற்ற நாடுகள் நடைமுறைப்படுத்திய திட்டங்களுக்கு இந்த நாட்டிற்கு ஏற்றவாறு செயல்படுத்தும் அறிவாற்றல் பெற்றோர் அரசியலில் முதலிடத்திற்கு வர வேண்டும். அரசு பெறுகின்ற வரியானாலும், அரசியல் கட்சிகள் பெறுகின்ற நன்கொடையானாலும் பொதுமக்களின் வியர்வையில் உருவானதே! அதை மக்கள் நலனுக்கே பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வு, ஒவ்வொரு நொடியும் அரசியல்வாதிகளின் உள்ளத்தை ஆளுமை செய்ய வேண்டும்.
மேலே கண்டவற்றை குணமாகக் கொண்ட அரசியல்வாதிகள் நாட்டில் எத்தனை பேர்? மிகச் சிலர்தான் என்று கூறிவிட முடியும். நாட்டு மக்களின் பொருளை எத்தனையோ வகையில் கொள்ளையிடும் அரசியல்வாதிகள் இங்கே உலவுகின்றனர். அரசினர் போடுகின்ற எத்தனை திட்டங்கள் தோல்வியை தழுவி மக்களை துயர்படுத்துகின்றன? அரசு அதிகாரிகள் அநியாயங்களுக்கு துணை செய்து பங்கு வாங்கிக்கொள்ளும் அமைச்சர்கள் நிறைந்த நாடாக அல்லவா இந்நாடு திகழ்கிறது. அரசுப் பணம் என்ன கட்சிப் பணத்தைகூட கொள்ளையிடும் களவாளிகள் அரசியலில் உள்ளனரே! மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; கங்கையை சூதகமானால் எங்கே குளிப்பது? என்று பசும்பொன்தேவர் அடிக்கடி கூறியது அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு பொருத்தம். நாடாள்வோர் நல்லவர்களாக விளங்கி மக்களுக்கு வாழ்வளிக்க வேண்டியவர்கள் கொள்ளையர்களானால் யாரிடம் முறையிடுவது? சட்டத்தில் காவலர்களே அதை தன் இஷ்டத்திற்கு வளைப்பது என்றால் எங்கேபோய் அழுவது? பொதுமக்கள் தவறிழைத்தால் கிரிமினல், சிவில் சட்டங்கள் தண்டிக்கட்டும். ஆனால் அரசில் உள்ள அரசியல்வாதிகளின் தவறுகளுக்கு ராணுவச் சட்டமே தண்டனை தரவேண்டும் என்று அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். முந்திரா ஊழல், போபர்ஸ் ஊழல், பங்குச்சந்தை ஊழல், நகர்வாலா மோசடி என்ற சூப்பர் ஊழல்கள் மட்டுமின்றி ஆங்காங்கே நடக்கின்ற நாட்டையே நாசப்படுத்தும் நரித்தனமான ஊழல்களுக்கெல்லாம் முடிவு ஏது, விடிவு காலம் தான் ஏது? வேடிக்கையாக சொல்வதுண்டு. அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதற்கு உதாரணமாக சொல்வார்கள் கிணறே இல்லை. ஆனால் கிணறு தோண்டியதாக இலட்சம் ரூபாய் கணக்கில் இருக்கிறதே என்று கேட்டால் கிணறு தோண்டியதாக ஒருவர் எழுபதாயிரம் எடுத்துக் கொண்டார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மூடிவிட்டேன் என்று ஒருவர் முப்பதாயிரத்தை விழுங்கி விட்டார் என்று அரசை ஏமாற்றும் அலுவலர்கள் உள்ள நாடு இது, ரோடு போடாமல், கிணறு வெட்டாமல் மக்களின் வரிப்பணத்தை ஸ்வாகா செய்யும் மனிதர்கள் ஆளுமைத் துறையில் இருந்தால் மக்கள் வதைபடுவதைத் தவிர வேறு மார்க்கம்தான் என்ன? ஒரு ஆற்றல் மிக்க அறிஞனை விட, பயன்மிகு ஒரு விஞ்ஞானியைவிட, திறன்மிக்க ஒரு அதிகாரியை விட அரசியல் வாதிக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கிறது.
நாட்டின் வளம் யாரால் பெருக்கப்பட்டாலும் அரசு சார்ந்த அமைச்சரவைக்கு அந்தப் பெருமை முழுக்கப் போய் சேருகிறது. ஒரு ஆட்சியின் கீழ்தான் இந்த நாடு வளம் பெற்றது என்று தான் வரலாறும் கூறுகிறது. அந்த வளத்திற்கு அடிப்படையாய் இருந்த ஆற்றல் மிக்க அறிஞர்கள் கருவேப்பிலையின் நிலையில்தான் பயன்படுத்தப்படுகின்றனர். மக்கள் இதயங்களில் எவரெஸ்ட் நிலையில் உள்ள பல அரசியல் வாதிகளின் உள்ளமோ மோசத்தின் பிறப்பிடமாய் உள்ளது. தமக்கு வாழ்வளிப்பார்கள் என்று மனமுவந்து வாக்களித்தவர்களுக்கு வேதனையை பரிசாக தரும் அரசியல்வாதிகளே! இங்கு அதிகம். அரசியலின் கூறுகள் அனைத்தும் அறியாதவர்களுக்கு எந்த அரசியல் கட்சியும் பொறுப்புகளை வழங்கக் கூடாது என்று சட்டமே கூட இயற்றலாம். அரசியல் தகுதிகளை பெறுவதற்கு தேர்வு வைத்தால் கூட தவறில்லை. மக்களாட்சியின் மாண்பினை மாசுபடுத்தும் மதோன் மத்தர்களுக்கு மரண தண்டனை என்றாலும் பாவமில்லை. மக்களாட்சியின் மன்றங்களுக்கு சென்றபின் வாய் பேசாது இருப்போர்க்கு அபராதம் கூட விதிக்கலாம்.
இங்குள்ள கலாச்சாரமே சோம்பேறித்தனமானது. இங்குள்ள சமயம், சாஸ்திரம், ஆச்சாரம், அனுஷ்டானம் ஆகிய அனைத்துமே சோம்பலைத் தோற்றுவிக்கக் கூடியது. வழிபாட்டுத் தன்மையேகூட இலஞ்ச இலவணிய முறையால் உருவானதே! கெண்டையைப் போட்டு விரால் பிடிக்குமுறையிலே வழிபடும் உணர்வு இருக்கிறது. உள்ளத்தைப் பண்படுத்தும் புதிய முறைகளை உருவாக்கினால் அன்றி இந்த நாடு உயர்வடையாது. அதற்கு வழிதான் என்ன? அரசியல்வாதிகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக ஆவதற்கு மார்க்கம்தான் என்ன? புதியதோர் நாடுகாண புதுமை எண்ணங்கொண்ட இளைஞர்களை உருவாக்க பொதுவாழ்வில் ஈடுபடுவோரை புடம்போட்டு எடுக்கின்ற புதுமுறை ஒன்று உருவாக்க வேண்டும். வழிவழியாய் நல்லவர்களை உருவாக்கும் வழி ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும்.

அந்தரங்க அரசியல் நடத்துவோரை பொதுவாழ்வில் இருந்து அகற்றும் உணர்வு மக்களிடம் வளர வேண்டும். மனதில் களங்கத்துடன் நடக்கும் மனிதர்களை பொதுவாழ்வில் இருந்து புறக்கணிக்கும் நிலை வேண்டும். ஆராய்ந்து பார்த்தால் அனைத்து தவறுகளுக்கும் பிறப்பிடம் அதிகாரம் பெற்ற அரசியல்வாதிகளின் உள்ளம் தான் என்பது விளங்கும். உள்ளத் தூய்மையின்றி அரசியலில் உலாவருவோரை பொதுவாழ்வில் இருந்து நிரந்தமாக நீக்கி வைக்கும் நெஞ்சத்தை பொதுமக்கள் பெற வேண்டும். ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் உள்ள அறுதிப் பெரும்பாண்பான்மை என்பது ஐந்தாறு இடங்கள் என்ற வகையில் ஓட்டளிக்கும் பக்குவம் வாக்காளர்களுக்கு வேண்டும். தவறு செய்யும் மனிதர்களை நீதிமன்றத்திற்கு இழுத்து சென்று தண்டிக்க வைக்கும் பொது நிறுவனங்கள் நாடெங்கும் பெருக வேண்டும். அதற்கு மக்கள் இதயங்களில் புதிய எண்ணங்கள் நாளும் மலர வேண்டும். மக்களாட்சி முறை வளராது மடியுமானால் சனநாயகத் தத்துவம் நாசமாக்கப்படுமானால் எதிர்காலம் பிரஞ்சுப் புரட்சிப்போல ஒன்றை உருவாக்கத் துணியும்.