Saturday 28 November 2015

என்ன செய்தார்கள்?

என்ன செய்தார்கள்?
அகம், புறம் ஆகிய அனைத்து நிலைகளிலும் வாழ்க்கைக்கான வளமனைத்தையும் வாரித்தந்த அறிவியல் ஆய்வுகளும் விஞ்ஞான வெளிப்பாடுகளும் இன்று எங்கும் படர்ந்து பரவிப்பரவசப் படுத்திக் கொண்டிருக்கிறது.
அறியமுடியாத அண்டவெளி நிலைகளை விண்வெளி விந்தைகளை மண்ணில் வாழும் மனிதர்கள் விழிகளிலும் மூளையிலும் பதிவு செய்த வண்ணம் இருக்கக் காண்கிறோம்.
மனிதஇனம் தோன்றிய நாளிலிருந்து தலைக்குமேல் இருக்கும் விண்மீன் கூட்டத்தை விரித்த விழி மூடாமல் வியந்தும் பயந்தும் பார்த்துக் கொண்டிருந்தது. நெஞ்சு கொண்டோர், நெறிசார்ந்தோர் இந்த நிலைகள் ஏன் என்று ஆய்ந்த வண்ணம் இருந்தனர். அறிவில் நிறைவு கொண்டோர், வியந்தும் பயந்தும் பார்த்தவர்களின் உள்ளநிலை மாற்ற ஆய்ந்தறிந்த முடிவுகளை அறைந்தவண்ணம் இருந்தனர்.
அறிவில், ஆய்வில் நிறைவு காணாத அவல நெஞ்சினர் வஞ்சம் நிறை கருத்துக்களை வாரி இறைத்த வண்ணம் இருந்தனர். இந்த இருவேறு நிலை கொண்டவர்களின் கருத்துப்போல் நீண்ட நாட்களாகவே நடந்து வரக் காணலாம்.
ஆதிகால இனக் குழு நிலைகளிலும் அடுத்து வந்த மனிதக் கூட்டங்களிலும் இந்தப் போர் நடந்து வரக் காணலாம். மதவேற்றுமை போரானாலும், நிறம் சார்ந்த போரானாலும் கருத்துச் சார்ந்த போரானாலும் என்னென்றும் நிகழ்ந்த வண்ணமே இருக்கக் காணலாம்.
இஸ்லாம் கிருஸ்துவப் போர், சிலுவைக்காக நடந்த நூற்றாண்டுப்போர், வெள்ளை கருப்புநிறப் போர், மிகநெடுங்காலமாக நடக்கின்ற ஆரிய-திராவிடப் போர் இன்றுவரை அறிவாளிகளை அழிக்கின்ற நிலையிலேயே நிற்கக் காணலாம். பலகாலம் பயணித்த பாதகமான பயனற்ற போர்களின் நிலைகளை பகுத்து வழங்கிய பழ.கருப்பையா போன்றோர் பல இடங்களுக்குச் சென்று மீண்டும் வந்து இந்த கருத்துப் போரில் தலைக்காட்ட காண்கிறோம்.
ஆயினும் தூய்மையும் துணிவும் கொண்ட அறிவாளிகளின் ஆற்றலாளிகளின் ஆக்கமிகு செய்திகளை, செயல்களை உலகில் புதுப்புதுக் கருத்துக்கள் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறது. அறியாமைக்கும் ஆதிக்கவாதிகளுக்கும் எதிரான போர் மேலும் மேலும் வலுத்துக்கொண்டே வரக் காண்கிறோம்.
ஆனால் இந்தியாவில் இத்தகைய எண்ணங்களை விதைத்து பயிர் செய்பவர் வீண் பொழுது போக்குவோர் மூளையில் கூர் தீட்டாமலும் நரம்பு நோயால் நலிந்து கிடப்போர் அனைவருமே வேதத்தில் கருத்தைகளையும் வேதியர்களின் சாரத்தையும் நம்பிக் கிடக்கின்றனர், நப்பிப் பிழைக்கின்றன்.
அய்ரோப்பா செல்வர்களின் ஆய்ந்தறிந்த கருத்துக்களிலும் அதை செயல்படுத்திய ஆற்றலாளர்களின் திறனாலும் தியாகத்தாலும் உலகம் முழுவதும் உயர்ந்து வரும் இந்த நிலை சிறிதளவும் தோன்றாக காலத்தில் அதாவது, நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே இந்திய தமிழகத்தில் ஒரு எழுச்சி நிலையை தொடங்கி வைத்தனர் தென்னிந்தியப் பேராளர்களில் சிலர்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் பெயரில் வேதம் விளைவித்த வேதனைகளிலிருந்து மக்களை விடுவிக்க விரிவான வேலைத்திட்டத்தையும் முன் வைத்தனர். விளைவு தென்னிந்தியர்களுக்கான விடியலின் வெளிச்சக் கோடுகள் தெரியத் தலைப்பட்டனர். வெள்ளையர் அரசின் கீழ் ஓர் அரசை உருவாக்கும் நிலை இருந்த நாளில் அந்த தென்னிந்த நலஉரிமைச் சங்கம் ஓர் அரசை அமைத்து அலங்கோலப்படுத்திய நிலைகளை அகற்ற ஆர்த்தெழுந்து அற்புதமான சட்டங்களை வரையறுத்து, வடித்தெடுத்து நிலைப்படுத்தியது. அதன் விளைவு வேதத்தின் வேர்கள் அறுக்கப்பட்டது. உரிமை விடியலின் வெளிச்சம் பரவிப் படர்ந்தது.
அதன் பின் சுயமரியாதை இயக்கத்தை நடத்தி வந்த, தந்தை பெரியார் வேதத்தின் ஆணி வேர்களை அறுத்தெறிய ஆர்த்தெழுந்து, ஆவேசமாகச் செயல்பட்டார். வேதத்தின் நச்சுமரக் கிளைகள் பல வெட்டப்பட்டன.
இனம், மொழி, பண்பாடு, இயற்கை அறிவியல் நிலைகளிலும் விரிவான விளக்கப் பரப்புரைகள் விளைந்த வண்ணம் இருந்தன. மாற்றமும் வளர்ச்சியும் மக்களைத் தழுவத் தொடங்கின.
ஆயினும் மேலே காட்டிய ஆதிக்க வாதிகளும் அவர்களும் அடிமைகளும் இந்த மாற்றத்தை, மறுமலர்ச்சியை சுருக்கிட அழித்திட பல்வேறு நிலைகளில் முயன்று கொண்டே இருக்கிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் எதனால் ஏற்றம் கண்டானோ, இழிவிலிருந்து மீண்டானோ அவனும் இந்த வேத மதம் சார்ந்த வீண் மனிதர்களோடு இணைந்து இருப்பதுதான்.
நூறாண்டு கால திராவிட இயக்கம் அதன் ஆதரவான அமைப்புகள் அதுசார்ந்த அருமையாளர்களை எண்ணிப்பார்க்காமல் வேதியர்குல வித்யார்த்திகளின் வெளிப்பாடுகள் முயற்சிகளை முறியடிக்க எண்ணாது இன்றுள்ள அறிவாளர்கள் ஆய்வாளர்களின் உணர்வுகள் உறங்குவதை எண்ணுகின்ற போது புகழ்பெற்ற பாடல் ஒன்றுதான் நமது நினைவில் நிலை கொள்கிறது.
சொல்லுறத சொல்லிபிட்டேன்
செய்யறதச் செஞ்சிடுங்க
நல்லதுண்ணா எடுத்துக்குங்க
கெட்டதுண்ணா விட்டுருங்க
முன்னாலே இருந்தவங்க
என்னென்னமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்சியும் செஞ்சாங்க
ஒன்னுமே நடக்காம
உள்ளம் நொந்து செத்தாங்க
என்னாலும் நடக்காதுன்னு
எனக்கும் தெரியுமுங்க
முடியிருந்தும் மொட்டைகளாய்
மூச்சிருந்தும் கட்டைகளாய்
விழியிருந்தும் பொட்டைகளாய்
விழுந்து கிடக்கப் போறீங்களா
முறையைத் தெரிஞ்சு நடந்து
பழைய நினைப்பை மறந்து
உலகம் போற பாதையிலே
உள்ளம் தெளிந்து வாரீங்களா

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனை ஞானிகளும்
புத்தரும் இயேசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதியும் வச்சாங்க
எல்லாம்தா படிச்சீங்க
என்ன செஞ்சி கிழிச்சீங்க

No comments:

Post a Comment