Thursday 31 December 2015

நெஞ்சைத் தொடுங்கள் பின்
நீட்டுங்கள் நா...பேனாவை?
ஈழப்புலிகள் ஈழப் போராட்டத்தில் இறக்க நிலை கண்ட நாளிலிருந்து இங்கொரு அவலம் சூழ்ந்த அருவெறுக்கத்தக்க சொற்கள் சுற்றிவருவதைக் காண்கிறோம்.
திராவிடக் கட்சிகள், திராவிட மாயை, என்று எதற்கெடுத்தாலும் இந்த திராவிடத்தை தொடக்கமாக்கி, ஓலமிடும் - ஊளையிடும் போக்கை அது ஏன்? என்று உணர முடிகிறது.
இந்தியாவில் ஆரிய திராவிடம் எனும் கருத்தாய்வு அதன் காரண காரிய முடிவுகள் என்பது பற்றி நேரு உள்ளிட்ட ஆய்வாளர்கள் அறிவாளர்கள் அறைந்தே வந்திருக்கிறார்கள். ஆரியம் என்பது வேதம் சார்ந்த ஆய்வற்ற ... கற்பனை வடிவ கருத்தியலாளகவும், திராவிடம் என்பது பொருள் முதல்வாத இயற்கை ஆய்வுப் பின்னணயில் உருவாகி வந்ததாகவும் ஓங்கி முழங்கி வந்திருக்கிறார்கள்.
திராவிடம் என்ற சொல் தமிழ் என்பதன் திரிந்த சொல்லே தவிர வேறு பொருள் கொண்டதல்ல. இதை இன்றுள்ள அழுக்காறு மனம் கொண்டவர்களுக்கும், அநாகரிக  அனாமதேயங்களுக்கும் விளங்க முடியாது; விளங்கவும் விளங்காது. தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல பாவனை செய்பவர்களை எழுப்ப முடியாது. கிடைத்தவரை லாபம் தொடையில் திரித்த வரை கயிறு எனும் போக்கில் இயங்கும் தமிழ் எதிரிகள் அல்லது விளையாகிப்போன சுகபோகிகள், விலை மகளை பத்தினி எனக் கருதுபவர்களிடம் பண்பாடு பற்றிக் கேட்க முடியாது.
நடக்கின்ற குறைபாடுகளுக்கு திராவிடக் கட்சிகளின் கொள்கையும் ஆட்சியும்தான் காரணம் என்று அந்தக் கட்சியில் அங்கம் வகித்தவர்களும் அதனுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் உடனிருந்தவர்களும் ஆதாயம் பெற்றவர்களும் அய்ம்பது ஆண்டுகளாக சமூக, பொருளாதார வளர்ச்சி நிலைகள், வளங்களை ஆய்வு செய்யாமல் மனச்சாட்சி, மனச்சான்று கிஞ்சிற்றும் இல்லாதவர்கள் தித்திக்கும் திராவிட சித்தாந்த எதிரிகளின் சதிவிலையில் சிக்கி சிறுநரியின் ஊழைக் கூச்சலால் மக்களை திசை திருப்பப் பார்க்குகிறார்கள்.
திராவிட இயக்கம் தொடங்கிய காலமுதல் இன்றுவரை உள்ள நூறாண்டு பணிகளை பத்துப்பத்து ஆண்டு காலமாக உற்றுப் பார்த்தால் உண்மை எதுவென்று உணர முடியும். 1910 களில் இங்குள்ள சமூக நிலைகளை எண்ணிப் பார்த்தால் அந்த இயக்கத்தின் இனிமையும் வலிமையும் எளிதில் விளங்கும். ஆட்சி நிலையை ஆய்வு செய்தால் வெள்ளையர் காலம் இந்திய விடுதலைக்குப்பின் ஆண்ட காங்கிரசு நிலையும் எத்தனை விழுக்காடு இந்த மக்களுக்கு ஏற்றம் தந்தன என்று எண்ணிப் பார்த்தால், 1970 வரைக்கும் பஞ்சமும் பட்டினியும், நோயும் நொடியும் உடுத்தும் உடுப்பின்றி வேறு என்ன இங்கே வளம் கொட்டிக் கொண்டிருந்தது.
ஆண்டுகளுக்கு இருமுறை தானே பெரும்பாலோர் அரிசிச்சோறும் கறியும் கோழியும் தின்னதேயன்றி வேறு செழுமை என்ன நிறைந்து கிடந்தது. மூன்று, நான்கு கோடிப்பேருக்கே இருந்த நிலை, ஆனால் இதற்குப் பின்னர் இங்கு ஏழரைக் கோடி பேராக எகிறி நிற்கும் நிலையில் இங்கே எல்லாத் துறைகளிலும் உள்ள நிலைகளில் இதயம் உள்ளோர் எண்ணிப் பார்க்கட்டும். வரலாறு பொருளாதார அறிவுள்ளோர் புள்ளி விபரங்களை முன் வைக்கட்டும். எதிலும் துல்லியமான புள்ளி விபரங்களைத் தந்து பேச வேண்டுமே தவிர பொய், புனைவு, புழுதி மனத்திலிருந்து புலம்பலாக கதற்வது பொதுவாழ்வு, பொது அறிவுக்கு கேடானதாகும்.
பெரியார் சொன்னார், வைதீகர்களை நம்பலாம், லவ்கீகர்களை நம்பக் கூடாது என்றார். எதிரில் நிற்கும் பகைவனை அடையாளம் காணலாம். மறைந்திருக்கும் துரோகிகளை அடையாளம் காண்பது கடினமாகும். அடுத்துக் கிடக்கும் துரோகிகளால் ஆயிரம் பேர் பொதுவாழ்வில் நுழைந்து தமிழ் சமூகத்தில் அவல நிலைகளை அடைகாத்து அருவருப்பை பொரித்து வருகிறார்கள்.
திராவிடம் எனும் சொல் ஒரு இனத்தின் குறியீடு. இந்த இனத்தில் பல மொழிகள், திசை மொழிகள் விரிந்து பரந்து கிடக்கின்றன. அதுகூட தமிழ்ச்சொல்தான். இந்த இனிமையும் புகழும் மட்டுமல்ல. உலகில் எல்லா மொழிகளின் தாய்மொழி, மூலமொழி தமிழ்தான். ஆனால் அதை ஆரியர்களும், அரேபியர்களும், அய்ரோப்பியர்களும் அவர்களது நாவில் உச்சரிக்கும் வளம் இல்லாததால் தமிழை டமில், திரமிளம், திராவிடம் என்று உச்சரித்தார்கள். அப்படித் திரிந்த சொல்தான் திராவிடம் ஆகும். அத்தோடு பல மொழிகள் கொண்ட இனத்தின் பெயராகவும் விளங்குகிறது.
அப்படிப் பார்த்தால், இங்குள்ள எல்லாருமே திராவிடர்கள்தான், இங்குள்ள எல்லாக் கட்சிகளும் திராவிடக் கட்சிகள்தான். இதில் அந்த இனத்தின் பெயரைத் தாங்கிய கட்சிதான் இந்த இனத்தின் உண்மையான பொதுநல அமைப்பாக கருத  வேண்டும். இதில் தி.க. தி.மு.க மட்டும் திராவிடம் என்று தோன்றுகிறது. மற்ற கட்சிகள் முன்னும் பின்னும் அடைமொழிகளால் அதன் தூய்மையைக் கெடுத்து விடுகிறார்கள்.
அதன் பெயரில் மட்டுமல்ல அதன் கொள்கை, கோட்பாடு, நடைமுறைகள் கூட கோளாறுகள், குறைபாடுகள், குன்றளவு கோணல்முறையும் குடிபுகுந்து விட்டன. ஆரியமாலா தலைமை தாங்கும் ஒரு கட்சியை அண்ணா பெயர் சூட்டி, அவர் கண்ட கட்சியை நினைத்து நடத்தினாலும் அதற்கு திராவிட செழுமை கொண்டது என்று எப்படிச் சொல்ல முடியும். நான்  பாப்பாத்திதான், என்னை ஆட்டவும், அசைக்கவும் முடியாது என்ற ஆணவ மங்கையை அறமறியா ஆரநங்கை, ஆசைகளின் வடிவமான ஒரு நடிகையை எப்படி திராவிடத் திருமகள் என்று எப்படி அழைக்க முடியும். அதுவும் அறிவுள்ளோர் பொதுவாழ்வு புழுதியில் குளிக்காதவர்கள், பித்தம் பிடிக்காதவர்கள், பேராசை இல்லாதவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
சரி, அது போகட்டும் இந்த எதிர் கட்சிகளின் தரவுகள், நிகழ்வுகள், நிலைபெற்ற வளர்ச்சி வடிவங்கள், பயன்படும் காட்சித் தொகுப்புகளை ஆராய வேண்டுவது ஊடகங்களின் பொறுப்பாகும். பொதுவாழ்வுப் பணியாளர்களின் பொறுப்பு, உழைப்பு, செயல்நிலை, தியாகநிலை நேரம் பார்த்து மக்களின் நினைத்துப் பார்க்கும் நெஞ்சமெது என்று துல்லியமாக ஆராயந்து மதிப்பெண் போட்டு மக்களுக்குச் சொல்வது ஊடகங்களின் கடமையாகும் அல்லவா?
ஊளையிடும் ஊழல் நரிகளெல்லாம் ஊராண்டால் என்னவாகும் என்பதற்கு தழில் பழைய மொழி பழமொழி ஒன்று உண்டு. நரிக்கு நாட்டாமை கொடுத்தால்; கிடைக்கு ரெண்டு ஆடு காணாமல் போகும் என்பதுதான் அந்த இழிந்தமொழி.
வணிகத்தனம் இல்லாத வாய்மை சார்ந்த பத்திரிக்கைகளை மற்ற ஊடகங்களை நினைத்து வைத்து, பாடுகிறார் இனிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்,
அறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிக்கைப் பெண்ணே என்றும்,
நறுமலர் இதழ் பெண்ணே உன் நலம் காணார் ஞாலம் காணார் என்று அறைகிறார். அதை இங்கேயுள்ள அனைவரும் நினைத்துப் பார்ப்பார்களா?
உலகில் உள்ள அனைத்து மதங்களான சமணம், புத்தம், சைவம், வைணவம், இசுலாம், கிறித்தவம், ஆசிவகம், லோகாதயம் அனைத்துச் செழுமைகளும் திராவிடம் தான். அறிவு, ஆய்வு, தூய்மை சார் அனைத்தும் திராவிடம் தான். அவற்றில் தூய்மை கெட்டிருக்கலாம், துல்லியம் இல்லாதிருக்கலாம். ஒரு கருத்து தொலைதூரங்களுக்குப் போகின்றபோது இடையூறுகள் தோன்றி இடைச்செருகல் ஏற்பட்டிருக்கலாம். பகுத்தறிவு பாழ்பட்டு பயனற்ற நிலை கண்டிருக்கலாம். இவைகளில் சில சில அம்சங்களை நீக்கிவிட்டார். அறம் சார்ந்த நெறிகள் அனைத்துமே திராவிடம் சார்ந்ததுதான்.
கிரேக்க, ரோமானிய, எகிப்தின் நல்ல சிந்தனைகள் கூட திராவிட அடித்தளம்தான். இந்த வேத நிலைகளில் கூட, அறம் சாராத, அறிவியல் சாராத, ஆய்வுக் கலப்பில்லாத சில மவுடீக நிலை பிறவிப் பேதங்களையும் நீக்கி விட்டு, அதன் இயற்கை வர்ணனைகளை ஏனையவற்றை எண்ணிப்பார்த்தால் அதுவும் திராவிடம் தான். தங்களை பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் நாங்கள் ஆரியர்கள். தங்களை மட்டுமே அறிவாளிகள் என்ற இருமாப்புக் கொண்ட வைதீகர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் திராவிடர்கள்தான்.
தங்களின் மொழி சமஸ்கிருதம் என்று எண்ணுகின்ற மொழிகூட திராவிடத்தின் இன்னொரு மொழிதான். அதை தமிழ் அறிஞர்கள் வடமொழி என்றார்கள். விந்தியத்திற்கு வடக்கிலும் தெற்கிலும் வழங்கியதை வடமொழி, தென்மொழி என்றார்கள். வடமொழி என்பது மற்றவர்களுக்கு புரியக் கூடாது என்பதற்காக அறிவாளிகளுக்கிடையே உறவு கொண்ட சிந்துவெளித் தமிழர்கள் கண்ட மறைமொழியானது. அதனால் அதை உயர்மொழி என்று உரைத்துக் கொண்டார்கள். அதனிடையே புகுந்த தீமைகளை நீக்கிவிட்டால்  அதுவும் திராவிடம் தான்.
ஆரியம் - திராவிடம் பற்றிய அண்ணாவிடம் வினவினார்கள். அவர் சொன்னார் உலகம் முழுவதுமே ஆரிய, திராவிடர்கள் இருக்கிறார் என்று கூறிவிட்டு, உழைத்து உண்மை உணர்வோடு வாழ்பவர்கள் திராவிடர்கள். உழைக்காது, ஊரை ஏய்த்து, உல்லாச நிலையில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பவர்கள் ஆரியர் என்றொரு ஆய்வுக் கருத்தை விளக்கினார்.
திராவிடம் சார்ந்த திராவிடத் தரவுகளை பெருமளவு தனது ஆட்சியில் நிலைநாட்டியவர் கலைஞர் அவர்கள். உள்ளத்து உணர்வுகளில் ஊக்க நிலையை உணர்த்தியவர் கலைஞர். புற நிலையில் பொருளாதார நிலையில் ஏறத்தாள ஒரு புரட்சியில் நடத்தியவர் கலைஞர். அவரது ஆட்சியின் நிதி நிலை அறிக்கைகளையும் அவரது ஆணைகளையும் வருவாயில் அவர் காட்டிய ஆற்றலும் நிலையும் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் அதன் விளைவுகளும் பயனும் வானைத் தொடும் ஒன்றாகும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை திராவிடக் கட்சியின் ஆட்சி என்பது உண்மைக்கு மாறானது, உளத் தூய்மை இல்லாதது, உதவாக்கறைகளின் புலம்பலை ஒத்தது. இந்தத் தீமை கருத்துக்களை தந்தவர்களை திட்டத் தொடங்கினால் ஒரு படத்தில் நடிகர் டி.எஸ்.பாலையா அவர்கள் உன்னைத் திட்டித் திட்டியே என் நாக்கு தேய்ந்து விட்டது என்பதுபோல உன்னைத் திட்டுவதற்கு ஒரு நாக்கு போதாது. ஆதிசேசன் கற்பனை போல் ஆயிரம் நாக்குகள் வேண்டும்.  ஆகவே, மக்களிடம் முகம் காட்டும் மகானுபாவர்கள் முதலில் உங்கள் நெஞ்சைத் தொடுங்கள். பின் நீட்டுங்கள் நா.. பேனாவை.

No comments:

Post a Comment