Wednesday 20 April 2016

தித்திக்கும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையும் செழுமைமிகு தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கையும்



தித்திக்கும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையும்
செழுமைமிகு தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கையும்

பேரன்புடையீர், வணக்கம், நலம்சூழ வாழ்த்துக்கள். 

     தி.மு.கவின் தொடக்க காலத்திலிருந்தே தென்னக நலன் பேணவும் தென்னிந்தியாவின் ஒருமையைக் காக்கவும் மூடநம்பிக்கையில் முற்றாக மூழ்கியிருந்த சமூகத்தின் மாசுகளைத் துடைக்கவும், தெளிந்த சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் தீர்வுதரும் கொள்கை, கோட்பாடு, இலட்சியங்களையும் உள்ளடக்கி அதன் வெற்றிக்காக செயல்திறத்துடன் எல்லாவகையான உத்திகளோடு இன்றுவரை உழைக்கின்ற உயர்வான இயக்கம் தி.மு.க.
    இனம், மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம், மண்வாசனை சார்ந்த வரலாறு ஆகியவற்றின் செழுமைகளை சிந்தையில் கொண்டு உழைத்த தி.மு.க. இந்திய சூழலில் உள்ள நிலைகளையும் நெஞ்சில் கொண்டு இயங்கியது.
     தேர்தலே வேண்டாம் என்ற பெரியாரின் நிலையிலிருந்து விலகி, ஓர் அரசியல் அமைப்பாக உருவான நாள்முதலாய் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது தி.மு.க. தேர்தலில் ஈடுபாடு காட்டாத 1952ல் கூட தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
தேர்தலில் ஈடுபட பொதுமக்களின் அனுமதியை கோரி பெற்று, 1957ல் இருந்து புதுமையான தேர்தல் அறிக்கையை வெளிப்படுத்தி வியப்படைய வைத்தது தி.மு.க. 1967ல் இருந்து தேர்தல் அறிக்கை போலவே அரசின் நிதிநிலை அறிக்கையும் புதுமையையும் புரட்சியையும் செய்தது.
     ஓர் அரசியல் கட்சியின் நோக்கம், மக்களின் புறத்தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் இயங்குவதுதான் இங்கு வழக்கமாக இருந்தது. உணவு, உடை, உறைவிட வசதிகளை ஏற்படுத்தித் தருவது அந்தக் கட்சிகளின் கடைமையென்று உணர்த்தப்பட்டது. ஆனால் அதைக்கூட செய்ய இயலாத கட்சிகள் இங்கே இயங்கின, இயங்கி வருகின்றன.
      இதில் தி.மு.க. திட்டமும் வலியுறுத்தலும் வழிகாட்டலும் அதன் ஆட்சியில் மக்களுக்கு பெருமளவிற்கு வழங்கப்பட்டது. ஆனால் இத்துடன் அறிவுக் கூடங்கள், பள்ளிக் கூடங்கள், பல்கலைக்கழகங்கள், பலப்பல கலாசாலைகள் செய்ததை, செய்யவேண்டிதை எல்லாம் தன் இதயத்தில் கொண்டு இயங்கியது தி.மு.க.
மக்களை அணுகி தன் கொள்கை திட்டங்களை பதிவு செய்ய மாலைநேர அரசியல் பேச்சு மேடைகள், மாலை நேர கல்லூரியாக மாவட்ட மாநில மாநாடுகள் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பல்வேறு பாடத்திட்டங்களைப்போல் இன்னும் சொல்வதென்றால் அந்தக் கலைக்கூடங்களையும் தாண்டிய ஆய்வரங்கங்களாக செயல்பட்டது.
திரைப்படங்கள், ஏடுகள், இதழ்கள், நூல்கள், கலைக்குழுக்களின் வழியாக பல்சுவைச் செய்திகள் மக்களிடம் பதிவு செய்யப்பட்டு பல்வேறு அணிகளின் வழியாக துறைதோறும் துறைதோறும் சொல்லப்படவேண்டி தூய நிலைகள் பயிர் செய்யப்பட்டது.
       நூறு ஆண்டுகளுக்கு முன் விதைக்கப்பட்ட தமிழ்ச் செழுமைகளை அறிந்து உள்வாங்கி விதையைப் பயிராக்க, நீர் வார்தது உரமிட்டு வளர்த்ததில் தி.மு.க வின் உழைப்பு உயர்வானது, உன்னதமானது. தமிழ் தமிழர்களின் நலனுக்காக தி.மு.க சொன்னதையும் செய்ததையும் வேறு யாராலும் சொல்ல முடியாது. செய்யவும் இயலாது.
பேச்சாலும், எழுத்தாலும், உழைப்பாலும், போராட்டத் தியாகத்தாலும் இன்றைய தமிழர்களின் எல்லாவகை உயர்வுக்கும் சான்றாக, சாட்சியாக, காட்சியாக இருப்பது தி.மு.க ஒன்றுதான்.
       குறிப்பாக மேற்கண்டவற்றோடு அந்த இயக்கதின் தேர்தல் அறிக்கையும் தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கையும் எண்ணிப்பார்க்க வேண்டிய இதயத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
     அறிவுசார்ந்த, ஆய்வு செறிந்த, விஞ்ஞான உணர்வு நிறைந்த அந்த அறிக்கைகளை தி.மு.க வெளியிட்டதில் 75 விழுக்காடு கலைஞர் தலைமையில் வெளியிட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாகும்.
      தித்திக்கும் தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை கழக அரசின் நிதிநிலை அறிக்கைகளை பெரியார் அண்ணா ஆகியோரின் உணர்வுகளைத் தாங்கி அவர்களின் அடியொற்றி நடக்கும் தலைவர் கலைஞர் வெளியிட்டார்.
       சொன்னதைச் செய்தார், இன்று சொல்வதையும் செய்வார். அருமைசார்ந்த அந்த அறிக்கைகளின் செயல்பாட்டு வடிவமே மூணே முக்கால் கோடித் தமிழர்கள் இன்று ஏழரைக் கோடியான நிலையிலும் வாழ்க்கை நிலை பலநூறு மடங்கு வளங்களை வாரித் தந்திருக்கிறது என்பதை கற்றறிந்தோர், கலைபடித்தோர், நடுநிலையாளர்கள், நல்லறிவாளர்கள், ஏடுகள், இதழ்கள், ஊடகங்கள், பல்சுவை ஆற்றலாளர்கள் மக்களிடம் இந்த இருவகையான அறிக்கைகளை எடுத்துக்காட்டி இன்று இருக்கின்ற எல்லாவகை உயர்வுக்கும் காரணம் இதுவென்றே உணர்த்த வேண்டியது கடமையாகும் என்று வலியுறுத்துகின்றோம்.

No comments:

Post a Comment