Monday 23 March 2015

மதமும் மயக்கமும்


காவிய நூல்களில் இடையிடையே பதிக்கப்பட்ட சீர்மிளிர்ந்த சித்திரமும் செழுமை கொண்ட ஓவியம் போல என் கருவிழிகளின் முன் இரு நூல்கள் கலை சிந்தும் காட்சியாகி, களிப்புற வைத்தது.
புதுமை பூத்த புகழ்மிகுந்த பொதுஉடமை சிந்தையனையாளர்களான திரு. பிரடரிக் ஏங்கல்ஸ் வரைந்த வரலாற்றில் கிறித்துவம் திரு.எம்.என்.ராய் ஆராய்ந்து எழுதிய இசுலாம் ஒரு வரலாற்றுப் பாத்திரம் எனும் அருமையான பனுவல்கள்தான் அவைகள்.
திரு. ஏங்கல்ஸ்சின் எழுத்துக்களை நிறைய படித்திருந்தாலும், அவருடைய இயக்கவியல் பொருள் முதல் வாதம் எனும் நூலில் உள்ள செய்தி ஒன்று இதயத்திரையில் ஓவியமாய் பதிந்து உள்ளம் மகிழ்வில் திளைத்தது.
சூசூமனிதன் மாமிசத்தை அவித்து உண்டபின்தான் மூளையின் சிந்தனைப் பகுதி சீர்கண்டது, செழுமை கண்டது, கூர்மை அடைந்தது. பரிணாமத்திறன் பல மடங்கு வளர்ந்து புதுமைகளைப் படைக்கத் தூண்டியது” என்பதுதான் அந்தச் செய்தி.
மனித குல வரலாற்றில் பேரளவுக்கு மூளையில் மாற்றத்தை வளர்ச்சியைத் தோற்றுவித்தது மாமிசம். அந்த மாமிச உணவகத்தை நடத்தி மக்களுக்கு உணவளித்த நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வது இயல்புதானே. அத்தகைய ஆய்வுத் திறமிக்க அறிவாளர் ஏங்கல்ஸ் அவர்கள் வரலாற்றில் கிறித்துவம் எனும் நூலிலும் மிக நுட்பமான செய்திகளை முன்வைக்கிறார்.
உலகப் பெரும் மதமாக கிறித்துவம் ஆனதற்கு காரணம் காலங்கள் தோறும் நடந்த போர்களும் அந்தப் போர்களில் பாதிக்கப்பட்ட மக்களிடம் இந்த நாடோடி பரதேசிகள் (பாதிரிகள்) செய்த ஆறுதல் பரப்புரைதான், அதாவது ஆண்டவனை நினைத்தால் வணங்கினால் உங்கள் அவலங்கள் தீரும் என்ற வகையில் செய்த பரப்புரைதான் அந்த மதத்தின் பால் அந்த மக்களை குவியச் செய்தது என்கிறார். இன்றும் கூட அன்னை தெரசாவின் பணிகளைப் பார்க்கலாம்.
அத்துடன் பணக்காரர்களையும் அந்தப் பணத்தால் பயன் பெறுவோரின் நலங்களும் வாழ்வும் கூட அந்த ஆண்டவனால்தான் என்று நம்ப வைத்து அதற்கு பணத்தின் மூலம் ஏதாவது நன்மைகள் செய்து, மேலும் மேலும மதத்கருத்தை அழுத்தி வைத்து அடிமையாக்கினார் என்கிறார்.
கிறிஸ்து என்பது யூத இனத்து கிறிஸ்து அல்ல, அது அய்ரோப்பிய உணர்வுள்ள கிறிஸ்து என்கிறார். அப்படித்தான் மகா கான்ஸ்டைன் ஏற்பாடுகள் மூலம் உருவாக்கினார் எனும் உண்மையையும் உரைத்து விளக்குகிறார். ஆய்வுச் செய்திகளை அள்ளி வழங்குகிறார்.
மமதைகொண்ட மன்னர்களின் போர் வெறியால் மற்றும் பல சிக்கல்களால் உருவான துயரமும் துன்பமும் துக்கமும், பொய் பித்தலாட்டப் புளுகுகளால் பிழைப்பு நடத்தும் போலிகளால் உருவான புரட்டு மொழிகளுமே உலகில் எதற்கும் உதவாத மதங்கள் வளரவும், வலுப்பெறவும் உதவியது என்கிறார் ஏங்கல்சா அவர்கள்.
மற்றொரு நூல் இசுலாம் ஒரு வரலாற்றுப் பாத்திரம் - இது திரு. எம்.என்.ராய் தீட்டியது. எம்.என். ராயைப்பற்றி அண்ணா குறிப்பிட்ட ஒரு வாக்கியம் மனதில் நிறைந்திருக்கிறது. மார்க்சிய பொதுஉமைக்கு மேலே எதுவும் கிடையாது என்றும்.அதற்கு மாற்று கிடையாது என்று இங்குள்ள கம்யூனிஸ்டுகள் வாதிட்ட போது அண்ணா சொன்னார், அதற்கு மாற்றான சிந்தனையை திரு. எம்.என்.ராய் கொண்டிருந்தார். ஆம் அவர் ஹியுமானிசம்தான் அது என்றார் என்று கூறி, ராயை மக்களுக்குள் நிலை நிறுத்தினார் அண்ணா.
இந்த நூலில், என்.என். ராயின் ஆய்வுப் பார்வை மிக அற்புதமானதாகும். இசுலாம் ஒரு மதமல்ல, அது  வாழ்க்கைக்கான மார்க்கம் என்று தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் கூறினார்கள். அதன் உட்பொருள் எனக்கு இதுவரை அறிய முடியாததாக இருந்தது.
ஆனால் ராய் எழுதிய இந்த நூலில் எண்ணற்ற விளக்கங்கள் கிடைக்கிறது. முகமது நபியைப் பற்றியும் அவரின் வழி நடந்த தளபதிகளைப் பற்றியும் (கலிபாக்கள்) குர்ஆன் சொல்லாத, ஏன் அந்தக் குர்ஆனில் இருந்து வேறுபட்ட செய்திகளைச் சொல்லி அதன் சீரிய சிறந்த நிலைகள் உணர்வுகள் கொள்கைக் கோட்பாடுகளை தெள்ளத் தெளிவாக விளக்குகிறார்.
நபி வாழ்ந்த காலம் அதற்கு முன்னிருந்த அரபுப் பகுதி இறைவனின் வாள் என்று பெயர் வைத்த படைகளின் வெற்றி, அந்தப் படைகளின் கண்ணியம், போர் வெறியற்ற இலட்சிய நோக்கு, பொல்லாங்கு செய்யாத படைவீரர்கள், அறிவுப் பார்வை கொண்ட அதாவது பகுத்தறிவோடு உண்மைகளை உள்வாங்கி உலகிற்கு பல செய்திகளைச் சொன்ன நபியின் தளபதி அபுபக்கர் போன்றோரின் பெருமையென பலபட விளக்குகிறார் திரு ராய் அவர்கள்.
இத்தனையிலும் பயன்மிகு செய்தியொன்றை விளக்குகிறார் திரு. ராய் அவர்கள். இன்றைய உலகின் அறிவியல் வளர்ச்சிக்கும் தொழிற்புரட்சிக்கும் சிந்தனைக் கூர்மைக்கும் அடித்தளமான கருத்தோட்டங்களை உருவாக்கியவர்கள் கிரேக்க மாமேதைகள்.
அவர்களின் அத்தனை அறிவுச் செல்வத்தை அழிக்க முயன்றவர்கள் இத்தாலி கிறிஸ்துவதத்தின் காவலர்கள். அந்த அறிவுச் செல்வங்களை எல்லாம் பாதுகாத்து அய்ரோப்பாவிற்கு வழங்கியவர்கள் நபியின் வழிநடந்தவர்களென உறுதிப்பட உரைக்கிறார்கள் திரு.எம்.என்.ராய் அவர்கள்.
பின்னர் வந்து இசுலாமிய மதத்தில் சேர்ந்தவர்கள் அதாவது செங்கிஸ்கான் போன்றவர்கள், துருக்கியர் போன்றவர்கள்தான் போர்க்கொடுமைகளையும், பலதார வாழ்க்கையைப் போதித்தவர்கள் என்கிறார்.
பகுத்தறிவாளர்களாகவும் என் பண்புசேர் நாத்திகர்களாகவும் விளங்கியவர்கள் நபியுடன் சேர்ந்து இசுலாத்தை நெறிப்படுத்தி நிலைநிறுத்தியவர்கள் அபுபக்கரும், அடுத்தடுத்த வந்தவர்களும் என்கிறார் திரு. ராய் அவர்கள்.
வானியல் அறிவை முதலில் உலகிற்கு வழங்கியவர் என்ற பெருமையை அபுபக்கருக்கு வழங்குகிறார் திரு. ராய் அவர்கள். நபிகள் நாயகத்தின்  அறம் கண்ட மக்கள் முதலில் அவரை தீர்க்க தரிசி என்றனர். அதை மறுத்தார் நபிகள். பின்னர், அவர் இல்லாத காலத்தில் இறைதூதர் என்றார்கள்.
ஓர் இறைவன் கோட்பாட்டை வழங்கியவர்கள் நபியோடு அவரின் தளபதிகளும் என்கிறார் ராய். அதில் உளத்தூய்மையுடன் வாழ்ந்தவர்கள் இசுலாமியர்கள் என்றும் உறுதிபடக் கூறுகிறார். இந்தியப் பார்ப்பனர் என்றாலும் இதயத் தூய்மையுடன் இவற்றையெல்லாம் எடுத்துக் காட்டுகிறார் திரு. ராய் அவர்கள்.
இந்த நூலில் இவர் தரும் தெளிவினை இந்தியக் கம்யூனிஸ்டுகள், இந்துத்வா கொள்கையாளர்கள் ஏன் இசுலாமியர்கள் கூட கொண்டிருக்கிறார்களா என்றால்? பதில் காண்பது அய்யம் தான்.
அரசியல், அறநெறி, பகுத்தறிவு, பண்பாடு, அறிவியல் ஆய்வு, ஒன்றே குலம், ஒருவனே தேவன், அமைதி, அன்பு என்று உருவான இசுலாத்தில் இடர்பாடுகள் தோன்றிவிட்டதாக வருந்துகிறார் திரு. ராய் அவர்கள்.
பழந்தமிழர் கோட்பாடுகளும், பின்னர் புத்தர் கண்ட சமன்பாடு, சமணர்களின் அருள்நிலை இசுலாத்தில் இணைந்திருந்ததாக எம்.என்.ராயின் இசுலாம் ஒரு வரலாற்றுப் பாத்திரம் எனும் நூலைப் படிக்கின்ற போது உள்ளம் உணர்வதைக் காண முடிகிறது.
உயிரினங்கள் என்று உணரப்படும் உடல் இயக்கங்கள் படைப்பா? பரிணாமமா? என்று வினா தொடுத்தால், அது பரிணாமம் என்றே விடைகிடைக்கும்.
படைப்பு ஒரு முழு உருவத்தைக் குறிப்பதாகும். கருத்தியலில் படைப்பு என்பது கற்பனையானது. ஆதிக்க உணர்வுக்கு ஆதாயம் தருவது.
ஆனால் பரிணாமம் என்பது பல்வகை ஆய்வுகளுக்கு அடித்தளம் ஆனது. மாற்றங்களுக்கு உட்பட்டது, வளர் நிலை கொண்டது, தொட்டுப் பார்த்து துலங்கக்கூடியது. அதை உற்றுப்பார்த்து உணர்வது. ஒரு குறிப்பிட்ட வயது, வரையரைக்கு உட்பட்டது.
கற்க கசடற என்கிறார் நமது வள்ளுவர். அப்படித்தான் இந்த இருபெரும் இனியவர்கள் தாங்கள் கற்றதை, கணித்ததை, கருத்துகளை வரைகிறார்கள்.
வரலாற்றில் வளைந்து கவிழ்ந்ததையும் நிமிர்ந்து நிலை கொண்டதையும் கசடு இல்லாத காழ்ப்புணர்வு அற்ற நேர்மையுடன் வெளிப்படுத்துகிறார்கள், நெஞ்சில் ஒளி விடுகிறார்கள்.
ஆய்வு நெறிகளில் ஆளுமை கொண்ட அறிவாளர்கள் பிரடரிக் ஏங்கல்ஸ், எம்.என்.ராய் ஆகிய இருவரின் நூல்கள் விளக்கத்தின் வெளிச்சமாய் விழிகளின் முன் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.
நன்றி!

No comments:

Post a Comment