Wednesday 13 July 2016

ஆவணங்களை அழிய விடுவது சரியா? அழிப்பது அறம் மீறும் ஆணவமல்லவா?

ஆவணங்களை அழிய விடுவது சரியா?
அழிப்பது அறம் மீறும் ஆணவமல்லவா?
இந்தியத் துணைக் கண்ட வரலாறு பற்றிய செய்திகளை பல காலம் பல்வேறு ஆய்வாளர்கள் அறிவார்ந்த பெருமக்கள் அவ்வப்போது கிடைக்கின்ற சான்றை முன் வைத்து தங்கள் படைப்புகளில் தருகின்ற வகையில் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.
தென்மொழி (தமிழ்) வடமொழி (சமஸ்கிருதம்) இவைகளுக்கு முன் வழங்கிய மொழிகள். இவைகளிலிருந்து பிரிந்து, திரிந்து, சிதைந்த மொழிகளில் கிடைக்கின்ற செய்திகளை முன்வைத்து ஆய்ந்து தங்கள் வெளிப்பாட்டை முன்வைத்துச் சென்றிருக்கிறார்கள். இன்னும் பலர் இதில் ஆர்வம் கொண்டு தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள்.
ஆயினும் இவர்களுக்குள் ஓர் ஒற்றுமையோ உடன்பாடோ இருப்பதாக அறிந்து ஓர் ஆராய்ச்சி அரங்காக ஆகி விடக் கூடும்.
இவர்களுக்கு முன்னோடியாகவும் மற்றும் பல உலகப் பயணிகள் குறிப்புகளில் இந்தப் பகுதியின் செய்திகள் அடங்கியிருக்கின்றன.
உலகில் பல உண்மைகளை உயிரைப் பணயம் வைத்து வழங்கிய அய்ரோப்பியர்களின் மனச் செழுமை இந்தியத் துணைக் கண்டத்திலும் ஈடுபாடு காட்டியது.
ஆங்கில படைத்தளபதி, நில அளவையாளர் காலின் மெக்கன்சியின் பெருமனமும் பேருழைப்பும் உன்னதமானது. அய்ரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்து கிறித்துவத்தைப் பரப்ப வந்த மதகுருமார்கள், ஆங்கிலேய அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இங்கு மறைக்கப்பட்ட மறந்து மறைந்து கிடந்த பல்வேறு உண்மைகளை உலகிற்கு ஒளிவெள்ளத்தில் காட்டி இங்குள்ள பகுத்தறிவாளர்கள் உண்மை ஆய்வாளர்களின் மனங்களை மகிழ்வித்தார்கள்.
சிந்து வெளிச் செய்திகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதையெல்லாம் நூல் ஆராய்ச்சி அகழ்வாராய்ச்சி கடல் ஆய்வுகள் வழியாக எண்ணற்ற உண்மைகளை இங்குள்ள மண்சார்ந்த மக்களுக்கு எடுத்துக் காட்டி இனிமை சேர்த்தார்கள்.
இங்குள்ள ஆலயங்கள், கோவில்கள் பல்வேறு மலைக் குகைக் பாறைகளில் பதிவு செய்யப்பட்ட, மண்ணுக்குள் கிடந்த பல்வேறு கல்வெட்டுகளில் அறுபத்தைந்து விழுக்காடு தமிழ்மொழியிலும், முப்பத்தைய்ந்து விழுக்காடு வடமொழியிலும் பதிவாகியிருக்கிறது.
இந்தியா உருவாக எண்ணற்றவற்றை இழந்த தமிழர்கள் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டும் கல்வெட்டுச் செய்திகளை இந்திய அரசாங்கம் பொருள் அறிந்து அச்சாக்கி வைக்கும் முயற்சியில் முழுமையும் ஈடுபாடு காட்டவில்லை.
தங்களை அடிமைப் படுத்திய ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதியின் சிறப்புகளை தோண்டி எடுத்து துடைத்து பதிவு செய்ய சிந்துசமவெளி அகழ்வாய்வை நடத்தியது ஆங்கில அரசு. ஆனால் தமிழகத்தையும் இணைத்து விடுதலை பெற்றபின் இந்திய அரசின் பாராமுகம் அல்லது தமிழ் தமிழர்மீது உள்ள வெறுப்புக் காரணமாக கல்வெட்டுகளையே வேறு பல வரலாற்று ஆதாரங்களை இன்று வரை அழியவிட்டுக் கொண்டிருக்கிறது.
பதினெட்டு மேடுகளைக் கொண்ட சிந்துவெளியில் இரண்டே மேடுகளை மட்டுமே தோண்டியதால் வெளிப்பட்ட புதுமையும் பொருளுகளும் உலகையே வியக்க வைத்தது.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் பல்கலைக்கழகங்களும் சிந்து வெளிப்பகுதிகளை ஆய்வு செய்து ஆக்கமிகு செய்திகளை அள்ளி வழங்கியது. மேல்நாட்டு கிறித்துவ மதகுரு ஈராஸ் போன்றவர்கள் நிறைய நிறைய ஆய்வுச் செய்திகளை வாரி வழங்கியிருக்கிறார்கள்.
ஆனால் இந்திய அரசாங்கங்களோ இந்தியப் பல்கலைக்கழகங்களோ பார்வையிடுவதேயில்லை. அழிந்து வரும் சிந்துவெளிப் பகுதிகளை பாதுகாக்கவும் எந்தவித முயற்சியும் செய்யவில்லை. காரணம் அது தமிழ் தமிழர்கள் சார்ந்தது என்பதுதான்.
உலகத்தின் முதல் உயிர் அல்லது முதல் மனிதன் எங்கு என்று ஆய்வு செய்த மேல்நாட்டு ஆய்வாளர்களும் அறிஞர்களும் ரஷ்ய கீழ்த்திசை ஆராய்ச்சி மையமும் கோண்டுவானா என்னும் இலமூரியப் பகுதியை அகழ்வாராய்வு செய்தால் தெரிந்து விடும் என்றார்கள். ஆனால் இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கும் எந்த அக்கரையும் இல்லை என்பதுதான் உண்மை. காரணம் என்ன? இலமூரிய என்பது தமிழர் வாழ்ந்த பகுதி என்பதுதான்.
இந்தியா முழுவதும் தமிழகமாக இருந்த நாள் ஒன்று உண்டு. அப்போது கீழ்க் கடலிலும் மேல்க்கடலிலும் ஆற்று முகத்துவாரங்களில் அமைந்திருந்த வணிக நகரங்களான பூம்புகார், அழகன்குளம் (தொண்டி, கொற்கை, குமரித்துறை, வஞ்சி, முசிறி, துவாரகை மற்றும் சில நகரங்களை கடலாய்வு செய்ய வேண்டும் என்ற அக்கறையோ முயற்சியோ இந்திய ஆட்சியாளர்களிடம் இல்லை. இல்லாதது மட்டுமல்ல. அதில் விருப்பமும் இல்லை. இதில் பூம்புகாரையும், துவாரகையையும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆய்வு செய்து அருமையான செய்திகளை அள்ளி வழங்கின. இலக்கியத்தில் உள்ள பூம்புகார் போன்ற நகரங்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளதுபோலவே இருந்ததாக எடுத்து விளக்கினார்கள்.
உலகில் உள்ள பல இடங்களில் தமிழும் அதுசார்ந்த அடையாளங்களும் வெளிப்பட்டன. குறிப்பாக தமிழர்கள் பயன்படுத்திய வண்ணம் கறுப்பு, சிவப்பு என்பதை உலகில் எல்லாம் இடங்களிலும் காட்சியாகி களிப்படைய வைத்தது.
கடந்த சில நாட்களாக திருப்புவனம் அருகில் கீழடி பள்ளிச் சந்தையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்தப் பொருகள் சங்க இலக்கியங்களில் உள்ளது போலவே இருப்பதாகவும் சிந்து சமவெளிபோல் கட்டிடங்களும்  அதன் நகர அமைப்பும் இருப்பது போலவே ஏன் அதைவிட சிறப்பாக இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் விழிமூடாமல் வியந்தபடி நிற்கிறார்கள். தொல்லியல் துறைக்கு இந்த ஆய்வு பெருமைக்குரிய ஒன்று என்கிறார்கள்.

இங்குமட்டுமல்ல இந்திய துணைக் கண்டம் முழுவதும் ஆய்வாளர்கள் இடங்களை தேர்ந்தெடுத்து அகழ்ந்து ஆய்ந்தால் வங்கத்துப் பெருமகன் சோதிமையிர்பாசு சொல்வதுபோல் இந்திய முழுமைக்கும் உரிமையுடையவர்கள் தமிழர்கள்தான். உண்மை தெரிந்து உறுதிப்படுத்தப்படும். இருக்கின்ற தமிழ் சார்ந்த தரவுகள் அடையாளங்கள் அழிக்கின்ற  எண்ணம்கொண்ட இந்திய ஆட்சியாளர்கள் செவி சாய்ப்பார்களா? சிந்தையில் கொள்வார்களா, மாட்டார்கள் என்பதுதான் உண்மை நிலையாகும்.

No comments:

Post a Comment