Wednesday 14 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

14.கவிதைகள்-காவியங்கள்!
இயல் இசை கூத்து என்று
எழிற் தமிழில் வகைகள் உண்டு
இதயத்தைப் பண்படுத்தி ஏற்றம் பெற
இனிதாய் ஏற்படுத்திய வடிவமாகும்!
உலகில் பல மொழிகளிலே
ஒளிரும் கவிதைகளை
உருவாக்கி மகிழ்ந்தார்கள்!
எழுத்தில்லா காலங்களில்
வாய்மொழியாய் வழங்கினார்கள்!
காலை புலர்ந்து மாலை வரை
கவிதையாகவே வாழ்ந்தார்கள்
பல்வேறு பொருள்கள் பற்றி
பாடிப்பரவசம் அடைந்தார்கள்!
இறையருளை, இல்லறத்தை
ஏற்றம்தரும் நற்பொருளை
எடுத்தோதி இனிமையில் கரைந்தார்கள்!
உலகம் முழுவதிலும் சிறந்த
கனிச் சுவையை வெல்லும்
கவிதைகளை நிறைத்தார்கள்!
காலத்தை வென்ற கவிதைகள்
கண்ணில் ஒளிர்கிறது!
தமிழரின் வாழ்வெல்லாம்
தழைத்திடும் கவிச் சோலையானது!
சாகாத நிலை பெற்று வாழும்
சங்க கால செந்தமிழ் கவிதைகள்!
சந்தத்தால் சிந்தை அள்ளும்!
இடைக்கால கவிதைகளும்!
இதயத்தை இனிக்கச் செய்யும் கனிச் சாறு!
இருபதாம் நூற்றாண்டில்
இலட்சிய கவிதைகள்!
எழுச்சியூட்டும் போர் முரசங்கள்!
பா வடிவில் புது நடை கண்ட
பாரதிப் புலவன் கவிதைகள்!
பயன்தரும் பழச்சோலை!
பாரதியின் வழிநடந்த பாவேந்தரின்
பகுத்தறிவு நெறி காட்டும்
பைந்தமிழ்க் கவிதைகள்
பண்பாட்டு போர் முரசம்!
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!
நாமக்கல்லார் இயற்றிய
பொறி தெறிக்கும் போர்க்கவிதைகள்
உடுமலையார் வரைந்தளித்த
உணர்ச்சியூட்டும் நற்கவிதைகள்
கண்ணதாசன் இதயத் தமிழ் குவித்த
எழில் சிந்தும் தனிக் கவிதை
வைரமுத்து வாரி வழங்கிய
வளம் சேர்க்கும் புதுக்கவிதை
மேலை நாட்டு மேன்மக்களின்
விழிப்பூட்டும் வியப்புக் கவிதைகள்
செல்லியின் சீர்மிகு புரட்சிக் கவிதை
அலக்சாண்டர் புஷ்கினின்
அழகிய இரசியக் கவிதை
மில்டன் வரைந்தளித்த
மீட்டுருவாக்கக் கவிதைகள்
பைரனின் காதல் கவிதைகள்
ஆயிரத்து ஓர் இரவு என்று
அரபு மொழியில் வரைந்து
அகிலத்திற்கு வழங்கிய அற்புதக் கவிதை
உமர்கயாமின் மயக்கக் கவிதை
கலீல் இப்ரானின் கண்கவர் கவிதை
பாப்லோ நெருடாவின் சமத்துவக் கவிதை
காவியங்கள் கண்ட கலைவாணர்கள்
காசினி முழுவதும் நிறைந்திருந்தனர்
குருட்டுப் பிச்சைக்காரன்
ஹோமரின் வாய்மொழிதான்
ஒடிசி இலியட் என்னும்
இனிய காவியங்களாக வாழ்கின்றன
சேக்ஸ்பியரின் பெர்னாட்சாவின்
நாடகங்கள் அனைத்துமே
காவியங்களாகக் கருதப்படுகின்றன
தந்தையைக் கொன்று விட்டு
தாயை மணந்து கொள்ளும் தனயன் என
ஒடிபஸ் எனும் காவியம் காட்டுகிறது
இரட்சன் என்னும் கொள்ளையன்
கொடுத்ததுதான் இராமாயணக் காவியம்
முறையற்றுப் பிறந்ததாகக் கூறப்படும்
வியாசன் வரைந்ததுதான் மகாபாரதம்
விடுதலை வேள்விக்காக
விழிப்புணர்வு ஒளியேற்ற
வரைந்தது கார்கியின் தாய் காவியம்
மன்னன் வீட்டு பிள்ளைதான் அவன்
பிழையற்ற உள்ளத்தைப் பெற்றதனால்
மண்ணின் மணம் உணர்ந்து
மாபெரும் காவியம் கண்டான்
மன்னன் வழி மாந்தர்களையே
காவியம் பாடிய கவிதை உலகில்
குடிமகளை காவியத் தலைவியாக்கி
புரட்சி கண்டான் புதுமை படைத்தான்
பரத்தையர் கூட்டத்தில்
பத்தினியைப் படைத்தளித்தான்
பரத்தையர் குலமகள் என்று
பழிக்கப்பட்ட ஒரு பாவையை
உணவளித்து அறம் கூறும்
உன்னதத் திருமகளாக
உருவாக்கினான் ஒரு புலவன்
இளங்கோவும் சாத்தனாரும்
இயற்றிய இரட்டை காப்பியங்கள்
சிலப்பதிகாரம் மணிமேகலை
சிந்தையில் நிறைந்திருக்கின்றன
மதம் சார்ந்த காப்பியங்கள் எனினும்
மனங்கவர் எழிற்சிறந்த காப்பியங்கள்
சீவகசிந்தாமணி, வளையாபதி
குண்டலகேசி
ஆகிய அணி சேர்க்கும் அழகுக்
காவியங்கள்
மக்களின் வாழ்வு வளர்ச்சிக்கும்
மறுவாழ்வு மறுமலர்ச்சிக்கும்
உருவான அறிவியல் முடிவுகள்தான்
உண்மையான காவியங்கள்
மனித வாழ்வை எளிமையாக்கி
மகிழ்ச்சியளித்து நிறைவூட்டும்
மகத்தான படைப்புகல் எல்லாம்
மறுமலர்ச்சி காவியங்கள்தான்
கலைக் கவிதைகளும், காவியங்கள்தான்
உருது மொழியின் உன்னதக் காவியங்கள்
உள்ளத்தை தொடுகின்றன
மேகத்தைத் தூது விட்டு காதல்
மேன்மையை பாடி வைத்த
பெருங்கவிஞன் காளிதாசனின்
சாகுந்தலம் எனும் சாகாத காவியம்
ஈழப் புலிகளைப் போற்றுகின்ற
இலட்சிய காசி ஆனந்தனின்
இனமானப் போர்க் கவிதை
பாராண்ட தமிழ் மன்னர்களும்
பாடி வைத்த பயனுறு கவிதைகளும்
கற்றோர் நெஞ்சில் நிறைய வேண்டும்
பெற்றோர் மனதில் பெருக வேண்டும்
வளரும் தலைமுறையின் வளர்ச்சிக்கு
வகைப்படுத்தி வழங்கும் நிலை வேண்டும்!
புத்தன் வழிச்சிந்தனையின்
புது வழியில் நடைபோடும்
புது மலரே பூ மணமே!
காவியங்களில் கண் பதிப்பாய்!
கலை மனத்தால் புகழ் பெறுவாய்!

No comments:

Post a Comment