Tuesday 1 November 2016

இயல் இசை நாடகக் கலை மணந்த ஊர் எழில் கொஞ்சும் எங்களின் கூடலூர் தொடர்ச்சி

இயல் இசை நாடகக் கலை மணந்த ஊர்
எழில் கொஞ்சும் எங்களின் கூடலூர் தொடர்ச்சி
கூடலூர் மலையில் ஒரு நீண்டகல் ஒன்று
நிற்கின்றது. அது என்ன கல் கேட்ட போது
நெய் விற்க வந்த நேர்த்திமிகு தொட்டிச்சியை
சிலர் கேலி செய்ததால் அவள்
கல்லாகிப் போனாள் என்று கதையும் உண்டு.
கோபுரம் போல ஓரிடத்திலும் நெடிய கோயிலைப்போல்
தொடர்ந்த அழகிய சிறுமலைத் தொடரின் அடிவாரத்தில்
அமைந்திருக்கும் அருமையான சிற்றார் கூடலூர்.
வேதங்களாலும் வேதியர்களாலும்
வீண்பெருமை கொண்ட விபீசணர்களாலும் 
வீழ்த்தப்பட்ட தமிழினத்தை மீட்டு
வெற்றிச்சிகரத்தில் நிறுத்தி வைக்க
உருவாக்கப்பட்ட உன்னைத் திமுக-வை
விபரம் தெரிந்த நாள்முதலாய் நெஞ்சில் வைத்து
உள்ளம் மாறாமல் உறுதி குறையாமல்
உயிர் உள்ளவரை உழைத்து மகிழ்ந்து
உயர் துறந்த எண்ணற்றோரில் இணைந்த
அருமைச் சகோதரர் கோவிந்தராசு
அன்பு மைத்துனர் கிருஷ்ணசாமி
இருவரும் இதயத்தில் நிறைந்திருக்கின்றனர்
வீட்டில் வளர்ந்த வெள்ளாட்டின்பால் கறந்து
கொடுத்து குடிக்கச் செய்ததும்
பசுவின் சீம்பாலில் சர்க்கரை கலந்து காய்ச்சி
எனது தாய் கொடுத்து திண்ண வைத்ததும்
இதயத்தை இனிக்கச் செய்த இன்பமாகும்.
இங்கு வணிகம் என்பது சிறு கடைகள்தான்
உப்பு புளி மிளகாய் வெற்றிலை பாக்கு பீடி தீப்பெட்டி
இன்னும் சில பொருட்களை விற்பது தான் வியாபாரம்
இன்னொரு நிகழ்வு இதயத்தில் இடம் பெறும்
காய்கறி மீனெல்லலாம் காசின்றி கிடைக்கும்
ஆனால் மாமிசம் அதாவது ஆட்டுகறி திண்பதற்கு
பொது உடமை முறையொன்றை பூப்போட்டு
வரவேற்பது போல் ஒரு நிகழ்வு நடக்கும்
அய்ந்தாறு பேர் கூட்டு சேர்ந்து
ஒரு ஆட்டை வாங்குவார்கள் அதில்
ஆட்டை அறுக்கும் வகை தெரிந்தவதற்கு
ஆட்டின் தோலை இலவசமாய் தருவார்கள்
ஆட்டின் குடல் தலையை ஒருவருக்கும்
கால்கள் நான்கையும் மற்றொருவருக்கும்
அதற்குரிய விலையை நிர்ணயிப்பார்கள்
ஆட்டின் கறியை எடுத்துக் கொள்வதற்கு
ஆட்டின் விலைத் தொகையை சமமாக
பங்கிட்டுக் கொள்வார்கள். இதில்
வணிகமில்லை கொள்ளை லாபமில்லை
இன்னொரு சிறப்பும் நம்மை இனிக்கச் செய்யும்.
வெளியூரில் இருந்து உறவினர்கள்
எப்போதாவது வருவார்கள்
வந்தவர்களுக்கு வாய்மணக்க மனம் மகிழ
கோழி அடிச்சு குழம்பு வைச்சு சோறு
போடுவதை மரபாக கொள்வார்கள்.
இதில் என் தந்தை வளர்த்த ஏராளமான
கோழிகளும் வான்கோழிகளும் சோற்றில்
கலந்து சொர்கத்தை அடைந்துவிடும்.
ஊரில் ஒருவர் இறந்து போனால்
பல்வேறு ஊர்களில் வாழ்கின்ற உறவினர்களுக்கு
தகவல் தருவதை தவறாது கடைப்பிடிப்பார்
இறந்ததை துட்டி என்று சொல்வார்கள்
யார் இறந்தாலும் ஒப்பாரி வைப்பது என்பது
ஒரு வழக்கமாக இருந்தது இதில் பெண்கள்
தாலாட்டைப் போலவே தனியுரிமை பெற்றவர்கள்
இனிக்கின்ற தாலாட்டைப் போலவே
இதயத்தை உருக்கும் ஒப்பாரியையும்
வழிவழியாய் பெண்களுக்கு கற்றுக் கொடுத்து
தன் தந்தை, தன் கணவன், தன் அண்ணன் தம்பி
தனது மச்சான் கொழுந்தன் ஆகியோரின்
ஆற்றல் பெருமைகளைக் கூறி இறந்த சூழலிலும
உளமார்ந்த உணர்வுகளுடன் ஒன்றிப் போவார்கள்.
இங்கு நடக்கும் திருமணங்கள் மிக எளிமையாக
இயல்பாக நடப்பது கண்டு மனதிற்கும் மகிழ்வூட்டும்.
திருமண அழைப்பிதழுக்கே லட்சம் செலவு செய்கின்ற
இந்நாள் திருமணத்தை நினைத்தால் நெஞ்சம் கலங்கும்.
ஆனால் அந்த நாளில் இரவில் தான் நடக்கும்
ஊர் பெரியவர்கள் சில பொருள்களைக் கேட்பார்கள்
ஒரு நாழியில் நெல்லும் அதன்மீது வைக்க
ஓரு அகல் விளக்கும் கேட்பார். மணமக்களுக்கு
ஒரு பாய் அல்லது சமுக்காளம் எனும்
ஒரு போர்வை. கொஞ்சம் பூவும் இரு மாலையும்
அந்தப் பெரியவர் முன்பு வைத்து விட்டு
உறவினர்கள் கூடி நிற்பார்கள்
பாயை விரித்து வைத்து நெல் நிறைந்த
நிறைநாழியின் மீது அகல் விளக்கை
எரிய விட்டு மணமக்களை அமரவைத்து
தாலியை எடுத்துக் கொடுத்து கட்டச் சொல்வர்
மணமகன் தாலிகட்டி முடித்த பின்னர்
இருவரையும் தனி இடத்தில் வைத்து விட்டு
பந்தி பறிமாறச் சொல்வார்
சில நிமிடங்களில் மண நிகழ்வு நடந்து விடும்
எப்போதாவது அரிசிச் சோற்றைக் காணும்
ஊர்மக்களுக்கு பருத்த அரிசியின்
சோறும் கத்தரிக்காய் புளிக்குழம்பும்
பறிமாறிவிட்டு மொய் எழுதச் சொல்வார்கள்
இருட்டியதற்கு பின்னால் நேரம் காலம்
சகுணத் தடைகள் இல்லை என்பதால்
மணமக்கள் இருவருக்கும் அன்றிரவே
முதலிரவாகி இன்பத்தில் மூழ்கச் செய்யும்.
ஆனால் இன்றோ மணவிழாச் செலவுகள்
மலையளவு கூடி வருந்தச் செய்கிறது
கவிஞர் வைரமுத்துவின் சொற்களில்
திருமணத்தை நினைத்துப் பார்த்தால்
நெஞ்சு கனத்து நம்மை நடுங்கச் செய்யும்
திருமண மண்டபத்திற்கு செல்வந்தனாய்
செல்பவர்கள் ஏழையாகி வெளியே
வருகிறார்கள் என்றார் இனிய கவிஞர்
எங்களின் கூடலூரின் நிகழ்வுகளை
சங்ககால நினைவுகளோடு இணைத்துப் பார்ப்போம்.
சங்க இலக்கிய செய்திகள் பெரிதும்
சிற்றூரில் பிறந்ததாகவே இருக்கும்
இன்றைய அறிவியல் சிந்தனைகளோடு
இணைத்துப் பார்த்து இனிமை கொள்ளலாம்.
கல்விக் கூடங்கள் கலாசாலைகள்
இல்லாத நாட்களில் எத்தனை அறிவு
மானம், மாண்புகளோடு வாழ்ந்திருந்த
மாமனிதர்கள் மனதில் நிறைகிறார்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
என்று உலகம் காணாத ஒற்றுமையை
உணர்ந்தவன் ஒரு சிற்றூரில் பிறந்த
சிராளர் கணியன் பூங்குன்றன்தானே!
இயற்கையோடும் ஈடற்ற அன்போடும்
இதய மகழ்வோடும் அடுத்தவரை கெடுக்கும்
ஆசைகளின் சுமையில்லாமலும்
பொய்மை பொல்லாங்கு போலித்தனம்
அடுத்துக் கெடுக்கும் கயமை கள்ளத்தனம்
ஏதுமில்லாமல் வாழ்ந்தவர்கள் எங்கள் ஊர் மக்கள்
சங்க இலக்கியச்சூழல் போன்ற நிகழ்வுகள்
நிகழ்ந்து நம் நெஞ்சைக் குளிர்விக்கும்
காதல், எதிர்ப்பு பின் கடத்தல் கல்யாணம்
ஊர் பஞ்சாயத்து பின் தீர்வு என்றெல்லாம்
இங்கும் நடந்து நம் உணர்வுக்கு எழிலூட்டுகிறது
சண்டியர் போல ஒரிருவர் கையில் ஓர்
கொடுக்கரிவாளொடு மீசையைத்திருகி
தம்மைப் பலசாலி காட்டிக் கொள்வதுண்டு
ஆனால் யாரையும் மிரட்டியோ
பணம் பறித்தோ வாழ்ந்ததாக வரலாறில்லை
இன்றைய நகர ரவடிகள் பிட்பாக்கெட் போல
யாரும் ஈனப் பொழைப்பு பொழைக்கவில்லை
எங்கள் ஊர் மலையின் ஓரிடத்தில்
இராமனின் நாமக்கல் குகையொன்று இருக்கிறது
அந்தக் குகையில் காவல் துறை தேடும்
குற்றவாளிகளின் கூடாக இருந்ததாம்
பலநாள் தங்கியிருக்கும்போது
உணவுக்கு வழியில்லை என்றால்
மலைமீது மேயும் ஆடுகள் சிலவற்றை
பிடித்துக் கொன்று அதன் இறைச்சியை
சுடுகின்ற பாறையில் போட்டு வைப்பார்கள்
அதன் நீர் சுண்டியபின் இறைச்சி
மாவைப்போல் மென்மையாகவே இருக்குமாம்
திண்பதற்கு மிக ருசியாக இருக்குமாம்
ஊரில் இந்தச் செய்தியை சொல்வதுண்டு
பல்வேறு மலைக்குகைகளில் தன்னலமில்லாத
சமணத் துறவிகள் வாழ்ந்தார்கள்
இராமன் குகைகளில் தீயவர்கள் வாழ்ந்தார்கள்
இந்த ஊரின் சிறப்புகளுக்கு கண்ணேறு
பட்டதென்று இதை எடுத்துக் கொள்ளலாம்.
சங்ககாலம் போன்றே பெண்கள்
அதிகாலையில் அலர் தூற்றுவதுண்டு
உறவுச் சண்டைகள் உரிமைச் சடங்குகள்
பகையாகி விடாது பகலில் பனிபோல் மாறிடக் காணலாம்
உலகை இன்று உற்றுப் பார்த்தால் பற்பல
நிலைகள் நெஞ்சில் பதிந்திட காணலாம்
மனிதகுல வரலாற்றில் மாற்றங்கள் பல
வாழ்வின் தேவையை நிறைவு செய்கின்றன
அய்ரோப்பாவில் பூத்த அறிவியல்புரட்சி
நம்மை அகமகிழச் செய்திருக்கின்றன
அறிவுக் கூர்மை ஆயிரமாயிரம் பொருளை
அள்ளித் தந்திருக்கின்றன. ஆனால்
இயற்கை தன் எழிலை இழந்தே வந்திருக்கின்றன
எந்திரவியல் தோன்றியபின் உலகம்
வணிக மயமாகி விட்டதைக் காணலாம்
அறிவியலைப் பூக்க வைத்த அய்ரோப்பாவே
வழிபாடு உள்ளிட்ட அனைத்தையும்
வணிகநிலையமாக்கி விட்டதை நினைத்து
உள்ளம் கலங்கி வருந்துகிறது.
சங்ககால இலக்கியச் சூழலில்
இனிதாய் வாழ்ந்த தமிழகம் கூட
வணிகத் தலமாக மாறி விட்டதைக் காணலாம்
இங்குள்ள எல்லாத்துறைகளிலும்
கணிகைக் குணம் கலந்து விட்டதைக் காணலாம்
தான் பெற்ற குழந்தைக்கே மார்தழுவி
பாலூட்டத் தயங்கும் நிலை இன்று இருக்கிறது
தாயற்றக் குழந்தைக்கும் பாலற்ற
தாயின் குழந்தைகளுக்கும் பாலூட்டி
வளர்த்து வாழ்த்திய தாய்மார்கள்
இந்தச் சிற்றூரில் பிறந்து சிறந்திருக்கிறார்கள்.
இன்று குடிக்கும் தண்ணீர் கூட விலையாகி
வணிகமாகி விட்டது.
இந்த ஊர் மண்பானைகள் தூய நீரைத் தந்து
உடலை குளிர வைக்கிறது.
எட்டணா பானையில் ஐஸ் வாட்டர் கிடைக்கிறது.
மண்பாண்டங்கள் செய்கின்ற குயவர்களின்
தெரு ஒன்று இங்கு இருந்தது. அதில்
கலை கொஞ்சும் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.
அடிமைப்பட்டத் தமிழகத்தின் நிலைமாற்ற
நெஞ்சுயர்த்தி எங்களின் பூலித்தேவன்
தமிழகச் சிற்றரசர்களின் கூட்டணி ஒன்றை
நிலைநாட்ட முயற்ச்சித்தான் ஆனால்
அவனது முயற்சி முழு வெற்றியை
காணமலேயே தனித்தனியாக மோதி
தமிழர்கள் தலைகவிழ்ந்து போனார்கள்
இது அன்றல்ல இன்றும் ஈழத்திலும் நடந்தது
இங்கும் இன்று இந்த இழிநிலை நீடிக்கிறது
அறுபத்து ஏழில் அறிஞர் அண்ணா
அருமையான கூட்டணி யொன்றை
அழைத்து அன்னைத் தமிழகத்தில்
ஆக்கமிக நிலையை தோற்றுவித்தார்
தமிழ்நாடு பெயர் சூட்டுவதிலும்
இருமொழி ஆட்சிமொழி என்பதிலும்
எதிர்ப்பற்ற இனியநிலை கண்டு
இதயத்தில் நிறைந்து ஒளிர்கிறார்
அரசியலில் ஆயிரம் வேறுபாடுகள்
அலைக்கழித்தாலும் தமிழர்களின்
உணர்வு உரிமையை நிலை நாட்டுவதில்
ஒன்றாகி ஒருமித்து ஓங்கி குரல்தரும்
உன்னத நிலை என்று தோன்றுமோ?
இந்த இனிய கூடலூரில் இனிக்கும் காட்சிகள்
நிறைய நிறையவே நெஞ்சில் கொஞ்சுகிறது
நான் படித்த பள்ளிக்கூடம் பசுமையாய் ஒளிர்கிறது
நாற்பது ஐம்பது மாணவர்கள் படித்த பள்ளி அது
பள்ளியோடு இருந்த வீட்டில்தான் பள்ளியின்
தலைமையாசிரியர் இருதய சாமி அவர்கள்
குடும்பத்துடன் குடியிருந்து பாடம் போதித்தார்
மனைவியுடன் தாய், செயமேரி எனும்
இரண்டு பெண் பிள்ளைகள்
சோசப், அமல்ராஜ், ஜெயராஜ் எனும்
மூன்று ஆண்மக்கள் ஆகிய அனைவரும்
அங்கேதான் படித்துக் கொண்டிருந்தனர்
தெலுங்கு செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர் அழகர்சாமி
மற்றொரு ஆசிரியர் நடராஜம்பிள்ளை.
எங்கள் குடும்பம் சிவகெங்கை அருகில் உள்ள
ஒக்கூரில் குடியிருந்து பின் இங்கே வந்தது
ஒக்கூரில் இரு கவிஞர்கள் சங்ககாலத்தில்
புகழுடன் விளங்கினார்கள் ஒக்கூர் மாசாத்தியார்,
மாசாத்தனார் எனும் அருமைக் கவிஞர் வாழ்ந்த ஊர் அது.
ஒக்கூரில் ஒரு ஏட்டுப் பள்ளியில்
எழுத்தை அறிந்திருந்த நான் இங்குள்ள
பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன்
முதல் வகுப்பு ஆசிரியர் நடராசபிள்ளை
இரண்டு மூன்றுக்கு அழகிரிசாமி ஆசிரியர்
நாலு அய்ந்துக்கு இருதயசாமி ஆசிரியர்
இருதய சாமியின் மேலாண்மையில்தான்
பள்ளி இயங்கிக் கொண்டிருந்தது.
காமராசரின் மதிய உணவுத் திட்டம்
செயல்படத் தொடங்கிருந்த நேரம் அது
ஒவ்வொரு வகுப்பிலும் ஒளிவிடும்
மாணவ நண்பர்களின் முகங்கள்
இன்றும் கூட இதயத்தை இனிமைப் படுத்துகிறது.
முதல் வகுப்பில் பிரமு, செயா, தவமணி, சரோசா,
வைரம், பாலையா, பாண்டி
இரண்டாம் வகுப்பில் இராமச்சந்திரன்,
சடையாண்டி, பொன்னுச்சாமி, இராமதிலகம்,
அண்ணபூரணி, சரோசா (தத்தா)
மூன்றாம் வகுப்பில் உடையார், பேச்சியப்பன்
தங்கம், செண்டு செயராஜ்
நான்காம் வகுப்பில் அமல்ராஜ்,
சுப்பையா (பாண்டியன்) பூவம்மாள்
அய்ந்தாம் வகுப்பில் கிருஷ்ணசாமி, வெள்ளைச்சாமி, பகவதிபாண்டியன், வேல்த்தாய், சரசுவதி என
என் நினைவில் இவர்கள் தோன்றி மனதை
மகிழ்வின் எல்லைக்கு கொண்டு செல்கிறார்கள்
பள்ளி விழாக்களில் பலவித நிகழ்ச்சிகள்
போட்டி விளையாட்டுகள் என்றும்
மாணவர்கள் நடிக்கும் நாடகங்களும்
ஊர்திரண்டு பாராட்ட நடக்கும்.
நான் படித்த ஓரிரு ஆண்டுகளில் நாடகத்தின்
நாயகன் அங்கு நான் தான்
பேராசை பெருநஷ்டம் எனும் நாடகத்திலும்
மூன்று திருடர்களும் நாற்பது வியாபாரிகளும்
எனும் நாடகத்திலும் நாயகன் நான் தான்.
பேராசை பெருநஷ்டம் நாடகத்தில்
பட்டுநூல் வியாபாரியாக பூணூல் அணிந்த
செட்டியாராக ஒரு பாட்டுப்பாடி நடிப்பேன்.
தொலைந்து விட்ட பணத்தை என்னிடமே தரும்
விவசாயியாக இராமச்சந்திரன் நடித்தான்.
நீதிபதியாக அருமை நண்பன் செண்டு நடித்தான்
செண்டைப்பற்றி இங்கே சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்
வரிவசூல் செய்யும் மிட்டாதாரின்
மேலாளராக செண்டின் தந்தை (பிராமணர்) இருந்தார்
மகனாகப் பிறந்த செண்டு
மூன்றாம் வகுப்பில் சேர்ந்து படித்தான்.
ஆசிரியர் அழகிரிசாமி மிகக் கடுமையானவர்
கையில் ஒரு மூங்கில் பிரம்பு மாணவர்களின்
தலையிலும் உள்ளங்கையிலும் பின்புறமும்
மடக்கிய கைவிரல்களின் மொழிகளிலும்
எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கும்
அடிதாங்காமல் மற்ற மாணவர்கள்
அழுவார்கள் அலறுவார்கள் ஆனால்
செண்டுமட்டும் அழுவதோ அலறுவதோ
கண்ணீர் சிந்துவதோ கிடையாது.
உருண்ட முட்டை விழிகளை விரித்து
விழிப்பதைத் தவிர வேறென்றுமே தெரியாது
ஒரு தடவை ஆசிரியர் அடித்ததில்
செண்டின் தலையுச்சி உடைந்து
இரத்தம் கசியத் தொடங்கியது
அன்றுதான் அவன் விழி துளி கண்ணீர் சிந்தியது
அந்த அருமைச் செண்டும் நானும்
இராமச்சந்திரனும் நடித்த நாடகம்
உள்ளூரின் பாராட்டைப் பெற்றது
அதுபோல மூன்று திருடர்களும்
நாற்பது வியாபாரிகளும் எனும் நாடகத்தில்
மூன்று திருடர்களின் சதிகண்டனாக நானும்
தம்பி அதிகண்டனாக அய்ந்தாம் வகுப்பு வெள்ளைச்சாமி
அடுத்த தம்பி மதிகண்டனாக அய்ந்தாம் வகுப்பு
பகவதிபாண்டியனும் வியாபாரிகளின் தலைவனாக
மூன்றாம் வகுப்பு பேச்சியப்பனும்
நடித்த நாடகம் ஊரே திரண்டு பாராட்ட நடந்தது
இதில் நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன்
இருதயசாமி ஆசிரியர் எழுதிய ஒரு பாடலை நானும்
சங்கரதாஸ் சாமிகள் எழுதிய புகழ்பெற்ற ஒரு பாடலை
நாங்கள் அனைவருமே பாடி நடித்தோம்.
இநத ஊரின் எழிலுக்கு ஒர் எடுத்துக்காட்டு
இங்கிருந்த நாடகக் கலைஞர்களின் புகழ்
நாடெங்கும் பரவியிருந்தது இங்குமட்டுமல்ல
இலங்கை மலேசியா சிங்கப்பூரிலும் கூட
இவர்களின் ஆற்றல் பேசப்பட்டதாம்
மண்பானை செய்யும் குயவர் சமூகத்தில்
தமிழ்க்குடிமகனாக உதித்த சகோதரர்கள்
அருணாசல வேளார் வேல் வேளார்
சித்திரபுத்திர வேளார் அடுத்து சங்கரபாண்டியத்தேவர்
பழனியாண்டித்தேவர், சுப்பையாத் தேவர், கந்தப் புலவர்
பெரியதேவர் சிவஞான பாண்டியன் உள்ளிட்ட வேறுசிலரும்
நாடகக் கலையில் நாடு போற்ற வாழந்தனர்.
அந்த நாட்களில் புராண இதிகாசத்தை
மக்களிடம் பரப்பும் நாடக நிகழ்வே நடந்தது
அல்லி அர்ச்சுணன், பவளக்கொடி
வள்ளி திருமணம், சந்திரமதி, மயானகாண்டம்
சத்தியவான் சாவித்திரி கோவலன்
என்ற நாடகங்களே கொடிகட்டி பறந்தன
இதில் அருணாச வேளார் இராசபார்ட்
சங்கரபாண்டியத் தேவர் ஸ்திரிபார்ட்
மற்றும் சிலர் பல வேடத்தில் வேடங்களில் நடித்தனர்.
அருணாசல வேளாரின் அழகுத் தோற்றம் உடைய
வள்ளி திருமண நாடகத்தில் முருகனாக
கையில் வேலுடன்  மேடையில் காட்சி
தருகின்றபோது கடவுள் என்று காலில் விழுவார்களாம்
பாடுகின்ற போது தான் நடிகன் எனும் நினைவு வரும்
சங்கரபாண்டித்தேவர் அசல் பெண் போலவே
நளினம் காட்டி நடித்து அசர வைப்பாரம்
இவர்களின் மறைவிற்குப்பின் இன்னொரு குழு
தோன்றி நாடகக்கலை வளர்த்தது
பெரியதேவர் சிவஞான பாண்டியன்
இவர் ராசபார்ட், சந்திரமதி மயான காண்டத்தில்
எமதர்மனாக வரும்போது
பழம்பெரும்நடிகர் பியூ சின்னப்பா
நினைவில் தோன்றி நெஞ்சம் மகிழவைப்பார்
ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தது போய்
பெண்கள் அரங்கில் தோன்றிய நாட்களில்
பலபல நடிகைகள் இவரோடு நடித்தனர்
என்னுடைய தாய்வழி சின்னத்தாத்தா
புபூன் சுப்பையாத்தேவர் அவர்கள்
பாப்புனையவும் இசைபாடும் ஆற்றலும்
இனிதாய் வாய்ந்த கந்தப் புலவர்
இவரது மகன் செல்லையாப் புலவர்
இன்று திரையுலகில் நகைச்சுவையும்
குணச்சித்திரமும் கலந்த வேடங்களில்
நடித்து புகழ் பெற்ற நடிகை சண்முகசுந்தரி
இவர் கந்தப்புலவரின் கடைசிப் பெண்
இவர்கள் இந்த ஊர் தந்த கலைச் செல்வங்கள்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்
எல்லாக் கலைகளையும் சிறப்பித்தது போல
இனிய கிராமிக் கலையையும் வாழ்வித்தார்
கலைமாமணி விருதுகளை உருவாக்கிய
கலைஞரின் கை முதல் கிராமியக் கலைஞருக்கு
கலைமாமணி விருதை நமது சிவஞான பாண்டியன்
அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
தமிழக வரலாற்றில் கிராமியக் கலைஞராக
எண்ணற்றோர் இருந்தும் எங்கள் ஊர்
சிவஞானபாண்டியனை தேர்வு செய்த
உயிர்த்தலைவர் கலைஞரை உளமாற வாழ்த்துவோம்
இந்த ஊர் பற்றி இன்னொரு இனிய செய்தி
இருதயசாமி ஆசிரியர் நடத்திய பள்ளிக்குமுன்
காளியப்ப பிள்ளை திண்ணைப் பள்ளி நடத்தி
பழைய தமிழ்ச் செல்வங்களைப் போதித்தார்
ஊழல் என்று சொல்லி இருதயசாமியை
இடம் மாற்றிய பின்னர் பிச்சாண்டி அய்யர்
இல்லத்தில் சிலநாட்கள் ஒரு பள்ளி இயங்கியது
அடுத்த சிலகாலம் பள்ளியே இல்லாமல்
அடுத்தடுத்த ஊர்களில் மாணவர்கள் படித்தார்கள்
உள்ளம் களிப்புறும் உயர்வான செய்தி ஒன்று
ஊரின் முதல் கல்லூரி பட்டதாரியாக
பொற்கொல்லர் குடும்பத்தைச் சேர்ந்த
முத்துச்சாமி அவர்கள் தோன்றினார்
வேளாண் துறை இணை இயக்குநராக பணியாற்றினார்
இளநிலை ஆசிரியராக முத்துமாலை (பவுன், பொற்கொல்லர்)
செல்முத்தையா (தேவர்) பழனிச்சாமி (தேவர்)
காசிவிஸ்வநாதன் (பிள்ளை) உருவானார்கள்.
போர்ப்படையில் சேர்ந்து புகழ் சூட்டிவந்த
சிவஞானத்தேவர் அருணாசலத்தேவர் (சின்ன வஸ்தாவி)
பழனிச்சாமி (பிள்ளை) பின்னர் பலரும் இனிமை சேர்த்தார்கள்
எங்களைப் போன்றவர்களின் இதயம்
வலிக்கின்ற செய்தியொன்றை நான்
இப்போதுதான் கேள்விப்பட்டேன்
இப்போது தோட்டமாக விளங்கும் இடத்தில்
ஒரு பிராமணக் குடியிருப்பு ஒன்று
இருந்ததாகவும் அதில் முப்பது குடும்பங்கள்
வாழந்ததாகவும் சொல்கிறார்கள்
ஒரு பெரிய குளத்தின் பாசனத்தில்
விளையும் அறுநூறு ஏக்கர் வயலும்
இவர்களுக்குச் சொந்தமாக இருந்ததாக
ஊரில் உள்ளோர் சொல்கிறார்கள்.
உழவுத்தொழிலை இழிதொழில் என்று
எண்ணிய பார்ப்பனருக்கு விளைநிலமா?
உழத்தெரியாத ஊர் கெடுத்தவனுக்கு
ஊர்நிலமெல்லாம் உடமையா என
உலகறிந்த உள்ளம் வேதனையில் வெம்புகிறது
மொத்த நிலத்தையும் எழுதிவைத்து
ஊராண்ட உன்மத்தன் யாரென்று தெரியவில்லை
ஆனால் வளமிருந்தும் ஊரில் எந்த பார்பனக் குடும்பமும்
இல்லாது எங்கோ பறந்து விட்டது. ஆனால்
எளிதாய் வாழ்க்கை எங்கு கிடைக்குமோ
அங்கெல்லாம் பறந்து விடுவது அவர்களது பழக்கம்
தாய்மண், தாய்மொழி உணர்வுள்ளவர்கள்
பந்தபாச பற்றுடையவர்கள் வறுமையிலும்
செம்மையாக வாழ்வு நடத்துகின்றனர்.
வறுமையின் காரணமாக பல இடங்களுக்கும்
பறந்து போனாலும் ஊர்மீது உறவு கொண்டிருக்கிறார்கள்
சொந்த பந்தங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள்
இந்த ஊரில் இன்னொரு வழிபாடும்
பெண்களிடையே நிலை கொண்டிருந்தது
செவ்வாய்க்கிழமை சாமி என்பது
பெண்களே வீட்டிற்குள் வழிபடுவது
கீழமலை அடிவாரத்தில் அனாதையாய் இருக்கும்
கன்னி மாரியம்மன் கோவிலில் சிலநேரம்
பூசைகள் செய்து மகிழ்கிறார்கள்
இங்குள்ள ஒவ்வொரு சமுதாயத்திலுள்ள
ஜாம்பவான்களையும் சாதரண மனிதர்களையும்
பட்டியலிடுவது நிறைவைத் தரும் என்றாலும்
ஊரையே ஓரிடத்தில் நிறுத்த வேண்டும்
ஆகவே ஊருக்கு பேருந்து வர ஓய்வின்றி
உழைத்த மாமா முத்தையாத் தேவர் (சப்பானித்தேவர்)
நீண்டநாள் போராடினார். தனியார் நிறுவனத்தையும்
அரசு நிறுவனத்தையும் அடிக்கடி அணுகி
பேருந்து வரப் பெரும்பாடு பட்டார்
பேருந்தை வரவழைத்து ஊரில் நிறுத்தி வைத்து
ஓட்டுநர், நடத்துனர் தேவைகளை விழித்திருந்து
நிறைவு செய்து காலையில் மக்களை எழுப்பி
பேருந்தில் பயணம் செய்ய வைத்து
இன்று நிரந்தரமாக்கி நினைவில் ஒளிர்கின்றார்
அவர் இன்று ஊரின் நுழைவிடத்தில் கல்றையாகக்
காட்சியளித்து நம்மை கண் கலங்க வைக்கிறார்
இன்று பல்வேறு நிலைகளில் ஊர் வளர்ச்சி கண்டிருக்கிறது
தனிநபர் வளர்ச்சி மனதை மகிழ்விக்கிறது
அரசின் உதவிகள் பல ஆறாய் பாய்ந்திருக்கிறது
நான் படித்த போது ஒரு கூரைக் குடிசையில்
இயங்கிய பள்ளி மாணவர்களை படிக்க வைத்தது
அடுத்து ஓடு போட்ட இடத்தில் இயங்கியது
அடுத்து கட்டுறுதிக் கட்டிடத்தில் இயங்கியது
இப்போது தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக
உயர்ந்து விரிந்த இடத்தில் பெரிய கட்டிடமாக
உருவெடுத்து உள்ளத்தை மகிழ்விக்கிறது
இரண்டு மூன்று தண்ணீர் தொட்டிகள்
தெருவெங்கும் சிமிண்டுச் சாலைகள்
வருவாய்த்துறை அலுவலர் அலுவலகம்
ஆரம்ப சுகாதார கிளை நிலையம்
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் அமைந்த
அழகுடன் விளங்கும் அறிவாலயமான
இனிய நூலகம் ஒன்று இதயத்தை மகிழ்விக்கிறது
இத்தனை வசதிகளும் இனியவர் கலைஞரின்
ஆட்சியில் தான் நடந்தது என்கின்றனர்
அங்குள்ள நல்ல மனிதர்கள்.
ஆனால் அங்கு உள்ளவர்களின் ஓட்டுகள்
ஏதும் செய்யாத இழிகுணம் படைத்த
செயலலிதாவின் கூட்டணிக்கே
விழுந்தது விசித்திரமாக விளங்குகிறது
நாடு முழுவதும் இருப்பதுபோலவே
எங்கள் கூடலூரும் இருக்கிறது என
எண்ணி இதய வேதனையை மாற்றுவோம்
இங்கும் ஓர் எழுத்தாளர் இருப்பது
எழுத்தறிந்த எனக்கு நிறைவூட்டுகிறது
வேலாயுத இராசா விழிகளில் நிறைந்திருக்கிறார்.
நினைக்கின்றேன் நினைக்கின்றேன்
நெஞ்சமெல்லாம் இனிக்கின்ற எனும்
தன் பிறந்தகத்தை நினைத்து பெருமை கொண்ட
கலைஞரின் கவிதை மொழி கண்ணில் நிறைகின்றது
தொழிலும் கருவிகளும் மாறிப் போகும் போது
அதற்குரிய பெயர்சொற்கள் பெரிதும்
மாறி மறைந்து விடுவதுண்டு
ஏர்கலப்பையும் அதுசார்ந்து மேழியும்
மேக்காவும் கதிரடிக்கு களமும் பிறவும்கூட
காணாமல் போய் விடுவதை காணலாம்
எங்கள் ஊரில் பயன்படுத்திய எண்ணற்ற
இனிய சொற்கள் தன்னை இழந்து விடுவது கண்டு
இனித்துக் கிடந்த நெஞ்சம் ஏக்கம் கொள்கிறது.
சட்டி, முட்டி தட்டு முட்டுக் சாமான்கள்
தோண்டிக் கலையம், செம்பு லோட்டா
உரி மத்து உரல் உலக்கை திருகை
உறவுச் சொற்களில் பொன்னையா பொன்னாத்தா
அப்பத்தாள் போத்தி அம்மான் பூட்டி
ஓட்டன் ஓட்டி ஒப்பாட்டன் ஒப்பாட்டி என
உயிர்கலந்த சொற்களெல்லாம் உருமாறி
உருக்குலைந்து வருவதைக் காணலாம்
உடன் பிறந்தான், பிறந்தாள் என்று
உள்ளம் மகிழ்ந்தது மாறிப் போகுமோ என
என மனம் வருந்தி வேதனையில் விம்முகிறது
பொறியாளர் சுஜாதா சொல்லிச் சென்றது
பூரிப்பில் நம்மை திளைக்க வைக்கிறது
சங்ககாலச் சொற்களை இன்றைய கணினுக்கு
பயன்படுத்தலாம் எனச் சொல்லி நம்மை
பரவசத்தில் ஆழ்த்தினார் பண்பாளர் சுஜாதா
அதுபோல எங்கள் ஊரில் பயன்படுத்திய
இனிய சொற்களை வேறு பொருட்களுக்கு
பயன்படுத்தி தமிழுக்கு உரமூட்டலாம்.
நெல்லடித்துக் குவிக்கின்ற களத்தில்
வைக்கோலில் இருக்கின்ற மீதி நெல்லை
எடுப்பதற்கு நான்கு நான்கு மாடுகளை
இணைத்துக் கட்டி வைக்கோலை மிதிக்க விடுவார்கள்
அதற்கு பொனையல் என்று கூறுவார்கள்
நெல்லில் இருக்கும் பதறை பிரித்தெடுக்க
காற்றடிக்கும் நேரத்தில் நெல்லை
அள்ளி வீசி அழகுபடுத்துவதற்கு
பொலி போடுதல் என்று சொல்வார்கள்
குவித்து வைப்பதற்கு அம்பாரம் என்பார்கள்
மாடுகளில் ஆண்மையுள்ள காளைகளை
பொலி காளை என்பார்கள்
களத்தில் வைக்கோலை காயவைப்பதற்கு
விரித்து விடும் கருவியை ’தொடுகை’
அதாவது தொடுகை கம்பு எனக் கூறுவார்கள்
பாராமல் பேசி ஓராமல் உறவிருந்தான்
என ஊர்ப் பெண்கள் பேசுவதுண்டு
சண்டையிடும் போது கூட உணர்ச்சியில்
உந்திவரும் கொச்சைச் சொற்கள் கூட
எதுகையும் மோனையும் கொண்ட
இனிய கவிதையாகவே தோன்றும்
உவமையும் பழமொழியும் உரையாடும் நிலை
ஊடகங்களைத் தோற்கடித்து விடும்
வல்லமை சாலி வைர சமத்தன் வாய்ச்சாலகன் என
வாளின் கூர்மைபோல வார்த்தெடுப்பார்கள்
இனிதான சொற்களை யெல்லாம் இன்று
இருக்கின்ற கருவிகளுக்கு சூட்டலாம்
தோன்றி வரும் துறைகளுக்கு சூட்டலாம்
தொட்டவுடன் காட்சிகளை தோன்றச் செய்யும்
கணினியின் மவுசுக்கு தொடுகை
எனும் சொல்லைச் சூட்டி மகிழலாம்.
இணையதளம், வலைதளம், வலைப்பூ
குறுந்தகடு, காணொளி, கேட்பொலி,
ஒளி ஒலி நாடாக்கள் என்றெல்லாம்
இன்றைய அறிவியல் கருவிகளுக்கு ஏற்ற
இனிக்கும் சொல்லாக மாற்றி விட்டதுபோல
ஏனைய சொற்களையும் பயன்படுத்தி
புதிய உலகத்திற்கு தமிழை பொருந்தும்
புதிய மொழியாக்க உரியவர்கள்
உழைத்திட முன்வருவது கடமையாகும்.
எங்களின் இனிய ஊரில் இன்று
ஒவ்வொரு சாதியினரும் தனித்தனிக்
குடியிருப்பு வீடுகள் ஏற்றத்தாழ்வின்றி
இரண்டரக் கலந்திருக்கின்றது
சாத்திரங்கள் வேத விதிகள் இதில்
சாக்காட்டில் சங்கமித்து விட்டது
தன்பிழைப்புக்காக தமிழ் தமிழர் வாழ்வியல்
தமிழர் பண்பாட்டுச் சொற்கள், வழிபாடுகளைத்
சிதைத்து சீரழித்து சிறுமைப் படுத்திய
ஆரியப் பார்ப்பனர்களும் அவர்களின்
அடிமைகளாக திகழ்ந்த பல்வேறு
அரசர் சிற்றரசர்கள் பின்னர் வந்த
ஜமீன்தார்கள் புராண இதிகாச கதைகளை
புனிதமெனக் கருதிய ஆரிய அடிமைகள்
ஆகிய அனைவரும் பிறவி மேல் கீழ்
என்று பேதத்தை நிலை நிறுத்தியதற்காக
இன்றைய சட்டப்படி தண்டிக்க வேண்டியவர்கள்
இயலிசை நாடகக் கலை மணக்கும் எங்களின்
எழிலார்ந்த இனிய கூடலூர் காட்டும்
இன்றுள்ள காட்சியும், நிகழ்வும்,
பாராட்டி போற்றி வந்த பழமை லோகம்
ஈரோட்டப் பூகம்பத்தால் இடியுது பார் என்ற
கலைஞரின் கவிதை மொழி கூறும்
தந்தை பெரியாரின் கொள்கை வெற்றி

பெற்றதைக் காட்டுகிறது.

No comments:

Post a Comment