Friday 25 November 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர்

புதிய தலைமுறை புத்தெழில் மலர்
(இது எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டது)

முன்னுரை
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்றார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் அவர்கள்.
ஏதுமற்ற ஏழைக்குடியில் பிறந்து உழைப்பால் சற்று உயர்ந்து என் இரு பிள்ளைகளான உதயமாறன், இதயமாறன் ஆகிய இருவரையும் கலைப்படிப்பு வரை படிக்க வைத்தது மட்டுமல்லாது நான் இதயத்தில் கொண்ட திராவிட இயக்கச் சிந்தனைகளையும் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பேருழைப்பையும் பெருமை, பெருமதிப்பையும் பதிய வைத்தேன்.
அதுபோலவே அறிவார்ந்த இந்த இனமானம் இயக்கம் எனக்குள் பதிந்ததையெல்லாம் உதயமாறன் தமிழ்ச் செல்வியின் அருமைச் செல்வன் அதாவது எனது பேரன் எழிலுக்கும், இதயமாறன் - மைதிலியின் அன்புச் செல்வி அதாவது எனது பேத்தி மதிமலருக்கும் பதிய வைக்கும் முயற்சிதான் இந்த இனிய நூலாகும்.
இது எனது பேரன் பேத்திக்கானது மட்டுமல்ல. இந்த நூலைப் படிப்போர் தங்கள் பிள்ளைகளுக்கும் தங்களது பேரன் பேத்திகளுக்கும் கூறியதாகக் கருதிச் கொள்ளலாம். ஏனெனில் வளரும் தலைமுறைகளுக்குத் தேவையான செய்திகளெல்லாம் இதில் இருக்கிறது என்று கருதுகிறேன். புதிய தலைமுறைப் புத்தெழில் மலர் உங்கள் வழித் தலைமுறையிலும் பகுத்தறிவு மலர்கள் உருவாக வாழ்த்துகிறேன்.

உறவுகளின் வாழ்த்துகள்
வளரும் இமயமாய் வாழ்ந்திட வாழ்த்துவோம்!
அன்பின் எழிலே மதிமலரே - உயிரே எழுக!
இனிதாய் உணர்வை அறிவைப் பெறுக!
கனிவாய் பணிவாய் துணிவாய் ஒளிர்க!
அறமாய் பொருளாய் இன்பமாய் அமைக!
இயலாய் இசையாய் கலையாய் வாழ்க!
எண்ணங்கள் வண்ணமாய் வளர்ந்திடுக!
ஏற்றம் தரும் செயல்களை ஏற்றிடுக!
துன்பங்களை துடைத்திடும் தொண்டுபுரிக!
தூய்மையும் வாய்மையும் தோழமை கொள்க!
எளிமையும் வலிமையும் இதயத்தில் ஓங்குக!
ஏற்றத்தையும் வளர்மாற்றத்தையும் போற்றிடுக!
இலட்சியம் குறிக்கோளை குருதியில் பயிரிடுக!
நலம் பலவாய் பெருகிவரும் வாழ்முறையை அறிந்திடுக!
வளம் குவிக்கும் நல்முறையை வற்றாது குவித்திடுக!
உயர்வின் பாதைகளை ஊருக்கு உரைத்திடுக!
தரணி போற்றும் தமிழ்வாழ வாழ்ந்திடுக!
தாழாத-தாழ்த்தாத மனதைத் தவறாது பெற்றிடுக!
தன்மானப் போர்க்களத்தில் தளராது போரிடுக!
உண்மை எதுவென்று உலகோர்க்கு உணர்த்திடுக!
ஊமைகளை பேசவைக்கும் உணர்ச்சிப் புயலாய் வீசிடுக!
உரிமையை பாதுகாக்கும் உன்னதப் பணிபுரிக!
துள்ளிவரும் வேலாய் துரோகத்தை வீழ்த்திடுக!
ஆவேசத்தை அள்ளிவரும் வாளாய் பகையை சாய்த்திடுக!
உலகம் ஒன்று எனும் உண்மையை உணரச் செய்க!
தமிழர்க்கு என்றும் தன்மான உணர்வூட்டுக!
தளிராய் ஒளிரும் தங்கத் தமிழே! எழிலே! மதி மலரே!
வையம் சிறந்து செழித்து மலர்ந்திட
வளரும் இமயமாய் வளர்ந்திட வாழ்த்துவோம்.
1. வாழ்க
வண்ணக் கலையமுதே!
வாழ்க்கை சீர் அமுதே!
வரலாற்றுப் பேரமுதே!
வாசப் பூ மலரே வருக!
எங்கள் தமிழ் வளமே!
எழிற்பெருங் கலையே!
ஏடு கொள்ளாக் கவிதையே!
எந்நாளும் வாழ்க சிறந்து!
இளங்கோவின் தமிழே!
இலக்கியப் பொருளே!
இன்னிசைப் பெருமழையே!
எழிலமுதே வாழ்க நன்று!
புத்துலகம் பல கண்டு,
புதுமைக் கோலம் பூண்டு,
பூமாலைகள் புகழ் சொரிய,
பெரியாராய் வாழ்க!
அறிவின் தொகை கண்டு,
ஆற்றலின் வகையறிந்து,
அன்பில் நிலை கொண்டு,
அண்ணாவாய் வாழ்க!
சாதனைச் சிகரமாய்,
சரித்திரப் புதுமையாய்,
சங்கத் தமிழ் சீர் கொண்ட
சத்தியக் கலைஞராய் வாழ்க!
தமிழின் வழிநின்று
தகுதிகளில் சிறந்து
பகுத்தறிவுப் பாதையிலே
பார்சிறக்க வாழ்க என்றும்!
பாசத்தை சுமந்து சென்று
பண்பாட்டுக் கொடியேற்றி
பார்போற்றும் சீர்மகனாய்
பைந்தமிழே வாழ்க! வாழ்க!

புதிய தலைமுறை புத்தெழில் மலர் öuõh¸®....


No comments:

Post a Comment