Wednesday 16 November 2016

நாட்டின் நோய் நீக்கிய நாயகன்

நாட்டின் நோய் நீக்கிய நாயகன்
தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும்
நீங்க நிலனாள் பவருக்கு.
என்று தன் நெஞ்சக் கருத்தை திறந்தான் தீதற்றப் போராளன் திருவள்ளுவன். வள்ளுவன் குறள் வழி நடந்த வாய்மை மிக்க பெருவீரனை வரலாறு வாழ்த்திக் கொண்டிருக்கிறது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதற்கேற்ப தனது நாட்டை உயர்வுடைய நாடாக்க ஒல்லும் வகையெல்லாம் சிந்தித்தான் அந்தச் சீராளன். அரசியல், பொருளாதாரம் அது சார்ந்த மக்களின் வாழ்க்கைவளம் மற்றும் மக்களின் எண்ண அலைகளில் மாசற்ற நிலை துலங்க என்னவெல்லாம் செய்யலாம் என எண்ணிப் பார்த்து ஒளிமிகுந்த கருத்துக்­களால் உள்ளத்தில் உறுதி பூண்ட அந்த ஈடில்லா மாமனிதன் ஆட்சியில் அமர்ந்து ஆணைகளை இட்டு அருகில் இருந்த வளமிகு நாடுகளின் வரிசையில் தனது நாட்டையும் இணைத்து இதயம் பூரித்தான்.
புத்தெழுச்சி பூண்டு புதுமையில் குளித்தெழுந்து அறிவியல் முறைகளில் தங்களை ஆழமாக பதிவு செய்து ஆக்கமிகு செயல்களில் ஆர்வம் கொண்டு வளமனைத் இதயம் வாரியனைத்து வானமளவு உயர்ந்திருந்த அய்ரோப்பிய நாடுகளிடையே நோயாளி நாடு என்ற இழிசொல்லை எடுத்தெறிந்து இனிய நிலையை தனது நாட்டிற்கு வழங்கி இதயம் மகிழ்ந்தான். அந்த இணையில்லாப் பெருந்தலைவன். மதவாதச் சிந்தனைகளால், மவுடீக எண்ணங்களால் மடமை பூத்த தன்நாட்டின மக்களின் மனங்கøளை மாற்றி மாசற்ற நிலை காண மகத்தான தொண்டுபுரிந்தான் அந்த வீரன். அய்ரோப்பாவின் வாசல் என்று வர்ணிக்கப்படும் காண்ஸ்டாண்டி நோபிள் என்ற அழகிய நகரமும், இஸ்தான்புல் எனும் எழில் தரும் இனிய ஊரையும் உள்ளடக்கிய துருக்கி அய்ரோப்பாவின் நோயாளி நாடென்று உலகோரால் பழிக்கப்பட்டது. தன்நாடு நலிந்ததற்கு காரணம் மதம் சார்ந்த கருத்துகளில் மக்கள் கொண்ட மயக்கமே என்பதை உணர்ந்தான் உளத்தூய்மை கொண்ட அந்த உன்னத மனிதன்.
ஆட்சியில் அமர்ந்த அந்த அருமைப் பேராளன் நாட்டின் நோய் நீக்கும் நடவடிக்கைகளை எடுத்து அரசின் ஆணைகளை அடுக்கடுக்காய் விடுத்த வண்ணம் இருந்தான்.
உடல் முழுவதும் மூடிநின்ற பெண்களின் கோஷாவை அகற்றச் சொன்னான். ஆண்-பெண் இருவரை ஒன்றாக படிக்க வைக்கும் நிலையை தோற்றுவித்தான். அய்ந்து முறை தொழுவதை மாறிய அறிவியல் முறை சார்ந்த நிகழ்வுகளை நிகழ்த்த வைத்தான். அரசியலையும் மதத்தையும் பிரித்து வைத்தான். பிற அய்ரோப்பிய நாடுகளின் நடவடிக்கைகளை உற்றுநோக்கி அதன் அடிப்படையில் உடனுக்குடன் அரசாணைகளை பிறப்பித்தான்.
துருக்கியில் மதவாத ஆதிக்கம் அடங்கியது. மடமை மறையத் தொடங்கியது மக்கள் மனம் அறிவு மலர்த்தோட்டமாக மாறியது. எல்லாமே அல்லா என்பது போய் எல்லாமே அறிவியல் ஆய்வு என்று மாறியது. அவரவர் பொறுப்புகள் சிறப்புடன் நிறைவேற்றப்பட்டது. புதுமை எண்ணங்கள் பூத்துக் குலுங்கியது. பொருள்கள் மலிந்தது. எங்கும் புதுமை, எங்கும் எழுச்சி என்று துருக்கி ஒளிரத் தொடங்கியது.
ஆட்சியில் இருந்த காலம் வரை ஆக்க பூர்வமான ஆணைகளை  இட்டு துருக்கியின் வளர்ச்சியை தூக்கி நிறுத்தினான் அந்த தூய மகன். அய்ரோப்பாவின் நோயாளி நாடு என்ற துருக்கியின் நிலை அடியோடு மாறியது. எங்கும் புதுமை எழில் கோலம் போட்டது. பிரிட்டிஷ் பிரான்ஸ் செர்மனி போன்ற வளர்ந்த தோற்றத்தில் துருக்கி ஒளிரத் தொடங்கியது. அறிவியல் தந்த அழகுப் பொருள்களெல்லாம் அந்தநாட்டு மக்களை ஆரத் தழுவியது.அரசியல், பொருளாதாரம் ஆட்சிக் கலை விளையாட்டு மற்றும் பலதுறைகளில் மற்ற அய்ரோப்பிய நாடுகளின் வரிசையில் துருக்கி அணி சேர்ந்து கொண்டது. தன் நாட்டின் நிலையறிந்து, உண்மை நிலையுணர்ந்து அந்த நாட்டின் நோய் நீக்கி தன் அறிவு, ஆற்றல், தெளிவு, துணிவு ஆகியவற்றை தூங்காது பயன்படுத்திய மாமனிதன், மாவீரன் முகமது கமால்பாட்சா அத்தார்த்துக் அவர்கள் ஆவார்கள். நாடு எது, அரசு எது என்றெல்லாம் இலக்கணம் சொன்ன வள்ளுவர் விழிநடந்த கமால்பாட்சாவை இன்று உலக் போற்றி மகிழ்கிறது.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

என்ற வள்ளுவன் சொன்னதை அரசில் கடைப்பிடித்ததால் தன் நாட்டின் நோய் தீர்த்த நாயகன் ஆனார் கமால் பாட்சா அத்தார்த்துக் வாழ்க அவர் புகழ்.

No comments:

Post a Comment