Thursday 7 January 2016

பெருமிதம் கொள்ளலாம்

பெருமிதம் கொள்ளலாம்
பேரன்புடையீர், வணக்கம். நலம் சூழ நல்வாழ்த்துகள்.
நாடாளுமன்ற வரலாற்றில் இழிநிலையில் இருந்து திருநங்கைகளை மீட்டெடுக்கும் இலட்சிய உணர்வில் கொண்டுவந்த தங்களின் தனிநபர் தீர்மானம் எதிர்ப்பின்றி ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது என்னைப்போன்ற இயக்க இலட்சியங்களை உடைய இதயங்களை இனிப்பில் குளிக்க வைத்து ஈடில்லா மகிழ்வை உண்டாக்கியிருக்கிறது.
ஆட்சித்துறை அலுவல்களுக்காக படித்துக் கொண்டிருந்த ஓர் இளைஞரை இலட்சிய கொள்கையில் ஈடுபட்ட ஒரே காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் பொது நல உழைப்பாளராக அதிலும் தமிழர் நலம் காக்கும் உண்மைப் போராளியாக ஆக்கிய மிசா சட்டத்தை வேறு பல காரணங்களுக்காக பழித்தாலும் பகைத்தாலும் பாராட்டவே வேண்டும். இதை நினைத்து தாங்கள் பெருமித உணர்வில் திளைக்கலாம்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கின்றபோது எங்கள் குல உறவொன்று குடும்ப அழகுமுகம் ஒன்று ஒளிருவதாகவே உள்ளம் உவந்து மகிழ்கிறது.
திருநங்கை தீர்மான வெற்றிக்குப்பின் நரிக்குரவர் இனத்தை ஆதிவாசிகள் பட்டியலில் இணைத்திட எடுக்கும் முயற்சியும் இனிமையூட்டக் கூடியதாகும்.

நான் தங்களிடம் பரிந்துரைத்த ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான முயற்சியும் மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் சீர்நிலை பெற்று செழுமையுற்று சிறந்திடவும் ஆன முயற்சி தங்கள் திறத்தால் வெற்றிபெற்றால் - வெற்றி பெறும் - என்றால் உலகத் தமிழர்களும் இந்தியப் பிற்படுத்தப்பட்டோரும் எழில் ஏற்றநிலை பெறுவதோடு இன்றல்ல என்றென்றும் தங்களின் புகழ்நிலை ஈடற்றதாக எழில்நிலை கொண்டதாக ஒளிவீசிய வண்ணம் இருக்கும். இந்த இரண்டும் நமது இயக்கத்தின் தூய நிலை கொள்கையல்லவா. ஆகவே இயக்க வரலாற்றிலும் எங்கள் சிவாவின் இலட்சிய முகம் ஒளிரும் ஓவியமாய் நிலைபெற்ற ஆவணமாய் அழியாய் கல்வெட்டாய் நிலைகொண்டிருக்கும். வரலாறு வாழ்த்தியவண்ணம் மகிழ்ச்சி யடைந்திருக்கும்.

No comments:

Post a Comment