Wednesday 6 January 2016

ஏன் இல்லை

ஏன் இல்லை
இந்தியனாக இரு, இந்தியப் பொருளையே வாங்கு என்று இடிமுழக்கமொன்று என்றோ ஒலித்ததுண்டு. ஆனால் இங்கு யாரும் இந்தியனாக இல்லை, இருக்க முடியாத சூழலே நிலவுகிறது.
இந்தியப் பொருளையே வாங்கு என்று இனம் பிரித்துப் பார்த்தால் இருள்நிலையே தோன்றுகிறது. அடித்தள வேளாண்மையிலிருந்து அனைத்துத் துறையிலும் அந்நியம் சார்ந்ததாகவே அமைந்திருக்கிறது. பார்க்கும் கேட்கும் பழகும் முறைகளும் போதிக்கும் முறைகளும் இதுபோலவே இருக்கிறது.
இதற்குக் காரணம் இந்தியா என்று ஒன்று இருந்ததில்லை, இன்றும் இருப்பதில்லை. இந்தியப் பொருள்கள் எதுவும் இங்குள்ள மனிதர்களை ஏற்றத்திற்கு அழைத்துச் செல்லும் ஏணிப்படிகளாக இருந்ததில்லை. இங்கு எதிலாவது புரட்சி ஏற்படுவதற்கு ஏந்துகள் ஏதுமில்லை. அதனால் புதுமைகள் உருவாக்கும் காரணிகள் தோன்றாது போய்விட்டது. புரட்சியும் முகிழ்க்காது முடங்கிக் கிடக்கிறது.
அய்ரோப்பியர்கள் மட்டும் இங்கு வாராதிருந்தால் ஆதிவாசிகளாகவே இங்கிருப்போர் இருந்திருப்பர். இங்கு விடுதலை கிடைத்த இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் முப்பது கோடிப் பேர் மின்சாரம் கிடைக்காமல் இருளில் அடைந்து கிடப்பது போலவே அந்தகாரத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.
இதில் இன்னொரு வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால் படித்தவர்களும் பொதுநிகழ்வில் பங்கெடுப்பவர்களும் இந்துப் பண்பாடு, புனிதம் என்று இடியோசை போல எகிறிக்குதித்து எக்காலமிடுகிறார்கள். இதில் இந்தியா எப்படி இல்லையோ? அதுபோல இங்கு இந்துவும் இங்கே இல்லையென்பதுதான் ஆய்வில் அறிந்த உண்மையாகும். பல்வேறு தேசியம், பண்பாடு, மொழிகள், வரலாறு படைத்து வாழ்ந்த மண்ணில் வந்தேறிகள் வஞ்சகத்தால் நிலைப்படுத்தியதுதான் ஒற்றை இந்தியா, ஒற்றை நாடு, ஒற்றை மதம், ஒற்றை பண்பாடு, ஒற்றை தேசிகம் என்னும் உளறல் மொழியாகும். ஆயிரம் வருடங்களாகவே ஆதிக்கவாதிகளால் அடிமையில் ஆழ்ந்த பகுதி இது. படைபலம் கொண்ட மன்னர்களை மூளைச்சலவை செய்து மனித நேயம், மாண்புகளுக்கு மாறான முறைகளால் உருவானது வேதத்திற்கு பிற்காலத்தில் சொல்லப்பட்ட இந்து, இந்தியா என்ற இரு சொற்களை வைத்துக் கொண்டுதான் இங்குள்ள தன்னலக்காரர்களும், தகுதியற்றவர்களும் தர்பார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வணிகத்தில் மக்களைச் சுரண்டி, கொள்ளையடிக்கும் வல்லமையாளர்கள், இவைகளுக்கு துணை போய் இந்தப் பகுதியை எழில் நலம் பெறவிடாமல் செய்கிறார்கள். அறிவியலை ஆய்ந்தறிந்து உணர்வில் உத்வேகம் கொண்டு புதுப்புது வடிவங்களைப் படைத்து மக்களை வாழ்விக்கும் முறைகள் சில கூட மக்களுக்காக இல்லாமல் வணிக மன்னர்களுக்காகவே இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆரம்ப காலத்தில் இருந்த அறிவுணர்வு ஆகாயமளவுக்கு இங்குள்ளவர்களை உயரச் செய்திருக்கும். ஆனால் இடையில் செருகியிருந்த இந்தியா எனும் முறையற்ற பதிவுகளால் உலகில் முதல் இடத்தில் இருக்க வேண்டிய இந்தப் பகுதிய இருட்டு நேரத்தில் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த நிலையில் தான் இந்தப் பகுதி இருக்கிறது.

No comments:

Post a Comment