Tuesday 25 August 2015

துயில் நீங்குமா? துயர் தீருமா? தொலைந்து போகுமா தமிழனம்?


தமிழனின் சிறப்பையும் சீர்குலைந்த நிலைமையையும் எண்ணிப் பார்க்கும் போது அளவிலா மகிழ்வும் ஆறாத் துயரமும் நெஞ்சத்தில் நேர் எதிர் நிற்கும் நிலைகாண்கிறோம்.
உலகில் எங்கும் அறிவுத்திறம் பெறாத நாளில் பல்வேறு நிலைகளில் பகுத்துப் பார்க்கும் அறிவின் நிலை ஓங்கி ஆக்கமிகு வாழ்வியல் கோட்பாடுகளை உருவாக்கி வாழ்ந்தவன் முன்னர் வாழ்ந்த தமிழன்.
எழுத்து, சொல் மட்டுமன்றி பொருளுக்கும் இலக்கணம் கண்டு அயவகை நிலங்களை பகுத்து, பிரித்து, பயன் கண்டு, உயிர்களின் இயல்பை ஆறுவகையாகக் கண்டு அய்ம் பொறிகளின் வழியாக உடல் இயக்கங் கண்டு இயற்கையில் இயங்கும் அய்ம் பூதங்களின் செயல்வகையை ஆராய்ந்து காற்று, மழை, பனி, வெயில் என்ற தட்ப வெப்பங்களை வகுத்து வேளாண்மை பெருக்கி வளம் பெற்று முதலில் வாழ்ந்து வரலாறு கண்டவன் தமிழன்.
பத்து பத்தாக கூட்டும் கணித வழித் தசம முறையைக் கண்டான். சைபரை கண்டு பிடித்தான். அறுபது, அறுபது நாட்களாக்கி ஆண்டிற்கு ஆறு பருவம் என்றான். அறுபது ஆண்டுகளில் சுழன்றுவரும் பருவச் சூழல் என்பதையும் தெளிவாக  எழுதி சென்றவன் தமிழன், சூரியனின் உதிர்ப்பில் இந்த பூமி என்றான். ஆற்றை மறித்து அணைக்கட்டும் அறிவியல் திறத்தைப் பெற்றான். வேளாண் வளர்ச்சிக்கான நீர்வழிக் கட்டுமானங்களை உலகம் காணாத வகையில் உருவாக்கி உயர்வுக்கு வழி காட்டினான்.
பல்வேறு புதிய நிலைகளைக் கண்டறிந்த சிந்துவெளித் தமிழன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாய்மரப் படகில் நீண்ட கடற்பரப்பைத் தாண்டி அமெரிக்காவில் குடியேறி வரலாறு படைத்தான்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பல்வேறு இலக்கியங்கள், அய்ம்பெரும் காப்பியங்கள், தொல்காப்பியம், திருக்குறள் என வாழ்வியலின் அறநெறிச் சாரங்கள், மான உணர்வின் உறுதியை நிலை நாட்டும் போர்க் களங்கள் அதில் தன் இன்னுயுரை உவந்து ஈந்து மரபுகளை உருவாக்கி வரலாறு சமைக்கும் மாவீரர்கள் என வாழ்ந்து காட்டியவன் தமிழன்.
அகம், புறம், அறம், பொருள், இன்பம், இயல், இசை, கூத்து, காதல், வீரம், மானம், கருணை, கொடை, ஈவு, தாவு, இரக்கம், எண்சுவை வெளிப்பாடு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகப் பார்வை, மனித உறவு, தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோத்லும் தணிதலும் அவற்றோறன்ன எனும் உளவியல் ஆய்வுப் பொருண்மையின் பார்வையில் புகழ் வாழ்வு வாழ்ந்தவன் தமிழன்.
இனத்தை, மொழியை இழிவு செய்வோர் யாராயினும் பொறுத்துக் கொள்ள முடியாது என போர் தொடுத்து, இமய மருகில் என்றாலும் ஏழு கடல் தாண்டி நின்றாலும் அவர்களின் இடிப்பொடித்துப் போடும் இரும்பனைய உறுதியும் வலிமையும் கொண்டவனாக இருந்தவனும் தமிழன் தான்.
இந்திய மன்னர்கள் எவரும் சாதிக்காததை சாதித்து அதாவது கப்பல் படையமைத்து கடல் கடந்து சென்று பல்வேறு நாடுகளை வென்ற கரிகாலன், இராசராசன், இராஜேந்திரன் போன்ற மாமன்னர்களின் பின் வீரநடை போட்டவன் தமிழன்.
கலை இலக்கியம் காவியம் கண்டு பல்வேறு இயற்கை வளங்களை அரசர்களின் ஆளுமைத்திறம் செழுமைகளை அழகிய கவிதைகளாக வடித்து வாழ்ந்த தமிழனின் வெளிப்பாடுகள் இயன்றவரை அறிவு ஆய்வு சார்ந்ததாகவே இருந்தது.
இயற்கை ஆய்வு, புவியின் இயக்கக் கொள்கை, உயிர்களின் உணர்வுகள், வேட்கை, அரசியல், ஆளுமை ஆகியவை அறிவு, ஆய்வு சார்ந்ததாலே கி.பி. முதல், இரண்டு நூற்றாண்டு வரை இருந்தது என்பது மிகவும் இனிமையானது.
உயர்ந்தது எனப் போற்றப்பட்ட உலக மொழிகளெல்லாம் வீழ்ந்து போன பின்பும் உலக மொழிகளின் தாய்மொழியென உவந்து கூறப்படும் தமிழ் உயிர்ப்புடன், இளமை குறையாத எழிலுடன் மக்கள் நாவில் செழுமையுடன் வழங்கியதை, விளங்கியதை உயர்வாகக் கருதி தமிழ் பேசுவோர் ஒன்றாக ஒருமித்த உணர்வுடன் ஏற்று இனிமை கண்டார்களா எதிரிகளை வென்றார்களா? என்றால் இல்லை யென்பதுதான் உண்மையாக இருக்கிறது.
உறவுநிலை பங்காளிகள் என்று உரைக்கப்படும் சேர, சோழ, பாண்டியர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் (கொல்லும்)  அவலங்கள்தான் வழிநெடுக வரலாறாக வாழ்கிறது. இன்று வரை அது தொடர்கிறது.
சங்க காலத்தைத் தாண்டி தமிழர்கள் சமயங்களின் வழிச் சென்றதால் தன் சுயமரியாதை உள்ளத்தையும், தனி உரிமைகளையும் சிந்தனைத் திறத்தையும் இழந்தார்கள் அல்லது அவற்றின் அவசியத்தை மறந்தார்கள் என்பதுதான் உண்மையாகும்.
தன் தாய் மொழி தந்த அறிவுச் செல்வங்களை ஆய்ந்து அனைத்துக் கொள்ளாது அனைத்தையும் இழந்து அன்னியர் நோக்கமறியாது அவர்களை முழுமையாக நம்பி எடுப்பார் கைப்பிள்ளையானார்கள் தமிழர்கள்.
உரிமை உணர்வில்லாது தனித்திறத்தில் உறுதியில்லாத நிலையில் அரசையும் அதுசார்ந்த அனைத்தையும் அன்னியர்களிடம் பறி கொடுத்தார்கள்.
களப்பிரர், பல்லவர், விஜயநகர அரசர், நாயக்கர்கள், மராட்டியர்கள், இஸ்லாமியர்கள், டச்சு, பிரஞ்சு வெள்ளையர் வடபுலத்திற் கெல்லாம் கடந்த 1900 ஆண்டுகளாக அரசியல் அடிமையாகக் கிடந்தார்கள்.
மானமா! உயிரா? என்றால் உயிரை விடும் தமிழனின் உணர்வு ஒடுங்கி ஊமையாகக் கிடக்கக் காண்கிறோம். அகம், புறம் என்று வாழ்ந்த தமிழன் சமயங்களின் வழியில் இகம்பரசுகம் தேடும் சோம்பேறியாகி விட்டான்.
போர்க்களத்தில் உயிர் விட்டவனின் குடும்பத்தைச் சேர்ந்தோர் அவன் நினைவுக்காக ஒரு நடுகல் நட்டு வழிபடும் வழக்கத்தை கொண்ட தமிழன் சமயங்களால் நிறுவனப்படுத்தப்பட்ட பல் வேறு மதச் சடங்குகளுக்கு உள்ளன. உருவங்களை கூட்டம் கூட்டமாக குவிந்த கொண்டாட்டம் கோலாகலங்களில் மனதை பறி கொடுத்து பதியவைத்து ஆக்கமிகு செயல்களை செய்ய வேண்டிய நோக்கத்தை நிர்மூலப்படுத்தி நிலையற்று நிம்மதியற்று கிடக்கக் காண்கிறோம்.
இன்றைய விஞ்ஞானம் ஒத்துக் கொள்ளும் வியத்தகு செய்திகளை, கருத்துக்களை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நிரூபித்துக் காட்டியவர்களின் வழித் தோன்றல் ஆய்வு நெறிகளை மறந்து ஆகாத கொள்கைகளை யெல்லாம் அணைத்து சுகம் மிக அடைவதைக் காணலாம்.
காவிரியில் கல்லனை கட்டிய கரிகாலனின் வழி வந்த தமிழன் கற்றளிகளில் கண்ணியக் குறைவான கற்பனைக் கதாபாத்திரத்திற் கெல்லாம் சிலை வைத்து சிரம் தாழ்த்திட்ட தமிழன் இன்றுவரை தாழ் நிலையிலேயே இருக்கின்றான்.
என்ன செய்கிறோம் என தெரியாமலே செய்கிறார்கள் என மொழிந்த ஏசுவின் கருத்துக் காட்சியாகத் தமிழர்களை காட்டலாம்.
உலகில் சிறந்த உன்னத நிலைகண்ட தன்மொழியை, தமது முன்னோரின் வரலாற்றுச் சிறப்பை வெளிநாட்டு பெருமக்கள் பேரறிஞர்கள் உணர்ந்து பாராட்டிய பின்னும், போற்றிப் புகழந்த பின்னும் தமிழொடு பிறந்தவன் - இருந்தவன் முழுமையும் உணராத பேதையாகவும் உணரத் தெரியாத ஊமையாகவும், பெரும்பாலோர் கல்வி செழித்த நாளிலும் இருப்பது இதயத்தை வலிக்கச் செய்வதாகும்.
அறிவியல் தந்த ஆயிரம் பொருள்கள் கருவிகளை உணர்ந்து அறிந்து  கையாளும் அறிவு பெற்று வாழ்க்கையை துய்க்கும் நிலையில் தமிழர் உயர்வு பற்றி எண்ணாதிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்களின் நிலை உண்மைத் தமிழ் பற்றாளர்களை தமிழர் உயர்வு பற்றி சிந்திப்போரின் நல்ல நெஞ்சத்தை நடுங்கச் செய்கிறது.
தமிழர்கள் தங்களது அரசியல் உரிமையையும் படை அமைப்பையும் இந்திய தேசியவாதிகளிடம் ஒப்படைத்து விட்டு தங்களின் இனத்தை மொழியை காப்பாற்ற இயலாது தவக்கின்ற நிலையில் கைபிசைந்து கவலையுடன் நிற்கக் காண்கிறோம்.
உளத்தூய்மையுடன் உருவான சோவியத் யூனியனில் இரஷ்ய மொழி ஆதிக்கத்தால் பல்வேறு பகுதிகள் பிரிந்து தனிநாடாகி விட்டதை வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
ஆனால் இந்திய யூனியனில் இந்தி ஆதிக்கத்தை எதுவும் செய்ய இயலாத நிலையில் பல்வேறு தேசியமும், மொழிகளும் நலிவுற்று வருவதை ஆய்ந்து பார்த்தால் அறிந்து கொள்ள முடியும்.
மதவாதப் பின்னணியில் மயக்கமுற்று கிடக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் உரிமை போராட்டங்கள் முளைக்கின்ற போதே அதைக் கில்லி எறிந்து விடும் நிலை நாளும் நடந்து கொண்டே இருக்கிறது.
சனநாயகத் தன்மையில் பல சண்டித் தனங்கள் உருவாகி சல்லிகள் மலிந்து விட்டது என்பது சராசரி அறிவுள்ளவனுக்கு கூட சட்டென்று புரிந்து விடக்கூடும்.
ஆயினும் அந்த சனநாயக மரபுகளை உரிமைகளை காக்கின்ற உணர்வை இங்குள்ள எந்த அமைப்பும் உளத் தூய்மையுடன் கொண்டிருக்கிறதா? துளியும் இல்லை என்பதுதான் உண்மையாகும்.
சனநாயகம் என்பது சமத்துவம், சமநிலை என்பதாகும். அது இங்குள்ள மொழிகளுக்கு இல்லை. தேசிய இனங்களுக்கு இல்லை. மாநிலங்களுக்கு இல்லை ஏன் மனிதர்களுக்கு கூட இல்லை என்பது தான் நிதரிசனமாகும்.
இங்குள்ள சட்டத்தில் சந்து பொந்துகள் நிறைய இருக்கின்றது. சௌகரியத்திற்கு தகுந்தவாறு வல்லமை சாலிகள் வளைத்து கொள்ளும் வழி தெரிகிறது. நீதிமன்றத் தீர்ப்புகள் கூட இடத்திற்கு இடம் நேரத்திற்கு நேரம் நிலை மாறிக் காணப்படுகிறது. நாடாள்வோர் பொருள் வளக் கொள்ளையர்களின் கூட்டாளியாகி விடுகின்ற கொடுமை இங்கே கொடி கட்டி பறக்கிறது.
இந்த நிலையில் இதிகாச எண்ணங்களும் இழிந்த நிலைகளும் இறுகிப் போய்க் கிடக்கின்ற இந்திய துணைக் கண்டத்தில் தமிழர்கள் தங்களைக் காத்துக் கொள்வது என்பது குதிரைக் கொம்பாகும்.
கடந்த கால நிகழ்வுகளை நெஞ்சில் கொண்டு வருவோர்க்கு மேற்காணும் கருத்துத்தான தோன்றும்.
காடுதிருத்தி, நாடாக்கி கழனிகண்டு பயிர் செய்து பர்மாவை வளம் பெறச் செய்த தமிழர்களை அங்கிருந்த எல்லாவற்றையும் பறித்து கொண்டு விரட்டியபோது ஆசியஜோதி என்று அலங்கார வார்த்தையால் அலங்கரிக்கப்பட்ட பண்டித நேரு அவர்கள் பாராமுகமாக இருந்தார். தன் ஆளுமையில் இருக்கின்ற தமிழர் சார்ந்த இனத்தவர் என்ற நினைவு கூட நெஞ்சில் தோன்றாது கண்மூடிக்கொண்டிருந்தார் நேரு பிரான் அவர்கள்.
தங்கள் வாழ்வுரிமைக்காக அறநெறியில் பாடுபட்ட ஈழத் தமிழர்களை சொல்லொணாத் துயர்படுத்தி ஆட்டியவர்கள் சாத்வீகமாக போராடிய அரசியல் கைதிகளை குறிப்பாக மாணவர்கள வெலிக்கடைச் சிறையில் காட்டுமிராண்டித் தனமாக கொன்ற சிங்கள ஆட்சியாளர்களை இந்திய அரசு கண்டித்ததா? இல்லை.
வெலிக்கடை சிறைக்கொலைகளுக்குப்பின் ஈழத் தமிழர்கள் ஆயுதப் போராட்டம் தொடங்கித் தொடர்ந்தபோது இதயத் தூய்மையோடு ஏதும் செய்யாமல் ஏதோ படம் காட்டினார்கள் இந்திராக் காந்தியும் அவரது அருமைச் செல்வனும்.
இந்தி மொழி பேசுவோர் இந்து மதக்காரர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் ஓடோடிச் செல்லும் இந்திய அரசு தமிழர்கள் அனைத்தையும் இழந்து உயிரை போக்கிய சூழலில், தமிழர்கள் செத்த நாளில் கூட ஒரு ஆறுதல்கூட வழங்கவில்லை. இது என்ன தமிழர்கள் இணைந்த இந்திய இறையாண்மை? இது என்ன சனநாயகம்? இது என்ன உலக அரசியல்? இது என்ன நீதி?
ஆனால் ஒரு உண்மை தெரிகிறது. இந்தியா என்பது இந்திய அரசு என்பது இந்திய அரசியல் சட்டம் என்பது இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும் இந்துமதம் என்று சொல்பவர்களுக்கும் மட்டும் தான் என்பதுதான் அந்த உண்மை.
இந்தியாவில் உள்ள மற்ற தேசிய இனங்களும் பிற தேசிய மொழிகளும் என்ன எண்ணுகின்றன என்பது ஒருபுறம் இருக்கட்டும் ஆனால் தமிழர்கள் என்ன நினைக்க வேண்டும் என்று எண்ணுவது நமது கடமையாகிறது
இத்தாலிய சர்வாதிகாரிகளால் அடக்கப்பட்டு பூமிப் பந்து எங்கும் பரந்து சென்ற யூதர்களுக்கு கிறித்துவதத்தை ஏற்றுக் கொண்ட வல்லரசு நாடுகளால் இரண்டாவது உலகப் போரின்போது ஒரு இஸ்ரேல் கிடைத்தது.
யூதர்களைப்போல் சிங்களக் கொடுமையாளர்களால் ஈழத் தமிழர்கள் உலகம் முழுவதும் ஓடினார்கள் ஓடுகிறார்கள் அதே நிலை இந்தியாவில் ஏற்பட்டால் தமிழர்களை காப்பாற்றுவதற்கு நாதியிருக்காது.
சுண்டக்காய் அதிகாரமுள்ள தமிழக அரசாலும் போர்க் குணமில்லாத அடிமைத் தமிழர்களாலும் தங்கள் உரிமையை காப்பாற்றிக் கொள்ள முடியாது. யூதர்களுக்கு இருந்த சூழல் தமிழர்களுக்கு இல்லை. ஆக தமிழர்கள் உலக அனாதையாகவோ அல்லது நாடோடியாகவோ அல்லது கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலத்தில் வதிந்த அடிமையாகவோதான் இருக்கு முடியும். இதற்கு வேறு மாற்று இருந்தால் அறிவுள்ளோரும் ஆண்மையுள்ளோரும் சிந்திக்கலாம். மறுப்பு இருந்தால் சான்றுகளோடு நிறுவலாம். ஆனால் வெறும் நம்பிக்கையை மட்டுமே வெளிப்படுத்த கூடாது.
இந்திய அரசு என்பது இன்றுவரை தமிழர்களுக்கு உணர்வுப் பூர்வமான உறவு உள்ளதாக இல்லை வல்லமை மிக்க சட்டங்களையும் படை அமைப்பையும் கொண்ட இந்திய அரசு மாநில நதி நீர்ச்சிக்கல்களை தீர்க்க முன் வரவில்லை. காவிரி, முல்லை, பெரியாறு, பாலாறு ஆகியவற்றில் தமிழக உரிமைகளை பெற்றுத் தரவில்லை. இந்திய வரலாற்று உண்மைகளை விளக்கும் தமிழ் கல்வெட்டுகளை படி எடுக்காமல் அழிக்கின்ற முயற்சிகள் நடக்கின்றது. பழைய குமரிக் கண்ட கடல் ஆய்வில் மற்ற நாடுகள் காட்டிய ஆர்வத்தில் இந்திய அரசுக்கு அக்கறையில்லை. சிந்து சமவெளியில் இன்னும் தோண்டப் படவேண்டிய பதினாறு மேடுகளை தோண்டினால் மலையளவு அகழ்வாய்பு பொருட்கள் கிடைக்கும் என்கிறார்கள். அதை வெளிப் படுத்தும் வக்கில்லை வகையில்லை வழிதெரியாது என்று சொல்ல முடியாது. உலகநாடுகளின் உதவியை நாடலாம். ஆனால் அதற்குரிய எண்ணமில்லை, இதய சுத்தியில்லை இந்திய அரசுக்கு என்பது தான் இங்குள்ள நிலை.
இந்திய அரசிடமிருந்து, உரிமையைப் பெறுகின்ற உறுதி + ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை. இதையெல்லாம் ஆய்ந்து அறிந்த அய்நா மன்றத்தின் அமைப்பு அடுத்த தலைமுறைகளில் தமிழ் அழிந்துவிடும் என்று அறைந்திருக்கிறது.
ஆதிமனிதனின் நாவிலிருந்து உதிர்ந்து உலகோடு உறவாடிய தமிழில் இன்று வரை அறிவியலை உரைக்கும் ஆக்கமில்லாது இருக்கிறது. பழச்சுளை போல் இனிக்கின்ற தமிழை தமிழ் வளத்தை தமிழ்ச் சுவையை ஏடுகள், இதழ்கள் மேடைகளில் விற்றுப் பிழைப்போரே இங்கு பெருகிவருகின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டு தமிழர்களின் அடிமைத்தழையை அறுத்திட தோன்றிய திராவிட இயக்க நூறாண்டு பிரசாரம் சிறிதளவே சீர்நிலை கண்டிருக்கிறது. மாற்றம், உயர்வு, வளர்ச்சியில்லாமல் உளச்சோர்வும், மனத்தாழ்வும் அடைந்திருக்கிறது.
நோபல் பரிசு பெறும் நாட்டமும் மேதைமையும் தமிழில் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் வழியில் உலகோடு உறவாடும் நிலையில்லை அறிவியலை முழுமையும் விளக்கும் திறமில்லை. தமிழை தமிழர்களே நெஞ்சில் வைப்பதில்லை. நேசிப்பதில்லை. வாழ்க்கை வழித்தடத்தில் அன்னியமே ஆளுகை செய்கிறது. இந்தியா உருவானதற்கு தமிழர்கள் இழந்தது ஏராளம் ஏராளம் என்பது ஆய்வாளர்களுக்கு தெரிந்த ஒன்று தான், அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
திராவிட தேசியத்திற்கு அதன் உரிமைக்காக தமிழர்களின் உயர்வுக்காக அதன் பாதுகாப்புக்க்கா தோன்றிய திராவிட இயக்கத்தின் இன்றைய சின்னமான திமுகவின் தலைவர் கலைஞர் அவர்கள் இந்திய அரசை பல முறைக் காப்பாற்றி நிலைபெறச் செய்தார். 1969-1971-1980ல் இந்திரா காந்தியின் அரசையும்  அடுத்து தேவகவுடா, வி.பி.சிங் அரசையும் அடுத்து குஜ்ரால் அரசையும் அடுத்து வாஜ்பாய் அரசையும் அடுத்து இரு முறை மன்மோகன்சிங் அரசையும் மத்தியில் நிலைபெற உளத்தூய்மையுடன் ஒத்துழைத்தார் ஆனால் அந்தக் கலைஞருக்கும் அவர் சார்ந்த இயக்கத்திற்கு தமிழ் இனத்திற்கும் மத்திய ஆட்சியாளர்கள் காட்டிய அலட்சியம் அநீதி - கொடுமை குற்றங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நாவலந்தீவு எனும் இந்திய துணைக் கண்டத்தை தமிழ் இந்தியா என்றான் தமிழறிந்த அறிஞர் ஒருவன்.
அந்த இனிய தமிழால் தனதிறமையைக் காட்டி புகழடைந்த பாரதி இந்தியாவை ஆரிய தேயம் என்றும் இந்தியத் தாயை ஆரிய ராணி என்று போற்றிப் புகழ்ந்தா பாரதிக்கு மட்டுமல்ல பண்பாட்டுப் படைப்பாளர்கள் அனைவருக்கும் இது ஆரியதேசமென்றே எண்ணுகிறார்கள். ஆரிய அடிமைகளின் உணர்வும் அதுபோலத்தான் உள்ளது இங்குள்ள மொழிகளும் வாழ்வும் வழிபாட்டு காட்சிகளும் கருத்துக்களும் ஆரியம் சார்ந்ததாகவே இருக்கின்றன. ஆரியம் அறிவுக்கு மாறானது என்றாலும் ஆய்வுகளுக்கு விரோதமானது என்றாலும் அறிவு ஜீவிகள் உள்ளிட்ட அனைவரும் ஆரிய மாயையில் மயங்கிக் கிடக்கின்ற நிலை காணலாம்.
இந்த நிலையில் தமிழர்கள் தங்கள் தனித்தன்மையையும் உரிமைகளையும் காப்பது, நிலை நாட்டி காட்டுவது எப்படி? தந்தை பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் தலைமுறை தோறும் தோன்றுவது எங்ஙனம்? ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.
தந்தை பெரியார் அவர்கள் சொன்னது நெஞ்சில் நிலை கொண்டிருக்கிறது. ஆம் அவர் சொன்னார்? இளைஞர்களே உவகளை அழைக்கிறேன். சாவதற்கு அழைக்கிறேன் ஆயிரம் பத்தாயிரம் பேர் போராட்ட களத்தில் செத்தால்தான் தமிழரின் சுயமரியாதையை மீட்க முடியும் ஆகவே வாருங்கள் போராடி புதுமைத் துலங்கச் செய்வோம் உரிமையை, விடுதலையை பெறுவோம் என்றார். பெரியார் வாழ்ந்த நாளில் மூன்று கோடியாக இருந்த தமிழர் கூட்டம் இன்று ஏழு கோடிக்கும் மேலாக பெருகியிருக்கிறது ஆயினும் அவர் வாழ்ந்த நாளில் இருந்த சூடு, சொரணை, சுயமரியாதை, தியாக உணர்வு, பொதுநலத்தூய்மை இன்றில்லை. இந்த நிலையில் தமிழர்களை கூர்ந்து நோக்கி அய்நாமன்ற யுனெஸ்கோ தமிழ் அடுத்தடுத்த தலைமுறையில் அழிந்து விடும் என்று அறைந்திருப்பது சரிதான் என்று எண்ணுவது தவறாகாது என்றே தோன்றுகிறது. உலகில் ஊமையாய்க் கிடந்த பல நாடுகளில் உரிமை விடியல் தோன்றியதைக் காணாமல் விழிமூடி கிடக்கின்ற தமிழன் உரிமைக்கு உயிர் இழப்பானா? இவனை விழிக்கச் செய்ய எத்தனையோ பெரியார் அண்ணா பல் பேராளர்கள் தோன்ற வேண்டும், தோன்றுவார்களா? தோன்றினாலும் தமிழனின் துயில் நீங்குமா?
-மண்வாசனை கொண்ட பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள் இங்கு பாராமுகமாக மத்திய அரசால் ஆக்கப்பட்டிருக்கிறது. இல்லாத இந்திய தேசியத்தை எழுதுபவர்களும் பேசுபவர்களும் இறைபக்தியோடு பார்த்து பரவசமடைகிறார்கள்.
இங்குள்ள விடுதலை உணர்வு கொண்டோர் மாநில உரிமைகளுக்கான இயக்கத் தோழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. நெஞ்சின் நினைவுகளில் நீந்திவரும்.  நெப்போலியனை பற்றிய செய்தியொன்னை எண்ணிப் பார்ப்போம்.
நெப்போலியனின் தந்தை தன்தாய்மண்ணாகிய கார்சிகவை பிரஞ்சின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப் போராடிக் கொண்டிருந்த போது போர்க்களப் பாசறையில் நெப்போலியன் பிறந்தான். பின் வளர்ந்தான். பின் தன் தாயகத்தை மீட்பதற்காகக புதிய போர்முறை பயிற்சிக்காக பார்சுக்குப் பயணமானான். படை பயிற்சியும் பெற்றான், படைத் தலைவன் ஆனான்.
பிரஞ்சுப் புரட்சிக்குப் பின் புரட்சியாளர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி தன்நிலையை வலுப்படுத்திக் கொண்டான். அதற்குப் பின் தன் அன்னை நிலமான கார்சிகாவை மறந்தான். பெரிய நிலப்பரப்பான பிரான்சை ஆளத் துடித்தான்; ஆண்டான். அந்தப் பிரான்சு இன்று வாழ்கிறது. ஆனால் கார்சிகா உரிமையைப் பெற்றிருக்கிறதா? அதிக இடத்தை அதிகாரத்தை ஆள வேண்டுமென்ற அவனது ஆசை தாயகத்தை மீட்காமல் விட்டு விட்டது. அது போல அதிக இடம் அதிகார பலம் என்னும் ஆசையால் இங்குள்ள தேசிய இனங்கள், மொழிகள், மாநிலங்கள் தன்னை இழந்து விடாதா? இல்லாமல் போய் விட்டதா?
இந்தியாவை ஆண்ட காங்கிரசும் பாரதீய ஜனதாவும் தங்களுக்கு உதவியர்களை எப்படி நடத்தியது. உளத்தூய்மையுடன் உதவிய கலைஞரை, கழக ஆட்சியை கழக தோழர்களை எப்படி நடத்தினார்கள்.  ஆட்சிக் கவிழ்ப்பு, மிசாக் கொடுமை, சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டு என்று அடுக்கடுக்கான நன்றி கொல்லும் செயல்கள்.
சமீபத்தில் கழக ஆதரவுடன் மத்தியில் ஆண்ட பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட 2ஜி பெக்ட்ரம் சதியால் தமிழ்நாட்டில் நடந்த நல்லரசை இடம்பெயரச் செய்தது. பாஜ சதியை அறியாமலோ அல்லது அறிந்தோ ஆளும் காங்கிரஸ் அரசு ராஜா மீதும் கனிமொழி மீதும் வழக்கு தொடுத்து கைது நடவடிக்கை எதைக் காட்டுகிறது.
இன்னும் சொல்வதென்றால் உச்ச நீதிமன்றம் எந்த உண்மையும் தெரியாத நிலையில் எந்தவிசாரணையும் இல்லாமல் 2ஜி வழக்கை தானே நடத்துவது என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது? இந்து சமய ஆதிக்கவாதிகள் எங்கும் இருக்கிறார்கள் என்பதுதான்.
அதைவிட மோசம் என்னவென்றால் அந்த இந்துமத அடிமைகளின் உணர்வுகள் இடம் மாறவில்லை என்பதும் அறிவாளர்கள் எழுச்சி மிக்க குரலை ஓங்கி ஒலிக்க மாட்டார்கள் என்பதுதான்.
தந்தை பெரியார் ஒருமுறை சொன்னது உண்மையென்று தெரிகிறது. ஆம் அவர் சொன்னார்; இந்தியாவில் நடக்கின்ற அரசியல் எதுவானாலும் ஆரிய திராவிட போராட்டம் தான் ஆய்ந்து பார்த்தால் அது உண்மையென்று விளங்கும் என்றார். நான் சொல்வது என் எதிரிகளுக்குப் புரிகிறது, என்னைச் சேர்ந்தவர்களுக்கு புரியவில்லை என்றும் சொன்னார். இறுதியாக ஒரு உண்மை தெரிகிறது. “நீராறும் கடலுடுத்த” என்று இனிய தமிழை தன்மானத்தோடு இசைப்போர் கடைசியில் “ஜனகணமன” எனும் சாஸ்திரிய சங்கதிக்குள் சங்கமித்து விடுவார்கள் என்பதுதான் அந்த உண்மை.
மாநில சுயாட்சியை பெற்று வலிமைமிக்க இந்தியாவை மாசற்ற இந்தியாவை உருவாக்க வேண்டிய கட்சிகள் மத்திய அரசின் தொடர்பில் மயங்கிக் கிடக்கக் காண்கிறோம். வணிகத்தனமும், கனிகைக் குணமும் இங்குள்ள பொது மக்களின் தொடர்புகள் கொண்ட ஊடகங்கள் உடமையாக இருக்கிறது. பொழுது கழிந்தால் சரி பொழைப்பு நடந்தால் சரி,  என்று எண்ணுபவர்கள்தான் அனைத்து அரசியல் கட்சிகளின் பொறுப்பிலே இருக்கிறார்கள். அந்தப் பொறுப்பாளர்களை ஒட்டியே கட்சி உறுப்பினர்களும் நம்பி நடைபோட வேண்டியிருக்கிறது. கொள்கை இலட்சியம் அதை நிலை நிறுத்த உழைப்பு தியாகம் என்பதெல்லாம் பெரிதும் இல்லாத நிலையே நிலவுகிறது.
மாநில கட்சிகளின் துணையுடன் ஆட்சி நடத்தும் போதே,  மத்திய ஆட்சியாளர்கள் மாநில துறைகளை, சட்டங்களை அபகரித்துக் கொண்டதை வரலாறு வருந்தி வேதனையுடன் வெளிப்படுத்துகிறது.
இங்குள்ளவர்கள் நடத்த வேண்டிய பல்வேறு துறைகள் நிலைகளை உலகமயமாக்கள் என்ற பெயரில் முதலீடுகள் என்று தனிவுடைமைவாதிகளுக்கு தாரை வார்ப்பது என்பதை பொது உடமை தோழர்களே கூட சாடுவதில்லை. நாளை ஆட்சிப் பொறுப்பில் அன்னியர்கள் அமர்வதற்கு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறலாம் மாநிலங்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று கூறலாம் இதெல்லாம் நடக்காது என்பதற்கு தெளிவான சான்றுகள் இல்லை.
ஆகவே இந்தியா அல்லது இங்குள்ள தேசிய மொழிகள் இவைகள் வாழ்வும் வளமும் வேண்டுமென மத்திய அரசின் சட்டமும் நிர்வாக நடைமுறையும் நிலைப்படுத்தவும் நேர்செய்யவும் வேண்டும்.
தேர்தலில் விகிதாச்சார முறையும், பொதுத்துறையில் மூலப் பொருள்களையும் மொத்த வணிகத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். வெளியுறவுத்துறையும் எல்லா மாநிலங்களையும் தொடர்பு கொள்ள வேண்டிய தபால் தந்தி இரயில் படைப்பிரிவு  வானூர்த்தி நிறுவனங்களும் அறிவியல் தொழில் துறை ஆகிய அனைத்தையும் மத்திய அரசுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்றலாம். மத்திய நிர்வாகத்தில் அனைத்து மாநிலத்திற்கும் சமஉரிமை வழங்கி பொறுப்புகளை சுழற்சி முறையில் வழங்குவது சிறப்பானது. இப்படி இருந்தால் தமிழினம் நிலைக்கும். இந்தியாவும் இருக்கும் என்றார் அண்ணா.
தமிழர்கள் தங்களின் நிலப்பரப்பை இழந்தார்கள். வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என தமிழ் கூறும் நல்லுலகம் என்பதை திருப்பதியிலிருந்து என்று பொருள் புரிந்த கொண்டது தவறாகும். வடவேங்கடம் என்பது மலை அல்ல. அது வெப்பம் மிகுந்த நிலம் என்கிறார் அறிஞர் த.ப.அறவாணன் வேங்கட மலைதாண்டி (விந்திய மலை தாண்டி) தார்பாலை வனநிலந்தொட்டு இருந்த எல்லை வட வேங்கடமாகும். தமிழின் திசைமொழிகள் இந்தியா முழுவதும் இன்னும் பேசப்படுகின்றன.
தனக்கு உரிமையுள்ள தாய்மண் உறவு மொழிகளையெல்லாம் பிரிந்து இழந்து மறந்து விட்ட தமிழன் தனது தூய தாய்மொழியைக்கூட குறைபடுத்தி - கொச்சைபடுத்தும் நிலை காண்கிறோம்.
தன் இருப்புகளை இழந்து உணர்வில் ஏழையாகி விட்ட தமிழனை யார் காப்பாற்றவது? இருக்கின்றவரை இரந்து வாழும் தமிழனை எழுச்சிக் கொள்ள வைப்பது யார்? உறங்கும் தமிழனை எழுப்புவது யார்? பெரியார் அண்ணா ஆகியோர் இயன்ற அளவில் எண்ணத்திற்கு வலிமையூட்டினார்கள். கலைஞர் அவர்களால் கல்வி உள்ளிட்ட புற நிலை வளங்கள் பொருள்நிலை உயர்வு பெருமளவுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் தமிழன், தன்னல உணர்வால் தலைக்கனத்தால் இன உணர்வை மொழி உணர்வை மறந்து எல்லாம் இழந்து விட்டபின் அவர்களுக்கு உதவிட உலகில்  பல்வேறு ஆதரவு நிலை தோன்றுவது போல் தோன்றினாலும், மொத்தத் தமிழினத்தின் உரிமை நலன்களை தமிழர்களின் உயிர்களை காப்பதும், அழிப்பதும் இந்திய அரசையே சார்ந்திருக்கிறது.
தமிழன் எங்கு வாழ்ந்தாலும் அவன் துயர் துடைப்பது மத்திய அரசின் கடமையும் பொறுப்புமாகும் ஆனால் இந்திய அரசியல் வாதிகளும் அதிகாரவர்க்கமும் ஏற்படும் அரசுகளின் நோக்கமும் தமிழர்களை அழிப்பதுதான் என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது, உணர்வுப்பூர்வமாக தமிழர்களை காக்க முனையாத இந்திய அரசை தமிழர்களுக்கு உறவாக மாற்றுவது யார்? தலைவர் கலைஞர் அந்த முயற்சியில் இருக்கிறார் என்றாலும் தமிழர்கள் ஒற்றுமையாக அவரை ஆதரிக்கும் நிலை இல்லை. ஆகவே எதிர்காலத்தில் இந்தியாவி“ல தமிழர்களின் வாழ்வுக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமோ உறுதியோ இல்லை. இருக்காது என்றுதான் ஒட்டுமொத்த தமிழர்களும் எண்ணி இயங்குவது உரிமைச் செயலாகும் உண்மை நிலையும் உன்னதக் கடமையாகும்.
அத்துடன் இனவழி மொழி உறவு கொண்ட தென்னிந்தியர்களின் ஆதரவைப் பெறுவது இன்றியமையாததாகும்.
அதற்கடுத்து இனி பிறக்கின்ற ஒவ்வொரு தமிழனையும் ஆதிக்கம் எது? அடிமைத்தனம் எது? தன் உரிமை எது? தன் கருத்து வாழ்வியல் முறை எது என்று போதித்து உறுதிமிக்க ஒரு போர் வீரனாக வளர்ப்பது தமிழனின் கடமை என்று உணர்தல் அவசியம். அறிவுக்கூர்மை தோன்றாதவரை, ஆதிக்கம் உணர்வு அழியாதவரை, ஆரியம் அகலாதவரை தன்மானம் தழைக்காது, தமிழன் நலன் செழிக்காது.
தமிழ், தமிழனம், தமிழர்கள் மீது நடந்த படையெடுப்புகள் போர்கள் இன்றுவரை அடுத்துக் கெடுக்கின்ற அநியாயம் போன்ற நிகழ்வுகள் வேறு எந்த இனத்திற்கும் மொழிக்கும் நடந்ததில்லை நடக்கவில்லை என்பது வரலாற்று உண்மை.
அதனால்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இங்குள்ள தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி எதிரிகளின் எண்ணத்தை அறிந்ததால்
எங்கள் பகைவர் எங்கோ மறந்தார் என்று ஓங்கி அறைந்தார். அதுபோலவே இங்குள்ள தமிழர்களின் பாதுகாப்புக்காக ஒரு மிகச் சிறந்த பாடலை இயற்றி நமக்கு வழங்கியிருக்கிறார். அது இதோ:
வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
உலகாளஉ னதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்:
உதவாதினி ஒரு தாமதம்
உடனேவிழி தமிழா!
கலையேவளர்! தொழில் மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள் சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதி நூல்விளை! உயிர் நூல்உரை
நிச நூல்மிக வரைவாய்!
அலைமா கடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடம் விதமேயுன
ததிகாரம்நி றுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா!
இலையே உணவிலையே கதி
இலையே எனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!
இந்தப் பாடல் வரிகளை தமிழனத்தைச் சார்ந்தோர், சேர்ந்தோர் உறவுகளுடன் ஒட்டி வாழ்வோர் வரி வரியை உணர்ந்து உள்வாங்கி திட்டமிட்டு செயல்பட்டால் ஒழிய  யுனெஸ்கோ கூறும் காலத்திற்கு முன்னமே தமிழும் தமிழினமும் உலகில் இல்லாது ஒழிந்து விடும்.
ஆகவே துயில் நீங்குமா? துயர் தீருமா?

தொலைந்து போகுமா தமிழனம்?

No comments:

Post a Comment