Friday 15 August 2014

கலைஞரோவியம்!

பகுதி 1

தமிழர்கள் வாழ்வில் இதுவரை கண்டிராத வளங்களைப் பெற்றிருக்கிறார்கள். கல்வியில் எல்லையில்லா உயரத்திற்கு சென்றிருக்கிறார்கள். வீடு, வாசல், வண்டி, வாகனம், உணவு, உடை, உறைவிடங்களில் உயரிய நிலையை எய்திருக்கிறார்கள். பட்டாடைகள், அணிமணிகள் அணிந்து விழாக்களுக்கு வருகின்ற தோரணையே பெரும்பாலும் தமிழர்களின் பெருமையை விளக்குவதாக இருக்கிறது.

மிக மிக எளிமையாக நடந்த ஏழை வீட்டுத் திருமணங்களைக் கூட மண மண்டபங்களில் நடத்தி மகிழ்வடைகிறார்கள். காரணம் எல்லாரிடமும் பணம் புழங்குகிறது. அன்றாடங்காய்ச்சி மனிதன் கூட தன் பிள்ளைகலை அழகு படுத்தி ஆங்கிலப் பள்ளிகளில் படிக்க வைக்க ஆசைப்படுகின்ற நிலை கொள்கிறான்.

இங்குள்ளோர் எடுக்கின்ற நிலைகள் இயற்கைக்கோ, அறிவியலுக்கோ உகந்ததாக இல்லையென்றாலும் உள்ளத்திலே ஆசைகள் கொள்வதற்குக் காரணம் புறக்காட்சி போதனைகள் மற்றும் பொருளாதார மேம்பாடுதான் என்பதை உணர முடியும்.


Ø  தமிழர்களின் வாழ்வில் மிகுதியான வளம் சேர்ந்தது எப்போது?

Ø  எல்லா நிலைகளிலும் ஏற்றம் கண்டது எப்போது?

Ø  வரலாற்றில் என்றுமில்லாத எழில் வாழ்வை அடைந்தது எந்தக் காலத்தில்?

Ø  அதுவும் பெரும்பான்மையினராக வாழும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பல்வேறு நிலைகளில் உயர்நிலை கண்டது எப்போது?

Ø  அன்றாட வாழ்வில் எந்த நேரத்திலும் எழிலோடு திகழ வேண்டுமென்ற இதய எண்ணம் தோன்றியது எப்போது? எப்படி? யாரால்?

Ø  கூனிக்குருகி, கும்பிட்டு, கை கட்டி நின்று காலில் செருப்பின்றி, தோளில் ஒரு துண்டின்றி தாழ்ந்த நிலையில் தளையை மாட்டி நின்றவரெல்லாம் ஏற்ற நிலை கண்டு, ஏறு நடை போட்டு, நேர் நின்று, நிமிர்ந்து பார்த்தது எப்போது? எப்படி? யாரால்?

Ø  காலுக்கு செருப்பில்லை, கால் வயிற்றுக் கஞ்சியில்லை, வீணுக்கு உழைத்தோமடா தோழா, கூலுக்கு அலைந்தோமடா தோழா! என்ற பொதுவுடைமைக் கவிஞனின் வேதனை தீர்த்து உழைப்பவர் வாழ்வில் உயர்வு கண்டது மட்டுமின்றி மேலும், மேலும் வளர்ச்சி காணும் மன ஊக்கத்தை பெற்றது யாரால்? எவ்வாறு?

Ø  பஞ்சடைத்த கண்கள், பரிதவிக்கும் முகங்கள், பாடுபட்டும் பயன் காணா சமூகப் பாதகம், உழைத்த கூலியைக் கூட உருப்படியாய் பெறமுடியாத அவலம் நிறைந்த நிலையிலிருந்து விடுபட்டு உழைப்பவர்களின் உரிமையை நிலை நாட்டி, அவர்களின் உயர்வுக்குரிய சூழலை உருவாக்கியது யார்? எப்போது

Ø  உழுதவன் கணக்குப் பார்த்தால் தார் குச்சியும் மிஞ்சாது என்ற பழ மொழியை மாற்றி அந்த விவசாயியின் வீடும், வாசலும், வாழ்வும் வளம் செழிக்கவும், எழில் கொழிக்கவும் வைத்த ஏந்தல் யார்? எந்தக் காலம்?

Ø  வயது வந்த பின்னும் வாழ்க்கையின் இணை கிடைக்க இடையூறாக இருந்த பணத்தை வழங்கி இல்லற வாழ்வில் ஏந்திழையரை இணைய வைத்தவர் யார்? எப்போது? எப்படி?

Ø  மனிதனை மனிதன் சுமந்து செல்லும் கொடுமைக்கு நிகரான மனிதனை, மனிதன் வண்டியில் இழுத்துச் செல்லும் கொடுமையை ஒழித்து, கருவிகளால் இயங்கும் வண்டிகளை வழங்கியது யார்? அதனால் விழைந்த வாகனப் புரட்சி எது? வளர்ச்சி நிலை யாது? அது யாரால்?

Ø  உலக விஞ்ஞானிகள் கண்ட உயர்ரக வித்துக்களையெல்லாம் ஆய்ந்தாய்ந்து அந்த அறிஞர்களின் ஆய்வுரைகளையெல்லாம் பெற்று, தமிழக நிலங்களில் விதைத்து பயிர் செய்து, விளைச்சலைப் பெருக்கி, உணவு புரட்சியை உண்டாக்கி என்றும், எப்போதும், எந்த நேரத்திலும் எல்லாரும் உண்ணுகின்ற இனிய சூழலை உருவாக்கி தமிழர்களை பஞ்சமில்லாத, பட்டினியில்லாதவர்களாக மாற்றியது யார்? பசுமைப் புரட்சி உருவாக்கிய பல்வேறு பயிர்களோடு, பால் மற்றும் முட்டை உற்பத்தியிலும் வெண்மைப் புரட்சியை உண்டாக்கி, இரவு, பகல் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உண்டு, உறங்கும் சூழலை உருவாக்கியது யார்?

Ø  தமிழகம் முழுவதும் சுற்றி வந்தால் சின்னஞ்சிறு ஊர்களிலும் எழிலார்ந்த கட்டிடங்களைக் காண முடிகிறது. கட்டிடக் கலையின் அழகு எங்கும் தன் எழில் காட்டி நிற்கிறது. பல்வேறு  வண்ணங்களால் தன் இல்லத்திற்கு கலை அழகு கூட்டி களிக்கின்ற விழிப்புணர்வு தோன்றியதற்கு யார் காரணம்? அதன் முன்னோடி யார்?

Ø  இன்று சின்னஞ்சிறு கிராமங்களில் இருந்து சுற்றுலா செல்லும் சூழல் நிலவுவதற்கு யார் காரணம்? அடிப்படை எது?

Ø  கோவில் வாசல்களிலும், குளக்கரைகளிலும், வீட்டு முற்றத்திலும் நடந்த ஏழைகள் வீட்டு திருமணங்கள் மண மண்டபங்களிலும், மணி மாளிகைகளிலும், பட்டாடை சரசரக்க, பலவித அணிமணிகள் அணிந்து, ஆரவார மகிழ்வோடு திருமணங்கள் நடக்கிறதே! இதற்கு அடிப்படை யார்? எவர் காலத்தில் இவையெல்லாம் உருவாகிப் பெருகின? ஒர் உதாரணத்தால் விலக்குவதென்றால், எங்கள் ஊரில் இன்று இருபதிற்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் இருக்கின்றன. இந்த மண்டபங்கள் தோன்றி, நிறைவதற்கு காரணமென்ன? அது யாரால்?

Ø  இன்று ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு உடையும் குறைந்தது இருபத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பெருகியிருக்கிறது. இந்த நிலை எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது?

Ø  ஒவ்வொரு வீட்டிலும் கலைப்பொருட்கள், வானொலி, தொலைக்காட்சி, பூந்தோட்டம் என்றெல்லாம் பயன்படு பொருள்கள் நிறைந்த காலம் எப்போது தோன்றியது? யாரால்?

Ø  அகன்ற சாலைகள், அதில் தடையற்ற பயணத்திற்கு உதவும் அழகிய மேம்பாலங்கள், நுகர்வோருக்கு வாகனங்கள் வழங்கிட தொழில் நிறுவனங்களுக்கு ஆக்கமிகு ஆலோசனைகள் அதன் விளைவாய் எப்போதும் சாலைகளில் அடர்ந்து செல்லும் வண்டிகளின் வகைகள், அதில் பயணிப்பதால் ஏற்பட்ட பயன்கள் நிறைந்த காலமெது? யாரால்?

Ø  தனியார் கையிலிருந்த வங்கிகளை நாட்டுடைமை ஆக்கியதற்கு ஆதாரமாய், ஆதரவாய் நின்றது யார்? அதன் பயனால் மக்களில் பெரும்பாலோருக்கு கடனுதவி கிடைத்து வாழ்வில் வளம் பெருகும் சூழலை உருவாக்கியது யார்? எப்போது?

Ø  கல்வி, உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி, தொழில் நுட்பத் துறைகளில் இன்று வளர்ந்து நிலைத்திருக்கின்ற நிலைகளுக்கு யார் காரணம்? ஏராளமான கல்வி நிறுவனங்களை உருவாக்கி எல்லாரும் படிப்பதற்கு கல்லூரி வரை இலவசக் கல்வி தந்து இங்கொரு கல்விப் புரட்சியை உருவாக்கியது யார்? எப்போது?

Ø  எல்..சி. கட்டிடமும், லைட் அவுசும் மட்டுமே சென்னையின் நூதனமாக இருந்ததை மாற்றி, எங்கு நோக்கினும் வானுயர்ந்த எழில்மிகு கட்டிடங்களைக் கட்டி, நாட்டுக்குழைத்தவர்களின் பெயர்களை சூட்டி, கவின்மிகு நகராக சென்னையை மாற்றியது யார்? எப்போது?

Ø  தமிழ் நாட்டில், மூலை முடுக்குகளில் இருக்கின்ற பட்டி, தொட்டிகளிலெல்லாம் தார்ச் சாலைகளும், மின்சாரமும், மினி பஸ்களும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளும், தெருவெல்லாம் தண்ணீர் குழாய்களும், தந்து நகரத்தின் தோற்றத்தை அந்தக் கிராமங்களுக்குத் தந்தது யார்? அந்தக் கிராமங்களுக்கு அளித்த பல்வேறு நலத்திட்டங்களோடு இடஒதுக்கீட்டின் வழியாக மருத்துவராய், பொறியாளராய் ஆவற்கு தனி இடஒதுக்கீடு தந்தது யார்? கிராமப் பொருளாதார வளர்ச்சிக்காகவே உழவர் சந்தைகளை உருவாக்கி, ஓர் இனிய உயரிய, உன்னத நிலையை உருவாக்கியது யார்?

இதுபோல் பலப்பலவாக தமிழகம் அடைந்த வளர்ச்சி, நன்மைகளை பட்டியலிட்டு பல்லாயிரக்கணக்கான கேள்விக்குறிகளை அடிக்கிக் கொண்டே போகலாம்.

அத்தனை வினாக்களுக்கும், இரண்டே சொல்லில் விடை கூறி விடலாம். அதுதான் கலைஞர்-அவருடைய பணிகள்.

ஆம், அவருடைய சமூகத் தொண்டு, தமிழர் வளம்பெற அவருடைய அறிவு, ஆற்றல், திறன் பயன்பட்ட விதம் ஆகியவை ஆராய்ச்சிக்குரிய மர்மங்கள் அல்ல. சராசரி அறிவு படைத்தவனும், சாதாரணமாகப் பார்த்து, புரிந்து கொள்ளும், கண்முன் நடந்த, நடக்கின்ற காட்சிகள் தான்.

சமூக விழிப்புணர்வுக்காக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய தலைவர்களை நெஞ்சில் கொண்டு அவர்தம் கருத்துக்களையும், கொள்கைகளையும், தமிழர்களிடம் தருவதற்கு அவர் உழைத்த உழைப்பு, தியாகம், ஈடற்றது. அண்ணாவின், அறிவில் முகிழ்த்த, அருமை திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்க்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள், மக்களிடம் இந்த மகத்தான கொள்கை கொண்ட இயக்கத்தை பதிக்க, அவர் மேற்கொண்ட கலை வடிவங்கள், கணக்கற்ற விளக்க நிகழ்வுகள் இவைகள் இன்றைய தமிழரின் வாழ்விற்கு முதன்மையாய், முன்னோடியாய் இருந்தது என்பது முழுமையான உண்மையாகும்.

கழகம் ஆட்சியில் அமர்ந்திட கலைஞரைப் போல் கடுமையாக உழைத்தவர்கள் யாருமில்லை என்பதால் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், தம்பி! ""பதினோரு லட்சம்'' சைதாப்பேட்டையில் பேட்டையில் போட்டியிடுவார் என்று கலைஞர் மீது தனது செல்லத்தை சிந்தினார்.

தமிழரின் நலம், வளம் ஆகியவற்றை மைய இழையாகக் கொண்டு, தன் சிந்தை நேய்யும் கருத்துக்களை செயல்படுத்துவதில் தன்னிகரற்ற தொண்டினை தமிழர்களுக்கு ஆற்றினார் என்பதை யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

ஒரே ஓர் முறை தமிழகத்தை சுற்றி வாருங்கள். வந்தபின் கலைஞரது நிதிநிலை அறிக்கைகள் மீது கண்பதித்து மிகக் கவனமாக தமிழகக் காட்சிகளை அந்த நிதிநிலை அறிக்கையோடு இணைத்து தேதிவாரியாக வரிசைப்படுத்துங்கள். உங்கள் நெஞ்சம் என்றுமில்லாத, எல்லையில்லா மகிழ்வைப் பெறும்.

இனிமையை, இன்பத்தை பூக்க வைக்கும், எழில் தோட்டமாய் உங்கள் உள்ளம் உவகை கொள்ளும். தரிசு நிலங்கள் எங்கும், பசுமை கொஞ்சும் விளைநிலங்களாக மாறியிருக்கும். ஏரி, குளம், கண்மாய் பெருநிலங்கள் பச்சை, பட்டாடை போர்த்தி பசுமை குலுங்க காட்சி தரும்.

பொட்டல் நிலங்களிலெல்லாம் புதுமை மாளிகைகள் தோன்றியிருக்கும். நினைவுச் சின்னங்கள், மாவட்ட ஆட்சியர் வளாகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையஙகள், கல்லூரி கட்டிடங்கள் நீதியை நிலைநாட்டும் நீதிமன்றங்கள் ஆகிய கவின்மிகு கலைக்கூடங்கள் உருவாகியிருக்கும்.

இவ்வளவு அகன்ற சாலைகளை தமிழன் எந்தக்காலத்தில் கடந்து சென்றான் என்று எண்ணுமளவிற்கு, ஒளிவடிவம் கொண்ட சாலை ஒவ்வொன்றிலும், தமிழன் பவனி வருவதைப் பார்க்கின்ற போது அதை உருவாக்கி, சாலைப் பணியாளர்களால் பாதுகாத்த கலைஞரை நினைத்து களி கொள்ளும் நிலையடைந்து இதயம் மகிழும்.

1973 வரை தொழில் நிறைந்த எங்கள் ஊரில் (இராசபாளையம்) ஆறேழு கார்களே இருந்தன. இன்று வீட்டிற்கு வீடு பல கார்கள் இருக்கக் காண்கிறோம். கார் நிறுத்த இடமில்லாதவர்கள் கூட தெருவில் காரை நிறுத்தி வைக்கும் நிலை காண்கிறோம். எல்லாரும் எல்லாம் பெறும் இந்த நிலை கலைஞரின் நிதி நிலைகளுக்குப் பின்னரேதான் தோன்றியது. காங்கிரசின் 300 கோடி பட்ஜெட்டை .தி.மு..விடம் வழங்கும் போது 25000 கோடியாக ஆக்கித் தந்தவர் கலைஞர் என்பதையும் நெஞ்சில் கொண்டால் தமிழகத்தின் எழிலோவியக் காட்சிகள் யாரால் என்பதை உணர முடியும்.

நாத்திகர் என்றாலும், ஆட்சி அனைவருக்கும் பொது என்பதால், ஆலயங்கள் அழகொளிர்ந்ததாக அவரால் ஆனதை அறிந்து மனம் மகிழும். இறை நம்பிக்கை தனக்கு இல்லையென்றாலும், அதை நம்புகின்ற அர்ச்சகர்களை வாழவைக்க வழிசெய்தவர் என்ற நிலை எண்ணி நல்ல நெஞ்சங்கள் நாளும் நன்றி சொல்லும்.

தமிழர்களின் முகத்தை, மனதை, உள்ளத்தை, ஊடுருவிப் பாருங்கள். அவர்களின் நடை, உடை, பேச்சு, முறைகளை உற்றுப் பாருங்கள். அது கலைஞரின் திரைப்படங்களும், உரையாடலும் வார முன்னர் எப்படி இருந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்.

பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் வாழ்க்கைப் பாதையிலே படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன.

தென்றலைத் தீண்டியதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன் 

வட்டமிடும் கழுகு வாய் பிளந்து நிற்கும் ஓநாய் நம்மை வளைத்து விட்ட மலைப்பாம்பு.

கிரேகத்தின் கீர்த்தி புவனம் அறியாததல்ல அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறலை மறைப்பது புண்ணுக்கு புணுகு தடவும் வேலையைப் போன்றது.

அடடா... இந்த உரையாடல் விழுந்த செவிகளின் சிந்தை சிலிர்த்ததை இளைஞர்களிடம் ஏற்பட்ட மாற்றம், மகிழ்ச்சியை எண்ணிப் பாருங்கள். இதயம் குளிரும்.

கையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி நல்ல தமிழ் பேசுகின்ற நிலையே இதன் பின்னரேதானே தோன்றியது.

நாகரீகம், நளினம், அழகு, அழுத்தம் கொடுத்துப் பேசுகின்ற சூழல் கலைஞரின் குணசேகரன், மனோகரன், பாண்டியன், பரந்தாமன், ராஜா, பத்மாவதி என்ற பாத்திரங்களினால்தான் நாட்டில் உருவானது.

தமிழ் நிலத்தின் ஒவ்வோர் பகுதியையும் உற்றுப் பாருங்கள். இன்றைய எழிலை இதயத்தில் பதியுங்கள். அண்ணாவின் தம்பி, கலைஞரின் ஆட்சிக்கு முன்னிருந்த நிலையை முற்றாகத் தெரிந்து, தெளிந்து உண்மையை உள்ளத்தில் உறைய வைத்து உணர்ந்து பார்த்தால், ஏழு வண்ணங்களால் எழில் பூத்த ஓவியமாய் என் சுவை வெளிப்பாடாய் அமைந்த காவியமாய், ஏழு சுரங்களால் உருவான இசைக் கோலமாய், தமிழகம் ஆகியிருப்பதை கலைஞரின் இதயத் தூய்மையால், எண்ணச் செழுமையால் அறிவு, ஆற்றல், திறன், உழைப்பு, தியாகம், திட்டம், செயல், கழக உள்ளம், தன் தலைவர்களை மறக்காத மனம் ஆகியவற்றால் உருவாகியிருப்பதை உணரமுடியும்.

எதிர்கால வரலாற்று ஆசிரியர்கள் தமிழகத்தை எழுதுகின்றபோது ""தமிழ்நாடு'' என்பதற்கு மற்றொரு பெயர் வைக்க விரும்பினால் ""கலைஞரோவியம்'' என்றே வைப்பார்கள். வைக்க வேண்டும். வைத்தால்தான் அவர்கள் உண்மையான வரலாற்று ஆசிரியர்கள். ஏனெனில், கலைஞர் காலத்தில்தான் தமிழகம் ஒவியமாய் உருவானது. ஒளிர்ந்தது என்பதை உணர்ந்து எழுதிட வேண்டும்.


No comments:

Post a Comment